யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
நடிகையும், அரசியல்வாதியுமான ரோஜா செல்வமணி, ஜூலை 08, 2025 அன்று பவன் கல்யாண் குறித்த கேள்விக்கு பதிலளித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இது. இந்த பழைய வீடியோவை, “விஜய் மக்களை ரோட்டில் விட்டுவிட்டு போய்விட்டார்” என்று ரோஜா செல்வமணி கூறியதாகக் கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
விஜய் மக்களை ரோட்டில் விட்டுவிட்டு போயிட்டார். மக்களுக்காக நிற்கலை. இதிலேந்தே தெரிகிறது அவர் டைம்பாஸ் பாலிடிக்ஸ் பண்ணுகிறார் என்பது
- நடிகை ரோஜா

விரிவான விளக்கம்
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதியன்று தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்ட போது நடந்த கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தை காண தவெகவின் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் யாரும் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது.
இந்நிலையில் விஜய் மக்களை நடுரோட்டில் விட்டுவிட்டு சென்றதாகவும், இதிலிருந்து தெரிகிறது விஜய் பொழுதுப்போக்கிற்காக அரசியல் செய்வதாகவும் நடிகை ரோஜா தெரிவித்ததாக வீடியோ ஒன்று பரவி வருகிறது.
விஜய் மக்களை ரோட்டில் விட்டுவிட்டு போயிட்டார். மக்களுக்காக நிற்கலை. இதிலேந்தே தெரிகிறது அவர் டைம்பாஸ் பாலிடிக்ஸ் பண்ணுகிறார் என்பது
- நடிகை ரோஜா pic.twitter.com/N3tPs1dJHr
உண்மை என்ன?
பரவி வரும் இந்த வீடியோ குறித்து தேடினோம். அப்போது புதிய தலைமுறை ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் ”Drama Artist பவன் கல்யாண்... - ரோஜா கடும் விமர்சனம்” என்ற தலைப்பில் ஜூலை 8, 2025 அன்று நடிகர் ரோஜா அளித்த முழு பேட்டியும் இடம்பெற்றிருந்தது. அதில் ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் குறித்து விமர்சித்து ஆந்திர முன்னாள் அமைச்சர் ரோஜா பேசியிருந்தார். பரவி வரும் வீடியோவில் உள்ளது போல் பேசியுள்ளரா என்பதை தேடினோம். சரியாக 8.58 நிமிடத்தில் ”ஒரு எம்.ஜி.ஆர் மாதிரி, ஒரு ஜெயலலிதா மாதிரி, ஒரு என்.டி.ஆர் மாதிரி…ஜனங்கள் நம்ம நம்பும் போது, நம்ம பின்னல வரும் போது, அவங்களுக்காக எவ்வளவு தூரம் வேணும்னாலும் fight பண்ணனும். திடீரென போகக்கூடாது, அவங்கள ரோட்டுல விட்டுவிட்டு போகக்கூடாதுனு சொல்வேன்” என்று அவர் கூறுவதை பார்க்கமுடிந்தது.
அதே போல் தினமலர் ஊடகத்தின் யூடியூப் பக்கத்திலும், “பவன் கல்யாண் டைம் பாஸ் பாலிடிக்ஸ் செய்வதாக ரோஜா தாக்கு” என்ற தலைப்பில் இதே பேட்டி பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. அதிலும் ஆந்திரா துணை முதலமைச்சர் பவண் கல்யாண் குறித்தே விமர்சித்து பேசியிருந்தார்.
முடிவு:
எனவே, பரவி வருவது நடிகையும், அரசியல்வாதியுமான ரோஜா செல்வமணி, ஜூலை 08, 2025 அன்று பவன் கல்யாண் குறித்த கேள்விக்கு பதிலளித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இது. இந்த பழைய வீடியோவை, “விஜய் மக்களை ரோட்டில் விட்டுவிட்டு போய்விட்டார்” என்று ரோஜா செல்வமணி கூறியதாகக் கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.