யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் பேசும் போது மோடி எழுந்து செல்லும் வீடியோ 2024ஆம் ஆண்டு மழைக்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது எடுக்கப்பட்டது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
2025 ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரையிலான காலத்தில் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்றது. இந்நிலையில், இந்த மழைக்கால கூட்டத் தொடரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் பேசும் போது பிரதமர் நரேந்திர மோடி எழுந்து வெளியே சென்றுவிட்டதாக சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
ஐயா ஜி அவர்கள் அவையை விட்டு ஓடிய தருணம்... pic.twitter.com/rAqetH1jpC
உண்மை என்ன?
‘மஹுவா மொய்த்ரா பேசுகையில் மோடி எழுந்து சென்றார்’ என்ற வார்த்தைகளை ஆங்கிலத்தில் எழுதி, அதனைக் கொண்டு இணையத்தில் தேடினோம்.
‘India Today’ ஆங்கில செய்தித்தளத்தின் யூட்யூப் பக்கத்தில் 2024 ஜூலை மாதம் வெளியிடப்பட்டிருந்த ஒரு செய்தியைக் காணமுடிந்தது. அதில், ‘மஹுவா மொய்த்ரா தனது பேச்சைக் கேட்கும் படி மோடியிடம் கோரிக்கை வைத்தபோது மோடி எழுந்து சென்றுவிட்டார்’ என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது.
அந்த வீடியோவில் மஹுவா மொய்த்ரா பேசுகையில் ‘மாண்புமிகு பிரதமர் அவர்களே, நான் பேசுவதை கேட்டுவிட்டு செல்லுங்கள். பயப்படாதீர்கள். நீங்கள் என்னுடைய தொகுதிக்கு பிரச்சாரத்திற்காக இரண்டு முறை வந்தீர்கள். இந்த முறையாவது என்னுடைய பேச்சு காது கொடுத்து கேளுங்கள்!’ என்று பேசுகிறார். ஆனால் அவர் பேசுவதை கவனிக்காமல் மோடி எழுந்து செல்கிறார். பின்பு ‘இது என்னுடைய துரதிர்ஷ்டம்' என்று சொல்லிவிட்டு மஹுவா மொய்த்ரா தொடர்ந்து பேசுகிறார்.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் பேசும் போது மோடி எழுந்து செல்லும் வீடியோ 2024ஆம் ஆண்டு மழைக்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது எடுக்கப்பட்டது என்பது தெளிவாக தெரிகிறது.
முடிவு:
மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் பேசும் போது மோடி எழுந்து செல்லும் வீடியோ உண்மையானது தான். ஆனால் இந்த சம்பவம் 2024ஆம் ஆண்டு நடந்தது. 2025ஆம் ஆண்டில் நடந்தது அல்ல.