யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வாக்குச் சேகரிப்பிற்கு சென்ற அமுதா என்ற பெண் திமுக நிர்வாகியை பிறர் சூழ்ந்துகொண்டு தாக்கியுள்ளனர்.
பரவிய செய்தி
திமுக க்கு ஓட்டு போட முடியாது ன்னு சொன்னதுக்கு அவங்களை எப்டி மானபங்கம் படுத்துறாங்க பாருங்க.
விரிவான விளக்கம்
ஒரு வீட்டின் வாசலில் ஆண்கள் சூழ்ந்திருக்க பெண் ஒருவரை சில ஆண்கள் தலை முடியைப் பிடித்து அடிக்கிறார்கள். இந்த சிறு வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, வாக்குச் சேகரிப்பின் போது அந்த பெண் திமுகவிற்கு வாக்களிக்க முடியாது என்று சொன்னதாகவும் அதனால் திமுகவினர் அவரை சூழ்ந்து கொண்டு தாக்கியதாகவும் பரப்புகிறார்கள்.
உண்மை என்ன?
பரப்பப்படும் இந்த வீடியோவின் Keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடினோம். ‘Local App’ என்ற தமிழ் செய்தித்தளத்தில் இந்த வீடியோவுடன் இருக்கும் செய்தியைக் காணமுடிந்தது.

ஏப்ரல் 27ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள அந்த செய்தியில், வாசிகவுண்டனூர் என்ற ஊரைச் சேர்ந்த திமுக நிர்வாகியான அமுதாவிடம், அதே பகுதியைச் சேர்ந்த 9 பேர் வாக்குக்கு பணம் கொடுக்க வந்தாயா எனக் கேட்டு தகராறு செய்து தாக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டு மேலும் தேடியபோது, ’சமயம்’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. அதன்படி, தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே வாசிகண்டனூர் பகுதியை சார்ந்த அமுதா என்ற திமுக நிர்வாகி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, அதே பகுதியை சேர்ந்த 9 பேர் வாக்குவாதம் செய்து அமுதாவை தாக்கியுள்ளதாகவும், அமுதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது. இது தொடர்பாக பொம்மிடி போலீஸார் விசாரணை நடத்தி இருவரை கைது செய்துள்ளனர், மேலும் எழு பேரை தேடி வருகின்றனர்.
இதிலிருந்து திமுகவினர் பெண்ணை தாக்கவில்லை என்பதும், திமுக பெண் நிர்வாகிதான் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் என்பதும் தெரியவருகிறது.
முடிவு:
இந்த சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான நபர் தான் பெண் திமுக நிர்வாகி என்பதை மறைத்து, திமுகவினர் பெண் ஒருவரை வாக்கு சேகரிப்பின் போது தாக்கியதாக தவறாக பரப்புகிறார்கள்.