யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஜூன் மாதம் பள்ளி திருப்பையொட்டி ஆண்டுதோறும் மே மாதத்தில் பள்ளி வாகனங்களை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்வது வழக்கமான நடைமுறைதான்.
பரவிய செய்தி
திருவாரூரில் உள்ள 33 தனியார் பள்ளிகளின் 120 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த ஆட்சியர்.. சரியில்லாத வாகனங்களைக் பள்ளி விடுமுறை முடிவதற்குள் சரி செய்ய அறிவுறுத்தல்!
நடப்பது முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி மக்களுக்கு நல்லதுதான் நடக்கும்

விரிவான விளக்கம்
கடந்த மே 10ஆம் தேதி விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சி பொறுப்பேற்றிருக்கிறது. விஜய் பதவியேற்ற நாளிலிருந்து தமிழ்நாட்டில் நிறைய மாற்றங்கள் நடந்து வருவதாக தவெக ஆதரவாளர்கள் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள்.
இந்நிலையில், அரசு அதிகாரிகள் தனியார் பள்ளி பேருந்துகளை சோதனை செய்யும் செய்தி வீடியோ ஒன்றை பதிவிட்டு, ‘தவெக ஆட்சியமைந்ததும் இவ்வாறான சோதனைகள் நடக்கிறது. மக்கள் நலனுக்காக தவெக இது போன்ற புதிய நடவடிக்கைகளை எடுக்கிறது’ என்று சமூக வலைத்தளத்தில் பரப்புகிறார்கள்.
திருவாரூரில் உள்ள 33 தனியார் பள்ளிகளின் 120 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த ஆட்சியர்..
சரியில்லாத வாகனங்களைக் பள்ளி விடுமுறை முடிவதற்குள் சரி செய்ய அறிவுறுத்தல்!👌🏻
நடப்பது முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி மக்களுக்கு நல்லதுதான் நடக்கும்💯pic.twitter.com/d4B602mVZP
உண்மை என்ன?
பரப்பப்படும் செய்தி வீடியோவில் ‘பாலிமர்’ செய்திகள் ஊடகத்தின் Logo இருந்தாலும், இந்த செய்தி வெளியிடப்பட்ட தேதி காணப்படவில்லை. இதனால், இந்த வீடியோவின் keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடிய போது, ‘பாலிமர்’ செய்திகள் ஊடகத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் இந்த செய்தி வீடியோ 2026 மே 11ஆம் தேதி வெளியிடப்பட்டிருப்பது தெரிய வருகிறது.
ஆனால் இது போன்ற பிற செய்திகளை தேடிய போது, ’தந்தி டிவி’ 2025 மே மாதம் அதாவது ஓராண்டிற்கு முன்னர் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றைக் காணமுடிந்தது. அச்செய்தியில், நெல்லை மாவட்ட ஆட்சியர் பள்ளி வாகனங்களை நேரில் ஆய்வு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல், ’THE TIMES OF INDIA’ செய்தித்தளம் 2019ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள செய்தியின் படி, மீனம்பாக்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் பள்ளி வாகனங்களை சோதனை செய்ததாகவும், நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்பு தரத்தை பூர்த்தி செய்யாத 6 பள்ளி வாகனங்களின் தகுதிச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிய வருகிறது. மேலும், அச்செய்தியில், கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளி திருப்பையொட்டி ஆண்டுதோறும் மே மாதத்தில் இதுபோன்ற ஆய்வுகள் நடத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கூறிய விவரங்களிலிருந்து, இவ்வாறு பள்ளி வாகனங்கள் குறித்து அரசு அதிகாரிகள் நடத்தும் சோதனைகள் வழக்கமாக ஆண்டுதோறும் நடத்தப்படுவதுதான் என்று தெரியவருகிறது.
முடிவு:
ஆண்டுதோறும் நடந்து வரும் பள்ளி வாகனச் சோதனையை தவெக ஆட்சியில் புதிதாக தொடங்கப்பட்ட நடைமுறையென தவறாக பரப்புகிறார்கள்.