யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வேறொரு சந்தர்ப்பத்தில் எடிப்பாடி பழனிச்சாமி ஊடகங்களிடம் பேசியதை, தற்போது பெரியார் பற்றிய சீமானின் சர்ச்சைப் பேச்சுடன் இணைத்து போலியாக உருவாக்கப்பட்ட video News Card இது.
பரவிய செய்தி
ஈவெராவுக்கும் சித்தப்புக்கும் என்னடா சம்பந்தம்... அடேய் பத்திரியாளர்களே.. வரட்டா மாமே.. டூர்ர்.. ஆமா புராணத்தை ஏன் படிக்கனும்

விரிவான விளக்கம்
’பெரியார் பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார்’ என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து எடிப்பாடி பழனிச்சாமியிடம் ஊடகங்கள் கேள்வி கேட்கும்போது, அதற்கு "ஆய்வு பண்ணுனாதான் இது உண்மையா பொய்யா என்பது தெரியவரும்" என்று அவர் பதிலளித்தாக ’News 18 தமிழ்நாடு’ சேனல், 2025 ஜனவரி 9 அன்று News Card ஒன்றை வெளியிட்டதாக சமூக வலைதளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன:
பரப்பப்படும் செய்தியை அடிப்படையாகக் கொண்டு, ’News 18 தமிழ்நாடு’ சேனலின் அதிகாரப்பூர்வமான ’எக்ஸ்’ கணக்கில் தேடுகையில் அப்படியொரு News Card வெளியிடப்படவில்லை என்பது தெரிய வருகிறது.
மேலும், ’News 18 தமிழ்நாடு’ வெளியிட்டுள்ள பிற News Card-களின் Original Format பரப்பப்படும் News Card-ல் இருந்து வேறுபட்டதாக இருப்பதை காண்கிறோம். ’News 18 தமிழ்நாடு’ சேனலின் உண்மையான News Card-ல் ‘வலதுபுற மேல் முனையில் சேனலின் Logoவின் கீழேதான் செய்தி வெளியிடப்படும் தேதி போடப்பட்டிருக்கும். ஆனால், பரப்பப்படும் செய்தியில் தேதி வலதுபுறத்தின் கீழே போடப்பட்டுள்ளது. இதிலிருந்து மேற்கண்ட News Card போலியாக உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.

மேலும், எடிப்பாடி பழனிச்சாமி பேசும் அந்த வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், ABP Nadu யூட்யூப் தளத்தில் 2023 அக்டோபர் 25 அன்ரு பதிவேற்றம் செய்யப்படிருந்த, ”ஆரியம், திராவிடம் கேள்வி! நழுவிய எடப்பாடி!” என்ற தலைப்பில் வீடியோ ஒன்றைக் காணமுடிந்தது.

ஆரியம், திராவிடம் குறித்த சர்ச்சை ஆளுநர் ஆர்.என்.ரவியால் ஏற்பட்டதாகும். 2023 அக்டோபர் மாதம் திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆளுநர் ரவி, “தமிழகம் புண்ணிய பூமி, இங்கு ஆரியம், திராவிடம் கிடையாது. இந்தியாவை பிரித்தாளும் சூழ்ச்சிக்கான பிரிட்டாஷரின் உத்திகளில் இதுவும் ஒன்று. பிரித்தாளும் கொள்கைக்காக அனுப்பப்பட்ட ராபர்ட் கால்டுவெல்லை திராவிட கருத்தியலின் தந்தை என்று போற்றுகிறார்கள்” என்று பேசினார்.
இதனால் எழுந்த சர்ச்சையையொட்டிதான் எடிப்பாடி பழனிச்சாமியிடம் ஊடகங்கள் ஆரியம், திராவிடம் பற்றிய கேள்வியை கேட்டுள்ளனர். அதற்கு ”அதுக்கெல்லாம் புராணம் படிக்கணும். நான் அந்த அளவுக்குப் படிச்சவன் இல்லை. இந்தக் கதையெல்லம் படிச்சு சொல்லணும்னா பெரிய ஆய்வு பண்ணணும். ஆய்வு பண்ணினால்தான் அது உண்மையா, பொய்யா என்று தெரியும்” என்று பதிலளித்திருந்தார்.
எடிப்பாடி ஆரியம் திராவிடம் சர்ச்சை குறித்து பேசியதை, பெரியார் பற்றிய சீமானின் சர்ச்சைப் பேச்சு விவகாரத்துடன் இணைத்து போலியாக செய்தி உருவாக்கப்பட்டிருக்கிறது.
முடிவு:
வேறொரு சந்தர்ப்பத்தில் எடிப்பாடி பழனிச்சாமி ஊடகங்களிடம் பேசிய வீடியோவை, தற்போது பெரியார் பற்றிய சீமானின் சர்ச்சைப் பேச்சுடன் இணைத்து போலியாக உருவாக்கப்பட்ட video News Card இது.