யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆட்சியின் போது திறக்கப்பட்ட இந்த பேருந்து முனையத்தை பாஜக ஆட்சியில் திறக்கப்பட்டதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
மிக நவீனமான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையத்தை காட்சிப்படுத்தும் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, ”விமான நிலையத்திற்கு ஈடான கட்டமைப்பைக் கொண்ட இந்த பேருந்து நிலையம் பாஜக ஆளும் மாநிலமான ஒரிசாவில் கட்டப்பட்டுள்ளது. இது தான் பாஜகவின் சாதனை” என்று தமிழ்நாடு பாஜகவின் தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்தவர் பரப்பி வருகிறார்.
#பாஜக ஆளும் ஒரிசா வின் பஸ் ஸ்டான்ட் பாருங்கள்....
நம் ஊர் ஏர்போர்ட் மாதிரி உள்ளது..,.🔥🔥🔥#BJP4ViksitBharat pic.twitter.com/EO11kOVMhs
உண்மை என்ன?
ஒரிசாவில் புதியதாக திறக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம் பற்றி இணையத்தில் தேடியபோது, ‘The Times of India’ செய்தித்தளத்தில் 2024 மார்ச் 2 அன்று வெளியிடப்பட்டுள்ள செய்தியை காணமுடிந்தது. அதன்படி, ‘பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பேருந்து முனையத்தை’ முதல்வர் நவீன் பட்நாயக் திறந்து வைத்ததாக தெரியவருகிறது. பரப்பப்படும் வீடியோவிலும் ‘பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பேருந்து முனையம்’ என்ற எழுதப்பட்டுள்ள பெயர்ப்பலகையை காணமுடிகிறது.
இதிலிருந்து பரப்பப்படும் வீடியோவில் குறிப்பிடும் அதிநவீன கட்டமைப்பு வசதியுள்ள பேருந்து நிலையம், பாரமுண்டாவில் உள்ள ‘பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பேருந்து முனையம்’ என்பதும், அது கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நவீன் பட்நாயக் முதல்வராக இருந்தபோது திறக்கப்பட்டது என்பதும் தெரிய வருகிறது.
ஆனால் தற்போது ஒரிசாவில் மோகன் சரண் மாஜி தலைமையிலான பாஜக ஆட்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் தகவல் படி, ஒரிசாவில் கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடந்ததும், ஜுன் மாதம் வாக்கு எண்ணிக்கை நடந்ததும் தெரியவருகிறது. அதன்படி, பாஜக 78 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது தெரியவருகிறது.
அதாவது, ஒரிசாவில் கடந்த 2024 ஜூன் மாதம் தான் பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால் ‘பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பேருந்து முனையம்’ பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் ஆட்சியின் போதே திறக்கப்பட்டுவிட்டது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, நவீன் பட்நாயக் ஆட்சியில் இருந்த போது திறக்கப்பட்ட இந்த பேருந்து முனையத்தை பாஜக ஆட்சியில் திறக்கப்பட்டதாக தவறான தகவல் பரப்பப்படுவது தெரிகிறது.
முடிவு:
பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் ஆட்சியின் போது திறக்கப்பட்ட ‘பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பேருந்து முனையத்தை’ பாஜக ஆட்சியில் திறக்கப்பட்டதாக தவறான தகவலை பாஜக தகவல் தொழில்நுட்ப அணியினர் பரப்பி வருகிறார்கள்.