YouTurn

யூடியூபில் விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்கும் என எம்.எல்.எம் மோசடி எனப் புகார்.. வாட்ஸ்அப் மூலம் கூடிய கூட்டம்.. பின்னணி என்ன ?

யூடியூபில் விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்கும் என எம்.எல்.எம் மோசடி எனப் புகார்.. வாட்ஸ்அப் மூலம் கூடிய கூட்டம்.. பின்னணி என்ன ?
அதிக வருமானம் கிடைக்கும் என்ற ஆசை வார்த்தைகளை காட்டி, நாளுக்கு நாள் பலரும் பண மோசடிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை பார்க்க முடிகிறது. இந்நிலையில், மொபைல் பயன்பாடு அதிகரித்துள்ள இந்த சூழலில், யூடியூபில் விளம்பரம் பார்த்தாலே பணம் கிடைக்கும் என்ற நூதன முறையில் புதிய மோசடி ஒன்று கோயம்பத்தூரில் நடைபெறுவதாக கூறி செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.



மேலும் இது தொடர்பாக ஜனவரி 11 அன்று புகார் ஒன்று எழுந்த நிலையில், கோயம்புத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் My V3 Ads என்ற நிறுவனத்துக்கு ஆதரவாக பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ள ஆயிரக்கணக்கான மக்கள் கோயம்புத்தூர் நீலாம்பூர் எல்.என்.டி பைபாஸ் பகுதியில் திரண்டதால் நேற்று (ஜனவரி 29) அங்கு பதற்றநிலை நிலவியது.



 

யூடியூபில் விளம்பரம் பார்த்தாலே பணம் - புதிய வகை மோசடி?

பொதுவாக மல்டி லெவல் மார்க்கெட்டிங் எனப்படும் MLM முறை என்பது ஒரு நிறுவனம் தங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளை, பிரமிடு வடிவ ஆள்சேர்ப்பு முறையில் விற்பனை செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கும் முறை என்று சொல்லப்படுகிறது. ஆனால் இத்தகைய முறைகளில் பெரும்பாலும் ஆடம்பரமான வாக்குறுதிகளும், ஆசை வார்த்தைகளுமே மிஞ்சுகின்றன. இதனை உண்மை என்று நம்பி பொதுமக்கள் பலரும் தங்களது முதலீடுகளை அந்த நிறுவனத்திற்கு வழங்குவதன் மூலம், மோசடிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

மேலும் இதில் மக்களை எளிதில் இணைப்பதற்காக காவலர்கள், ராணுவத்தினர் உட்பட பிரபலங்கள் பலரும் தங்களது நிறுவனத்தில் பண முதலீடு செய்திருப்பதாக எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காண்பித்தும் மக்களை நம்ப வைத்தும் மோசடியில் ஈடுபடுத்துகின்றனர் என்றும் அறிய முடிகிறது.

இத்தகைய MLM முறையை அடிப்படையாகக் கொண்டு 2023 மார்ச் 05 அன்று My V3 Ads என்ற நிறுவனம் ஆயுர்வேத பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி தனது கிளையை கோயம்புத்தூரில் தொடங்கியது. அதன்படி இதில் ஒருவர் பணம் செலுத்தாமலே Basic member ஆக இணைய முடியும். மேலும் இவர்களுடைய மொபைல் application ல் இதற்கான அனைத்து வழிமுறைகளும் வழங்கப்படுவதோடு, யூடியூபில் இரண்டு மணிநேரம் விளம்பரம் பார்த்தும், புதிய நபர்களை இந்த நிறுவனத்தில் சேர்த்தும் தினமும் பணம் சம்பாதிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. Basic member-ஐத் தொடர்ந்து, சில்வர், கோல்டு, டைமண்ட், கிரவுன் உறுப்பினராக ஒருவர் சேர, ஒருவர் பணம் செலுத்த வேண்டியது கட்டாயம்.



மேலும் சில ஆயிரங்களில் முதலீடு செய்தால் 200 ரூபாய் முதல் பணம் வரும் என்றும், லட்சங்களில் முதலீடு செய்தால் அதற்கேற்ப வங்கிக்கணக்கிற்கு பணம் உயரும், இதைத் தொடர்ந்து படிப்படியாக கோடி கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்றும் இதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக புகார் அளித்துள்ள அசோக் ஸ்ரீநிதி கூறுகையில், "இத்தகைய மோசடி தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே புகார் அளிக்க ஆரம்பித்தோம். பொருளாதார குற்றப்பிரிவிற்கும், கோயம்புத்தூர் கமிஷனருக்கும், ஆட்சியருக்கும் புகார் அளித்தோம். இந்நிலையில் போன வாரம் FIR போடப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரு கூட்டம் கூடியுள்ளது. எதற்காக என்றால் My V3 Ads என்ற நிறுவனத்துக்கு எதிராக பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்று கூறி மக்களை நம்ப வைத்து, இவ்வாறு வர வைத்துள்ளார்கள். கூட்டம் அந்த நிறுவனத்துக்காக வரவில்லை. அந்த நிறுவனம் முதலீடு செய்துள்ள மக்களுக்கு ஒரு வாட்சப் மெசேஜ் அனுப்பியுள்ளது. அதில் நீங்கள் வரவில்லை என்றால் உங்கள் வருமானம் போய்விடும் என்று பொய்யான தகவல் மூலம் வரவழைத்துள்ளார்கள்" என்று கூறியுள்ளார்.



மேலும் தாங்கள் மோசடி செய்வதை மக்கள் அறியாமல் இருக்க, ஆயுர்வேத பொருட்களையும் விற்பனை செய்வதால் தமிழ்நாடு உட்பட மற்ற மாநில மக்களும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர் என்றும் அறியமுடிகிறது.

இந்த ‘My V3 Ads‘ எங்கும் இன்னும் பதிவு செய்யவில்லை என்பதையும், ‘நிறுவனத்தைப் பதிவே செய்யாமலே மக்களிடம் கடந்த 2020-லிருந்து முதலீடுகளை பெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், இதற்கென தனியாக தமிழ்நாடு முழுவதும் 450 ஸ்டோர்கள் இருப்பதாகவும், குறிப்பாக, கோயம்புத்தூரில் மட்டும் 58 ஸ்டோர்கள் இருப்பதாகவும், தற்போது வரை சுமார் 35 லட்சம் வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்தில் உறுப்பினர்களாக உள்ளதாகவும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த சூழலில், யூடியூபில் விளம்பரம் பார்த்தாலே பணம் சம்பாதிக்கலாம் என்ற இது போன்ற ஆசை வார்த்தைகளை நம்பி மக்கள் ஏமாறுவது அவர்களின் மேல் உள்ள அறியாமையையும், பேராசையையும் காட்டுகிறது. மேலும் மோசடி செய்பவர்கள் மக்களை கவர்ந்திழுக்க இது போன்ற வாக்குறுதிகளையே MLM பெயரில் தொடர்ந்து வழங்கி வருவதையும் காண முடிகிறது. அவர்கள் ஆரம்பத்தில் முதலீடு செய்தவர்களுக்கு பணம் வழங்கி வந்தாலும், சில ஆண்டுகளுக்கு பின்பு மக்களை ஏமாற்றிவிட்டு வேறு நாடுகளுக்கு தப்பித்துவிடுவது வாடிக்கையாகிவிட்டது. எனவே இத்தகைய பண மோசடிகள் நடைபெறுவது பொதுமக்களின் கவனத்திற்கு வந்தால்,1930 என்ற தேசிய சைபர் கிரைம் எண்ணிற்கோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திலோ தகவல் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று..!!
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை