டெல்லி குண்டு வெடிப்பு - மூன்று மருத்துவர்களை விடுவித்த என்ஐஏ, பரவும் தவறானப் புகைப்படங்கள்!
டெல்லி குண்டு வெடிப்பு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று மருத்துவர்களை என்.ஐ.ஏ விடுவித்திருக்கிறது. இந்நிலையில் விடுவிக்கப்பட்ட மருத்துவர்கள் என்று கூறி தவறான புகைப்படங்கள் பரவி வருகின்றன.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 10 ஆம் தேதி) நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஹரியானாவின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பல மருத்துவர்களை தேசிய புலனாய்வு முகமை (NIA) கைது செய்திருந்த நிலையில், டெல்லி குண்டு வெடிப்பு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று மருத்துவர்கள் உட்பட நால்வரை என்.ஐ.ஏ தற்போது விடுவித்திருக்கிறது.
டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தின் பின்னணி என்ன?
டெல்லியில் மக்கள் அதிகம் கூடும் செங்கோட்டை சிக்னல் அருகே கடந்த 10ஆம் தேதி மாலை 6.52 மணியளவில் ஹரியானா நம்பர் பிளேட்டைக் கொண்ட காரிலிருந்து நிகழ்ந்த குண்டுவெடிப்பு, இந்தியாவையே அதிர்ச்சியடையச் செய்தது. இந்த சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். 27 பேர் காயம் அடைந்தனர். இது திட்டமிட்ட பயங்கரவாத செயல் என கண்டறியப்பட்டு உள்ளது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
டெல்லி செங்கோட்டை எதிரே போக்குவரத்து சிக்னலில் நின்ற கார் வெடித்து சிதறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளும் சமீபத்தில் வெளியாகின. சிக்னல் அருகே கார் வந்து நிற்பது, பின்னர் வெடித்து சிதறுவது போன்ற காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
VIDEO | CCTV footage captures the exact moment of the blast near Delhi's Red Fort.
A blast took place in a slow-moving car at a traffic signal near the Red Fort metro station on Monday evening, killing 12 people, injuring many and gutting several vehicles.
(Source: Third Party)… pic.twitter.com/xjpScNpJ5Y
கார் வெடிக்கும் முன் அந்த காரை ஓட்டி வந்தது காஷ்மீர் புல்வாமாவை சேர்ந்த மருத்துவர் உமர் உன் நபி என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. டெல்லி காவல்துறையினரால் உறுதிப்படுத்தப்பட்ட வைரலான சிசிடிவி காட்சிகளில், குற்றம் சாட்டப்பட்ட டாக்டர் உமர் உன் நபி செங்கோட்டைக்கு அருகிலுள்ள துர்க்மேன் கேட் மசூதியில் காணப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Delhi terror blast case | In a viral CCTV footage confirmed by Delhi Police, the accused Dr Umar Un Nabi can be seen at Turkman Gate Mosque near Red Fort. pic.twitter.com/wDFAaySf3D
என்ஐஏ-ன் முக்கிய தகவல் அறிக்கை:
தேசிய தலைநகரில் கார் மூலம் நடத்தப்பட்ட இந்த குண்டுவெடிப்பை, “தற்கொலைப்படை தாக்குதல்” என்று என்ஐஏ கூறியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு தெற்கு காஷ்மீரில் 40 மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர்கள், கார் மூலம் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டனர். இதன் மூலம் டெல்லி கார் வெடிப்பு சம்பவம், 2019 புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இரண்டாவது முறையாக நடைபெற்ற தாக்குதல் என்றும் என்ஐஏ அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
தாக்குதலில் ஈடுபட்ட காருக்கு சொந்தமான அமீர் ரஷீத் அலியும் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் இவரது பெயரில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கார், மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் (IED) தாங்கிய வாகனமாக மாற்றப்படுவதற்கு முன்பு வாகனத்தை வாங்க உதவுவதற்காக அவர் டெல்லிக்குச் சென்றதாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர். தற்கொலை தாக்குதல் நடத்திய உமர் நபி உடன் சேர்ந்து இவர் சதித்திட்டம் தீட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டதாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்கான கார் டெல்லியில் வாங்கப்பட்டதாகவும், இதுவரை காயமடைந்தவர்கள் உள்பட 73 பேரிடம் விசாரணை நடைபெற்றதாகவும் என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. இறந்த உமர் நபியின் அடையாளம், ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் பொது மருத்துவத் துறையில் உதவிப் பேராசிரியராகவும், புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும் இருக்கும் உமர் உன் நபி என்பது தடயவியல் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நபிக்குச் சொந்தமான மற்றொரு வாகனத்தையும் NIA பறிமுதல் செய்துள்ளது, இது இப்போது ஆதாரங்களுக்காக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கார் குண்டு வெடிப்பை நடத்திய பயங்கரவாதிக்கு உதவி செய்த மேலும் ஒருவரான ட்ரோன் நிபுணர் ஜாசிர் பிலால் வானியை என்ஐஏ நேற்று (நவம்பர் 17) கைது செய்துள்ளது. இது தவிர ஏற்கனவே முசம்மில் அகமது கனாயி, அடீல் அகமது ராத்தர் மற்றும் ஷாஹீன் சயீத் என்ற மருத்துவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூன்று மருத்துவர்களை விடுவித்த என்ஐஏ குறித்து பரவும் தவறானப் புகைப்படங்கள்!
டெல்லி தற்கொலைப்படை தாக்குதல் விவகாரத்தில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஹரியானாவின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பல மருத்துவர்களை தேசிய புலனாய்வு முகமை (NIA) கைது செய்தது.
இவருடன் டாக்டர் ரெஹான், டாக்டர் முகமது, டாக்டர் முஸ்தகீம், உர வியாபாரி தினேஷ் சிங்லா ஆகியோரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மூன்று நாட்கள் தீவிர விசாரணைக்குப் பிறகு, நால்வரையும் தொடர்புபடுத்தும் ஆதாரங்கள், டிஜிட்டல் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அதன் அடிப்படையில், மூன்று மருத்துவர்கள் உட்பட 4 பேரும் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் விடுவிக்கப்பட்டதை பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களும் உறுதி செய்திருக்கின்றனர்.

இந்நிலையில், டாக்டர் ரெஹான், டாக்டர் முகமது, டாக்டர் முஸ்தகீம், உர வியாபாரி தினேஷ் சிங்லா ஆகிய நால்வரும் தற்போது விடுவிக்கப்பட்டனர் என்று கூறி, “Varun Talks“ யூடியூப் பக்கம் மற்றும் 'கலைஞர் செய்திகள்' ஊடகம் உட்பட பலரும், இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான உமர் உன் நபி உட்பட வேறு நபர்களின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் தவறாகத் திரித்துப் பரப்பி வருகின்றனர். கலைஞர் செய்திகள் ஊடகத்தின் இந்த நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவிய நிலையில், பின்னர் தனது தவறான நியூஸ் கார்டை அகற்றிவிட்டு, சரியான தகவல்களுடன் மீண்டும் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
#CarBlast #DelhiBombBlast #NIA #KalaignarSeithigal pic.twitter.com/EHgX7FQ00B