யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சுதந்திரத்திற்கு முன்பும், விடுதலைக்கு பிறகும், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்பும் தமிழ்நாட்டில் பெண் அமைச்சர்கள் இருந்துள்ளார்கள்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ’தமிழக வெற்றிக் கழகம்’ சி.பி.ஐ, சி.பி.எம், வி.சி.க போன்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கிறது. மே 10ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் தவெக தலைவர் விஜய் முதல்வராகவும், மேலும் சில தவெக உறுப்பினர்கள் அமைச்சர்களாகவும் பதவியேற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், அமைச்சராக பதவியேற்றுக்கொண்ட சிவகாசி தொகுதியில் வெற்றிபெற்ற கீர்த்தனா தான் தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சர் என்று தவெக ஆதரவான சமூக வலைத்தள பக்கத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சர் குறித்த தகவல்களை இணையத்தில் தேடினோம். ‘விகடன்’ செய்தித்தளம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றின் படி சுதந்திரத்திற்கு முன்பாகவே மதராஸ் மாகாணத்தின் முதல் பெண் அமைச்சராக இருந்தவர் ருக்மிணி லட்சுமிபதி என்பது தெரிய வருகிறது. 1946 நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று டி.பிரகாசம் தலைமையிலான அரசில் பொது சுகாதாரத்துறை அமைச்சராக பதவியில் இருந்தவர் ருக்மிணி லட்சுமிபதி

அதேபோல், 1953ஆம் ஆண்டில் ராஜாஜி தலைமையிலான ஆட்சியில் பெண்கள் நலத்துறை மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சராக பதவி வகித்தார் ஜோதி வெங்கடாசலம் என்பவர்.

அதேபோல், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் நடந்த முதல் தேர்தலில், தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சராக இருந்தவர் லூர்தம்மாள் சைமன் என்பவர் தான். 1957 காமராஜர் தலைமையிலான ஆட்சியில் உள்ளாட்சி மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தார் லூர்தம்மாள் சைமன்.
திமுக முதல்முறையாக அண்ணா தலைமையில் ஆட்சியமைத்த போது அன்னை சத்தியவாணிமுத்து 1967 முதல் 1976 வரையில் 9 ஆண்டுகள் அமைச்சராக இருந்தார்.

சமீபத்திய வரலாற்றை எடுத்துக்கொண்டாலும் கூட ஜெயலலிதா தலைமையில் அதிமுக அரசு 2016ஆம் ஆண்டு பதவியேற்கும் போது, ஜெயலலிதா உட்பட சரோஜா, ராஜலட்சுமி, வளர்மதி ஆகிய நான்கு பெண் அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். 2021ஆம் ஆண்டு திமுக அமைச்சரவையில் கூட கீதா ஜீவன், கயல்விழி செல்வராஜ் ஆகிய பெண் அமைச்சர்கள் இருந்தார்கள்.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, தவெக கட்சியைச் சேர்ந்த கீர்த்தனாவிற்கு முன்பே தமிழ்நாட்டில் பல பெண் அமைச்சர்கள் இருந்துள்ளார்கள் என்பது தெரியவருகிறது.
முடிவு:
தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சர் தவெக கட்சியைச் சேர்ந்த கீர்த்தனா தான் என்று தவெக ஆதரவு சமூக வலைத்தளப் பக்கம் தவறான தகவலை பரப்பி வருகிறது.