யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் படி, தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் கீழ், 2021ஆம் ஆண்டு 6064 வழக்குகளும், 2022ஆம் ஆண்டு 6580 வழக்குகளும், 2023ஆம் ஆண்டு 6968 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசத்தில் 2021ல் 19,173 வழக்குகளும், 2022ல் 20,415 வழக்குகளும், 2023ல் 22,393 வழக்குகளும் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிராவில் 2021ல் 17,261 வழக்குகளும், 2022ல் 20,762 வழக்குகளும், 2023ல் 22,390 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
பரவிய செய்தி
தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 62,000 நடந்துள்ளன என்று பொய் பரப்பும் அன்புமணி!

விரிவான விளக்கம்
காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளருக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது
தமிழ்நாட்டில் 62,000 குழந்தைகள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
"திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பும் இல்லை, மரியாதையும் இல்லை.." - அன்புமணி பேச்சு#Kanchipuram | #NDAlliance | #ElectionCampaign | #Anbumani | #PolimerNews pic.twitter.com/zVkcwGTCDI
உண்மை என்ன?
பரவி வரும் இந்த தகவல் குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது 2021 முதல் 2023ஆம் ஆண்டு வரைக்கான தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளை பார்க்கமுடிந்தது. அதில் தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் கீழ், 2021ஆம் ஆண்டு 6064 வழக்குகளும், 2022ஆம் ஆண்டு 6580 வழக்குகளும், 2023ஆம் ஆண்டு 6968 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது அன்புமணி தெரிவித்த எண்ணிக்கைக்கு முற்றிலும் மாறாக இருந்தது.

மேலும் அந்த NCRB தரவுகளில், பாஜக ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசத்தில் 2021ல் 19,173 வழக்குகளும், 2022ல் 20,415 வழக்குகளும், 2023ல் 22,393 வழக்குகளும் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிராவில் 2021ல் 17,261 வழக்குகளும், 2022ல் 20,762 வழக்குகளும், 2023ல் 22,390 வழக்குகளும் பதிவாகியுள்ளன. உத்தர பிரதேசத்தில் 2021ல் 16,838 வழக்குகளும், 2022ல் 18,682 வழக்குகளும், 2023ல் 18,852 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
முடிவு:
ஆக NCRB தரவுகள் இப்படி இருக்க, தமிழ்நாட்டில் தான் சிறார்கள் மீதான குற்றங்கள் அதிகம் நடந்திருப்பதாக அன்புமணி தவறான தகவலை பரப்பி வருகிறார்.