யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2019-ல் அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆளுநர் ஒப்பந்தம் போட்டு தொடங்கி வைத்த சென்னை மாநகராட்சிக்கான திட்டத்தினை தற்போது நடைமுறையில் உள்ள தமிழ்நாடு அரசாங்கத்தின் திட்டமான முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்துடன் எந்த வகையிலும் ஒப்பிட முடியாது. மேலும் அதனை தமிழ்நாடு அரசாங்கத்தின் திட்டம் என்றும் சொல்ல முடியாது.
பரவிய செய்தி
Claim 1 : காலை உணவு திட்டம் 2019ல் எடப்பாடி கே பழனிசாமி அவர்களால் கொண்டுவரப்பட்டது
@grok fact check this

Claim 2 : உன்னுடைய @youturn_in வலைத்தள பக்கத்தில் எடுத்த பதிவு.
"Fact check" பண்ணி பாரு!
#வதந்திகளை_வேரறுப்போம்

விரிவான விளக்கம்
பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் 2019ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது தொடங்கப்பட்டதாக அதிமுக தரப்பில் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது. மேலும் youturn-னின் பழைய கட்டுரையை வைத்து, இதை factcheck செய்யும் அதிமுக தரப்பில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
முதலில் காலை உணவு திட்டம் குறித்து தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை பக்கத்தில் தேடிப் பார்த்தோம். அதில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் 07.05.2022 அன்று சட்டமன்றத்தில் 110ன் கீழ் அறிவிக்கப்பட்டு, அண்ணா பிறந்த நாளான 15.09.2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை கூறியதை அடுத்து, அதிமுகவில் இருந்து youturn-னின் பழைய கட்டுரையை ஒன்றை பதிவிட்டு, இதை Fact check செய்யுமாறு கேட்கப்பட்டது. அந்த கட்டுரையில் 2019-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சென்னையில் 5 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்கும் திட்டம் அட்சய பாத்ரா எனும் தனியார் அறக்கட்டளை உடன் இணைந்து செயல்படுத்தப்பட்டது என்றிருந்தது. அப்படியே முழு கட்டுரை link போட்டிருந்தால் எல்லாரும் படித்துத் தெளிய வாய்ப்பாக இருந்திருக்கும்.
இதையடுத்து இது குறித்து தேடினோம். ஜனவரி 29, 2020 அன்று ஆளுநர் மாளிகையில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பை பார்க்கமுடிந்தது. அதை பார்த்தப் போது, 2019-ல் அதிமுக ஆட்சிக் காலத்தில் ISKCON எனப்படும் ஹரே கிருஷ்ணா அமைப்பின் ”அட்சயப்பாத்திரா” எனும் NGO மூலம் சென்னை மாநகராட்சியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் காலை உணவு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. அப்போது MOU போடப்பட்டதே சென்னை மாநகராட்சிக்கும், ஆளுநர் மாளிகைக்கும், அட்சயப் பாத்திரா நிறுவனத்துக்கும் இடையில் தான். தமிழ்நாடு அரசு இந்த MOU-வின் ஒரு அங்கமே கிடையாது என்பது தெளிவானது.

இது குறித்து மேலும் தேடிய போது, The Federal ஊடகத்தில் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அதில் கூறியதாவது, ஆளுநர் இந்த ஒப்பந்தத்தினை போட்ட போது சென்னை மாநகராட்சிக்கு மேயர், துணை மேயர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் யாரும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் மாநில அரசின் நிதி குறித்தான விதிகளை மீறி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேரடியாக அரசு நிதியான 5 கோடி ரூபாயை அட்சய பாத்திரா நிறுவனத்திற்கு வழங்கியதும் பெரும் சர்ச்சைக்குரியதாக இருந்தது.

இதையடுத்து அட்சயப் பாத்திரா குறித்து தேடினோம். அப்போது News Minute ஊடகத்தில், ”TNM Impact: Civil society groups ask K’taka govt to probe funds misuse in Akshaya Patra” என்ற தலைப்பில் நவம்பர் 25, 2020 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் அட்சயப் பாத்திரா NGO 2008 ஆம் ஆண்டிலிருந்தே பல மாநிலங்களில் இத்தகைய பல சமையற்கூடங்களை நடத்தி வருகிறது. அதில் கர்நாடகாவில் நிதி முறைகேடுகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுருந்தது.

அதே போல் அட்சயப் பாத்திரா மதம் சார்ந்த நிறுவனம் என்பதால் உணவில் பூண்டு, வெங்காயம் கூட சேர்க்கப்படாது என்று சொல்லப்பட்ட போது அதற்கும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கண்டனங்கள் எழுந்தன என்று The Hindu ஊடகத்தில் வெளியான செய்தியை பார்க்கமுடிந்தது.
இதை உறுதிச் செய்யும் விதமாக, Youturn தரப்பில் 12 ஜனவரி, 2020 அன்று அதிமுக ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் குறித்து பரவிய செய்தியை பற்றி அப்போது அமைச்சராக இருந்த செங்கோட்டையன் பேசியது குறித்து கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. அப்போது "அரசு பள்ளியில் காலை உணவு வழங்கப்படும் என வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவும் செய்தி வதந்தியே தவிர வேறொன்றுமில்லை" என்று கூறியிருந்தார்.
முடிவு:
எனவே, இப்படியொரு திட்டத்தை தாங்கள் அறிவிக்கவில்லை என்று அதிமுக அமைச்சரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதை மறைத்து அதிமுக ஆதரவாளர்கள் ‘காலை உணவு திட்டத்தை’ அதிமுக தான் தொடங்கி வைத்தது என்ற பொய்யை பரப்பி வருகிறார்கள்.