யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது கடந்த ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூரில் நடந்தது. இச்சம்பவத்தின் போது அருகிலிருந்தவர்கள் முதியவரைக் காப்பாற்றியுள்ளனர்.
பரவிய செய்தி
கவனமாக இருங்கள், இப்போது விடியல் ஆட்சியில் கழுதைகளும் கடிக்க ஆரம்பித்துவிட்டன. நடந்து செல்லும் போது கழுதைகள் அருகில் வந்தால் எச்சரிக்கை ஜாக்கிரதை…

விரிவான விளக்கம்
சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவரைக் கழுதை ஒன்று மிகக் கொடூரமாகக் கடித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பகிரப்படுகிறது. இந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்ததாக பரப்பப்படுகிறது.
கவனமாக இருங்கள், இப்போது விடியல் ஆட்சியில் கழுதைகளும் கடிக்க ஆரம்பித்துவிட்டன. நடந்து செல்லும் போது கழுதைகள் அருகில் வந்தால் எச்சரிக்கை ஜாக்கிரதை.... pic.twitter.com/c7R8PDzQHm
உண்மை என்ன?
பரவக் கூடிய இதே வீடியோ ‘Newsflare’ என்ற தளத்தில் இருப்பதைக் காண முடிந்தது. கழுதை முதியவரைக் கடித்த சம்பவம் கடந்த ஆண்டு ஜூலை, 7-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் நடந்ததாக அப்பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேற்கொண்டு இது பற்றி தேடியதில் ‘Zee News’ தளத்திலும் செய்தி வெளியாகியிருப்பதைக் காண முடிந்தது. இந்தி-யில் இருந்த அச்செய்தியை மொழிபெயர்த்துப் படித்ததில், அதிலும் மகாராஷ்டிரா, கோலாப்பூர் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ’Free Press Journal’ தளத்திலும் இது தொடர்பான படத்துடன் செய்தி வெளியாகியுள்ளது. முதியவரைக் கழுதை கடித்ததும் அருகிலிருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்று, ஒருவழியாக முதியவர் காப்பாற்றப்பட்டுள்ளார். இதற்கு முன்னரும் இதே போன்ற சம்பவம் அப்பகுதியில் நடந்துள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட ஆதாரங்களிலிருந்து இச்சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்தது என்பதை உறுதி செய்ய முடிகிறது. மக்கள் மத்தியில் பதட்டத்தை உண்டாக்கும் நோக்கத்தில் இது தமிழ்நாட்டில் நடந்ததாகப் பொய் செய்தி பரப்பப்படுகிறது.
முடிவு:
தமிழ்நாட்டில் சாலையில் நடந்து சென்ற முதியவரைக் கழுதை ஒன்று கடித்ததாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் தவறானது. இது கடந்த ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ந்தது.