யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கேரள அரசு PM-SHRI திட்டத்தில் இணைய ஒப்புக்கொண்டது உண்மைதான். ஆனால், உடனடியாக அந்த முடிவை திரும்ப பெற்றுக்கொண்டது.
பரவிய செய்தி
”PM-SHRI திட்டத்தில் இணையும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கேரளா அரசு கையழுத்திட்டு அந்த திட்டத்திற்காக நிதியை வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்” - அண்ணாமலை
விரிவான விளக்கம்
கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி தமிழ்நாட்டின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2026-27ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அது குறித்து பல்வேறு கட்சியினர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, PM-SHRI திட்டத்தில் தமிழ்நாடு இணையாமல் இருப்பதை குறிப்பிட்டு, ’PM-SHRI திட்டத்தில் இணையும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கேரளா அரசு கையழுத்திட்டு அந்த திட்டத்திற்கான நிதியை வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்’ என்று கூறினார்.
உண்மை என்ன?
’PM-SHRI’ திட்டத்தில் கேரள அரசு இணைந்தது குறித்த செய்திகளைத் தேடினோம். ‘The Indian Express’ செய்தித்தளத்தில் இது குறித்து வெளியாகியிருந்த செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.

2025 அக்டோபர் 28ஆம் தேதி வெளியாகியிருந்த அந்த செய்தியில், ‘இது வரை PM-SHRI திட்டத்தில் இணைவதை கடுமையான எதிர்த்து வந்த கேரளா, அந்த எதிர்ப்பை கைவிட்டு, ’PM-SHRI’ திட்டத்தில் இணைந்துகொள்ள ஒன்றிய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ‘இவ்வாறு ’PM-SHRI’ திட்டத்தில் இணைய கேரளா அரசு ஒப்புக்கொண்டதை எதிர்க்கட்சியான காங்கிரஸ் மட்டுமல்ல, CPI (M) தலைமையில் ஆளும் இடது ஜனநாயக கூட்டணியில் (LDF) அங்கம் வகிக்கும் CPI கட்சியும் கடுமையாக எதிர்ப்பதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கேரளாவில் ’PM-SHRI’ திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது குறித்த செய்திகளை தேடியபோது, ‘The News Minute’ செய்தித்தளத்தில் வெளியாகியிருந்த செய்தியைக் காணமுடிந்தது. அதில், ‘PM-SHRI’ திட்டத்தை செயல்படுத்துவதற்கான முன்னெடுப்புகளை நிறுத்தி வைக்குமாறு 2025 நவம்பர் 12ஆம் தேதி கேரளா அரசாங்கம் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.
இதிலிருந்து, கேரள அரசு ’PM-SHRI’ திட்டத்தில் இணைய ஒப்புக்கொண்டாலும், கூட்டணி கட்சியின் எதிர்ப்பை கணக்கில் கொண்டு உடனடியாக அந்த முடிவை கைவிட்டுள்ளது தெரிகிறது.
முடிவு:
’PM-SHRI’ திட்டத்தில் இணைய கேரள அரசு ஒப்புக்கொண்டது உண்மைதான். ஆனால் கேரள அரசு இந்த முடிவை திரும்ப பெற்றுக்கொண்டது. தற்போது கேரளாவில் ’PM-SHRI’ திட்டம் நடைமுறையில் இல்லை.