யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
போபால் நகரத்தில் பிரபல தாதாவான சுபைர் மௌலானா மற்றும் மூன்று கூட்டாளிகளை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ.
பரவிய செய்தி
"பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பியதற்காக போலீஸால் கைது செய்யப்பட்ட நபர்கள்" - ’தந்தி டிவி’
போபாலில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்ட அமைதி மார்க்கத் தினர்.

விரிவான விளக்கம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் இடையே ஆயுத மோதல் வெடித்தது. நான்கு நாட்கள் நடந்த மோதலுக்கு பின்னர் மே 10 அன்று தாக்குதல் நிறுத்தம் (ceasefire) அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நான்கு நபர்களை போலீஸார் கைது செய்து, அடித்து இழுத்துவரும் வீடியோவை பதிவிட்டு, பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பியதற்காக போலீஸால் கைது செய்யப்பட்ட நபர்கள் என்று ’தந்தி டிவி’ செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இவ்வாறு ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கோஷம் எழுப்பி கைது செய்யப்பட்ட நபர்கள் முஸ்லீம்கள் என்று பாஜகவைச் சேர்ந்தவர் பரப்பி வருகிறார்.
போபாலில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்ட அமைதி மார்க்கத் தினர். pic.twitter.com/utt94aNad2
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடுகையில், ‘THE FREE PRESS JOURNAL’ செய்தித்தளத்தில் இது குறித்த செய்தி ஒன்றைக் காணமுடிந்தது. அதில், ‘பிரபல தாதாவான ஜூபர் மௌலானா மற்றும் மூன்று கூட்டாளிகளை போபால் போலீஸார் கடந்த மே 8ஆம் தேதி இரவில் கைது செய்ததாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து தேடியதில், ‘THE TIMES OF INDIA’ செய்தித்தளத்தில் வெளியான செய்தி ஒன்றைக் காணமுடிந்தது. அதன்படி, “கடந்த ஆறு மாதங்களாக தலைமறைவாக இருந்த ஜூபர் மௌலானா-வை டீலா ஜமால்புரா, மங்கல்வாரா, கவுதம் நகர், ஹனுமங்கஞ்ச் ஆகிய காவல் நிலையங்களைச் சேர்ந்த காவலர்கள் கூட்டு முயற்சியால் பிடித்துள்ளனர்” என்று தெரியவருகிறது. மேலும், கைது செய்யப்பட்ட நபர்களை தெருக்களில் அழைத்துச் சென்றிருக்கிறது போலிஸ்.

மேற்கூறிய விவரங்களிலிருந்து, பரப்பப்படும் வீடியோவில் கைது செய்யப்பட்டிருப்பது வெகு நாட்களாக தேடப்பட்ட வந்த பிரபலமான தாதா ஜூபர் மௌலானா என்பது தெரியவருகிறது. இந்த வீடியோவிற்கும் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற முழக்கத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை என்பது தெளிவாகிறது.
முடிவு:
பிரபல தாதாவான ஜூபர் மௌலானா மற்றும் மூன்று கூட்டாளிகளை கைது செய்து தெருக்களில் அழைத்துச் செல்லும் போது எடுக்கப்பட்ட வீடியோவை, ‘பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பியதற்காக கைது செய்யப்பட்ட நபர்கள் என்று ’தந்தி டிவி’ தவறான செய்தி வெளியிட்டிருக்கிறது.