யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை லண்டனில் சந்தித்ததாகப் பரவும் புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கி அதன் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தி அக்கட்சியின் கொள்கையினை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தவெக மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில்தான் தமிழக வெற்றி கழகம் பாஜக தலைவர் அண்ணாமலையை லண்டனில் சந்தித்ததாக கூறி My india 24X7 என்ற யூடியூப் சேனலில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், தவெக தலைவர் விஜய் மற்றும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பாஜக தலைவர் அண்ணாமலையுடன் நிற்கும் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது. இந்த செய்தியை பத்திரிகையாளர் முக்தார் ஹமீது தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உண்மை என்ன ?
பரவி வரும் புகைப்படம் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், அது எடிட் செய்யப்பட்டு தவறான தகவலோடு பரப்பப்படுவது தெரியவந்தது.
வைரலாகும் தகவல் குறித்து உண்மை தன்மையை கண்டறிய தமிழக வெற்றி கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தை ஆய்வு செய்தோம். அதிமுகவுடன் கூட்டணி வைப்பதாகப் பரவிய செய்திக்கு மறுப்பு தெரிவித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் நவம்பர் 8ம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்ததை பார்க்க முடிந்தது.
அதில், "தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு அஇஅதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று தொடர்புப்படுத்தி, பிரதான தமிழ் நாளிதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைக் கொண்டு நேற்றுத் தலைப்புச் செய்தி் வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது" என அந்த அறிக்கையில் பதிவாகி இருந்தது.
தொடர்ந்து பாஜகவுடன் தவெக கூட்டணியில் இணைகிறதா என்று தேடியதில், அப்படி எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை என்பதை அறிய முடிந்தது.

தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி, புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி நடிகர் விஜய்யை சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசியதாக Zee News, சமயம் , தினத்தந்தி போன்ற ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ரங்கசாமிக்கு பதிலாக அண்ணாமலை இருப்பது போன்று எடிட் செய்துள்ளனர் என்பதை பரவக் கூடிய படத்துடன் ஒப்பிடும் போது அறிய முடிகிறது.

இவற்றிலிருந்து பரவிவரும் புகைப்படம் போலியாக எடிட் செய்து தவறான தகவலுடன் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதை அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலின் வழியாக, லண்டனில் தவெக தலைவர் விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த் பாஜக தலைவர் அண்ணாமலையை ரகசியமாக சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று பரவும் தகவல் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதையும் பாஜகவுடன் தவெக கூட்டணி வைக்கப்போவதாக வைரலாகும் தகவல் தவறானது என்பதையும் அறிய முடிகிறது.
