யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அம்பேத்கரின் 125வது பிறந்தநாளின் போது, அவரது நினைவாக பிரதமர் மோடி ரூ.125 மதிப்புள்ள நாணயத்தை வெளியிட்டார். அதே போல் 2016ஆம் ஆண்டு “ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மகாபிரபு“ பிருந்தாவனத்திற்கு வந்ததன் 500வது ஆண்டு விழாவை நினைவுகூரும் வகையில், 500 ரூபாய் மதிப்புள்ள நினைவு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
இந்திய அரசாங்கம் புதிய நாணயங்களை வெளியிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், “புதிய நாணயங்கள் வந்துவிட்டன. அரசாங்கம் 125 மற்றும் 500 ரூபாய் நாணயங்களை வெளியிட்டுள்ளன” என்று ஆடியோ பதிவாகியுள்ளது
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவில் உள்ள 125 நாணயத்தின் பின்பகுதியில் அம்பேத்கரின் புகைப்படமும், 500 ரூபாய் நாணயத்தின் பின்பகுதியில் “Shri Krishna Chaitanya Mahaprabhu Coming to Vrindawan Coin” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கிடைத்து தகவலின் அடிப்படையில் கூகுளில் தேடி பார்த்த போது, 2015ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி NDTV செய்தி ஊடகத்தின் இணையதள பக்கத்தில் இது குறித்த செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அதில் டாக்டர் பி ஆர் அம்பேத்கரின் 125வது பிறந்தநாள் ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி ரூ.125 மற்றும் ரூ.10 மதிப்புள்ள இரண்டு நினைவு நாணயங்களை வெளியிட்டார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போல் 2015 டிசம்பர் 6ஆம் தேதி Financial Express ஊடகத்தின் இணையதள பக்கத்தில் இது குறித்த செய்தியும் வெளியிடப்பட்டிருந்தது. மேலும், Numista என்ற இணையதளத்தில் வைரலாகும் அதே நாணயத்தின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதிலும், இந்த நாணயம் 2015ஆம் ஆண்டு அம்பேத்கரின் 125வது பிறந்த நாளின் போது வெளியிடப்பட்ட நினைவு நாணயம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாணயங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இல்லை.

இதையடுத்து அந்த 500 ரூபாய் நாணயம் குறித்து தேடி பார்த்தோம். அப்போது Times of India ஊடகம் 2016 நவம்பர் 25, செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் “ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மகாபிரபு“ பிருந்தாவனத்திற்கு வந்ததன் 500வது ஆண்டு விழாவை நினைவுகூரும் வகையில், கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் ஸ்ரீ நரேந்திர குமார் சின்ஹா, 500 ரூபாய் மதிப்புள்ள புழக்கத்தில் இல்லாத நினைவு நாணயத்தையும் 10 ரூபாய் மதிப்புள்ள புழக்க நாணயத்தையும் வெளியிட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல் The New Indian Express ஊடகமும் இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.

முடிவு :
ஒன்றிய அரசு ரூ.125 மற்றும் ரூ.500 மதிப்பிலான நாணயங்களை வெளியிட்டதாக பரப்பப்படும் காணொளி முற்றிலும் திரிக்கப்பட்டது.
