யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிமுக ஆட்சியிலிருந்த போது நடந்த சாதிய வன்கொடுமை சம்பவமாகும்.
பரவிய செய்தி
தமிழகத்தில் நடப்பது திமுகவின் விடியா சமூக நீதி ஆட்சியே.... தூத்துக்குடி மாவட்டத்தில் தலித் முதியவர் ஒருவரின் ஆடுகள் மற்ற சாதியினர் வயல்களில் மேய்ந்ததால் அவரை காலில் விழ வைத்து வீடியோ வெளியிட்ட சாதி வெறியர்கள்....
#DMKFailsTN

விரிவான விளக்கம்
ஒரு மனிதனின் மாண்பினை உடைக்கும் வகையில் அவரை மற்றொருவரின் காலில் வலுக்கட்டாயமாக விழ வைத்து அதனை வீடியோவாகவும் எடுத்திருக்கிறார்கள். அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, இந்த சம்பவம் திமுக ஆட்சியில் சமீபத்தில் நடந்தது என்று பாஜகவைச் சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளத்தில் பரப்புகிறார்கள்.

உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், ’THE HINDU’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. 2020ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதியன்று வெளியான இந்த செய்தியிலிருந்து, ‘கயத்தார் தாலுகாவில் உள்ள ஓலைக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் ஆடு மேய்த்துகொண்டிருந்த போது, அவரது ஆடுகள் சிவசங்கு என்ற இடைநிலை சாதியைச் சேர்ந்தவரின் ஆட்டுக் கூட்டத்தில் கலந்துவிட்டது. இதனைத் தொடர்ந்து, சிவசங்கு பால்ராஜை சாதி ரீதியாக தகாத வார்த்தைகளைக் கூறி அவமானப்படுத்தியுள்ளார். மேலும், சிவசங்கு அவரது ஊரில் இருந்து ஆட்களை கூட்டி வந்து பால்ராஜை அடித்து கொலை செய்துவிடுவதாக மிரட்டி காலில் விழ வைத்துள்ளார்கள்’ என்று தெரியவருகிறது.

இது குறித்து மேலும் தேடியபோது, ’BBC தமிழ்’ செய்தித்தளத்தில் 2020 அக்டோபர் மாதம் வெளியான செய்திபடி, ‘பால்ராஜ் இந்த சம்பவம் குறித்து கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளதாகவும், SC/ST வன்கொடுமைச் சட்டம் உள்ளிட்ட வழக்குகளின் கீழ் பதிவு செய்து, சிவசங்கு உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும்’ தெரியவருகிறது.

இதிலிருந்து, இந்த காலில் விழ வைத்த சாதிய வன்கொடுமை சம்பவம் 2020ஆம் ஆண்டு நடந்தது என்பதும், அப்போது அதிமுக தான் ஆட்சியில் இருந்தது என்பதும் தெளிவாகிறது.
முடிவு:
கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிமுக ஆட்சியில் நடந்த சாதிய வன்கொடுமை சம்பவத்தை தற்போது திமுக ஆட்சியில் நடந்ததாக பாஜகவினர் தவறாக பரப்புகிறார்கள்.