யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2023ஆம் ஆண்டு வங்கதேசத்தின் சில்ஹெட் பகுதியில் நடந்த வன்முறை காட்சிகளை தான், தற்போது மேற்கு வங்கத்தில் நடப்பது போல் பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
மேற்கு வங்கம் மால்டா மாவட்டத்தில் ஹிந்து கடைகள் குறிவைத்து எறித்து வருகின்றனர்.... இது தான் அமைதி மார்க்கம் மா ??? நாளை எல்லோருக்கும் இதே நிலை தான் வரும்…

விரிவான விளக்கம்
மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள மோத்தா பாரியில் ராம நவமிக்கான பேரணியில் மசூதி ஒன்றை கடந்து செல்லும் போது, இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது கல்வீசி தாக்குதல் நடைபெற்றதால், அங்கு பதற்றம் ஏற்பட்டது. கலவரத்தில் ஈடுபட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அங்கு ஹிந்து கடைகளை குறிவைத்து எறித்து வருவதாக வீடியோ ஒன்று பரவி வருகிறது.
மேற்கு வங்கம் மால்டா மாவட்டத்தில் ஹிந்து கடைகள் குறிவைத்து எறித்து வருகின்றனர்....
இது தான் அமைதி மார்க்கம் மா ???
நாளை எல்லோருக்கும் இதே நிலை தான் வரும்... pic.twitter.com/n6vFmtlgqu
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவை ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்ததில், வங்கதேசத்தை சேர்ந்த ஊடக நிறுவனமான Prothom Alo வெளியிட்ட செய்தி ஒனறு கிடைத்தது. அதில் வங்கதேசத்தில் சில்ஹெட்டில் முற்றுகைக்கு ஆதரவாக ஜோதி ஊர்வலம் மற்றும் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாக தலைப்பிடப்பட்டிருந்தது.
இந்த தகவலைத் தொடர்ந்து Keywords மூலம் தேடி பார்த்ததில் நவம்பர் 27ஆம் தேதி 2023ஆம் ஆண்டு Daily Sylhet Mirror ஊடகத்தின் இணையத்தில் இது குறித்தான செய்தியை காணமுடிந்தது. அதில் பரவி வரும் வீடியோவின் screenshot இடம்பெற்றிருந்தது. மேலும் அதில் வங்கதேச தேசியவாதக் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 48 மணி நேர முற்றுகை போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாகவும், சில்ஹெட் பகுதியில் ஒரு ஜோதிப் பேரணி வன்முறையாக மாறியதாகவும், போராட்டக்காரர்கள் வாகனங்களை தீ வைத்து சேதப்படுத்தியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து Dhaka Tribune செய்தி நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் 2023ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி இது குறித்த செய்தி வெளியாகியிருந்தது. அதில் ஆளும் அவாமி லீக் அரசாங்கத்தை ராஜினாமா செய்து, அடுத்த பொதுத் தேர்தலை கட்சி சார்பற்ற நிர்வாகத்தின் கீழ் நடத்துமாறு அழுத்தம் கொடுக்க, எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) மற்றும் அதன் கூட்டணிக் குழுக்கள் ஆறு கட்டங்களாக முற்றுகைப் போராட்டங்களை நடத்தியதாக குறிப்பிட்டுயிருந்தது.

இதையடுத்து மேற்கு வங்கம் காவல்துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இருந்து மார்ச் 28, 2025 அன்று வெளியிட்ட பதிவு ஒன்றை காணமுடிந்தது. வைரலான வீடியோ நவம்வர் 2023ல் வங்கதேசத்தின் சில்ஹெட்டில் நடந்த நிகழ்வுகள் என்றும், மால்டாவில் நடந்த சம்பவத்திற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The attached video of arson and vandalism is being circulated on social media from certain quarters as an incident of Malda district. This claim is completely FAKE. This video captures events of November, 2023 in Sylhet region of Bangladesh and has no connection whatsoever with… pic.twitter.com/5IlmqcFUWO
முழுவதுமாக உறுதிப்படுத்த பரவி வரும் வீடியோ உள்ள இடத்தை, GOOGLE EARTH-ல் தேடி பார்த்தோம். பரவி வரும் வீடியோவில் உள்ள ஒரு கடையின் பெயர் பலகை, GOOGLE EARTH மூலம் கண்டுப்பிடிக்கப்பட்டது. அப்போது அந்த இடம் வங்கதேசத்தின் சில்ஹெட் என்பது உறுதியானது.

முடிவு :
மேற்கு வங்கம் மால்டா மாவட்டத்தில் ஹிந்து கடைகள் குறிவைத்து எறித்து வருவதாக பரவும் செய்தியில் உண்மையில்லை.