யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது இந்தியாவில் பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் மாவட்டத்தில் நடந்துள்ளது. மாட்டின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பரவிய செய்தி
வங்காளதேசம் இஸ்கான் கோவில் கோசாலாவின் நிலைமை. வாயில்லா ஜீவன்களை இப்படி நடத்துபவர், சாமானியர்களை எப்படி நடத்துவார். நாளை நமது நிலைமை இன்னும் மோசமாக இருக்கும். இன்று வங்கதேசம் என்றால் நாளை ???

விரிவான விளக்கம்
வங்க தேசம் இஸ்கான் கோவில் கோசாலையில் உள்ள மாட்டைச் சிலர் கொடூரமாகத் தாக்கியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
வங்காளதேசம் இஸ்கான் கோவில் கோசாலாவின் நிலைமை😱
வாயில்லா ஜீவன்களை இப்படி நடத்துபவர், சாமானியர்களை எப்படி நடத்துவார். நாளை நமது நிலைமை இன்னும் மோசமாக இருக்கும். இன்று வங்கதேசம் என்றால் நாளை ??? pic.twitter.com/wIK2DIEK9Y
உண்மை என்ன?
பரவக் கூடிய இதே வீடியோவை கடந்த மாதம் 19-ம் தேதி ‘மஹவீர் மேத்தா’ என்ற எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, PETA அமைப்பை டாக் செய்யப்பட்டுள்ளது. அப்பதிவிற்கான பதிலில், இது தொடர்பாகச் சாதர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு BNS (பாரதிய நியாய சன்ஹிதா) மற்றும் விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
An FIR has already been registered by Sadar Police Station under Section 325 of the Bharatiya Nyaya Sanhita (BNS) and Section 11 of the Prevention of Cruelty to Animals (PCA) Act. We are in discussions with the Deputy Commissioner of Police (DCP) to include provisions of the…
மேற்கொண்டு தேடியதில், இது தொடர்பாக ‘Punjab Kesari’ என்ற ஊடகத்தில் கடந்த நவம்பர் 15ம் தேதி செய்தி வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது. பரவக் கூடிய வீடியோவுடன் தொடர்புடைய படங்களை அச்செய்தியில் காண முடிகிறது.

இச்சம்பவம் பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள ஜம்ஷர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு பால் நிறுவனத்தில் நடந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது பற்றி ‘Tribune’ ஊடகத்தில் வெளியான செய்தியில், Animal Protection Foundation சார்பில் ஷிரிஸ்ட் பாக்ஷி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகக் கூறப்பட்டுள்ளது. அவ்வமைப்பின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகார் கடிதமும் FIR நகலும் பதிவிடப்பட்டுள்ளது.
மாட்டின் மீது தாக்குதல் நடத்திக் கொன்றது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. விசாரணை முடிந்து காவல் துறை தெரிவிக்கும் பட்சத்தில் தான் மாட்டினை ஏன் அடித்துக் கொன்றார்கள் என்பது தெரியவரும்.
இவற்றிலிருந்து வங்க தேசத்தில் இஸ்கான் கோவிலில் உள்ள மாட்டினை கொடூரமாகத் தாக்கியதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் தவறானது என்பதை அறிய முடிகிறது. இது இந்தியாவில் நடந்த சம்பவமாகும்.
முடிவு:
வங்க தேசம் இஸ்கான் கோவிலில் உள்ள மாட்டைச் சிலர் தாக்கியதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. இது இந்தியாவில் பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் மாவட்டத்தில் நடந்துள்ளது. மாட்டின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.