யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரிகளை லிஃப்டுக்குள் எடுத்துச் செல்லும்போது, பேட்டரியின் எலக்ட்ரோ சார்ஜ் முழு லிப்டையும் காந்தமாக மாற்றுமா? அவ்வாறு மாற்றியதால்தான் விபத்து ஏற்படுகிறதா? உண்மை இதோ!
பரவிய செய்தி
எச்சரிக்கை பதிவு :- ஒரு நபர் எலக்ட்ரிக் பைக் பேட்டரியை லிப்ட்டுக்குள் கொண்டு செல்கிறார். லிப்ட் மூடப்படும் போது, பேட்டரியின் எலக்ட்ரோ சார்ஜ் முழு லிப்டையும் காந்த பேட்டரியாக மாற்றுகிறது. கவனமாக இருங்கள் மற்றும் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்..
விரிவான விளக்கம்
“ஒரு நபர் எலக்ட்ரிக் பைக் பேட்டரியை லிப்ட்டுக்குள் கொண்டு செல்கிறார். லிப்ட் மூடப்படும்போது, பேட்டரியின் எலக்ட்ரோ சார்ஜ் முழு லிப்டையும் காந்த பேட்டரியாக மாற்றுகிறது. கவனமாக இருங்கள்” என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவி வரும் வீடியோவில், வெளியே இருந்து ஒரு நபர் கையில் பேட்டரி ஒன்றை வைத்துக்கொண்டு லிப்டின் உள்ளே வருவதையும், லிப்டின் கதவு மூடப்படும் பொழுது, பேட்டரியில் தீப்பற்றியதைத் தொடர்ந்து, லிப்டு முழுவதும் தீப்பற்றி எரிவதையும் காணமுடிகிறது.
ஈ-பைக் பேட்டரியை லிப்டில் எடுத்து சென்று லிப்ட் கதவை மூடிய போது... 😪😪
— Aadhavan (@aadaavaan) July 25, 2024
விபத்துக்கு காரணம் பேட்டரி பழுதானதாக இருக்கலாம்.
ரிச்சார்ஜபிள் பேட்டரிகளை லிப்டில் எடுத்துச் செல்லும் போது கவனமாக இருங்கள். pic.twitter.com/cW7UZanIhV
He took the e-bike battery into lift. When lift door closed electro-charge of the battery turned the whole lift into a magnetic field. 😪😪 Possible of damaged battery. Be careful not to carry large rechargeable batteries in lift. pic.twitter.com/DI01Pm5O6i
— Dr Ganesh Iyer . (@GanKanchi) July 25, 2024
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வுசெய்து பார்த்ததில், இந்த வீடியோ கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளதை அறியமுடிந்தது.
大陸一男子攜帶電動車電池進電梯,電池發生 #爆燃。 pic.twitter.com/lOWFXpcctl
— Epoch TV中文站 (@EpochTV_CH) November 6, 2021
“Mirror.co.uk” என்ற இணையதளப்பக்கத்திலும், பரவி வரும் வீடியோவைக் குறிப்பிட்டு, இது கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் 08 அன்று நடைபெற்ற சம்பவம் என்று குறிப்பிட்டு “திகில் தருணத்தில், லிப்டில் மனிதனின் முகத்தில் பேட்டரி வெடித்து, அவன் உடல் கருகியது” என்ற தலைப்பில் ஜூலை 25 அன்று செய்தி வெளியிட்டிருந்தனர்.
அதில், “ஹாங்காங்கிலிருந்து வெகுதொலைவில் உள்ள சீன துறைமுக நகரமான குவாங்சோவில் உள்ள ஒரு கட்டிடத்தின் லிப்டில் “சென்” என்ற 28 வயதான இளைஞன், பேட்டரியை எடுத்துச்சென்ற போது, பேட்டரி தீப்பிடித்து லிப்டில் காயம் அடைந்தார். 28 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இச்சம்பவம் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் லித்தியம் பேட்டரிகளை முறையாகக் கையாள்வது மற்றும் அகற்றுவது குறித்த எச்சரிக்கையை ஏற்படுத்துவதற்காக இப்போது உள்ளூர் ஊடகங்களில் இந்த வீடியோ வெளியாகியுள்ளன.
இத்தகைய லித்தியம் பேட்டரிகளைக் கையாளும்போது குறிப்பிடத்தக்க ஆபத்துகள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில் அவை சரியாக வைக்கப்படாவிட்டாலோ அல்லது சரியாக அகற்றப்படாவிட்டாலோ அவை திடீரென வெடிக்கும். லித்தியம் பேட்டரிகளைக் கையாளும்போது அனைத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் நெருக்கமாகப் பின்பற்ற வேண்டும்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் பரவி வரும் வீடியோ கடந்த 2021ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறிய முடிகிறது.
மேலும் இதுகுறித்து, சீன ஊடகமான, “m.thepaper.cn” பக்கத்தில் கடந்த 2011ஆம் நவம்பர் 03 அன்றே செய்தி வெளியிட்டிருந்தது. அதில், அக்டோபர் 8, 2021 அன்று, ஒரு நடுத்தர வயதுடைய நபர் தனது வலது கையில் ஒரு சிறிய மின்சார வாகனத்தின் லித்தியம் பேட்டரியை ஏந்திக்கொண்டு லிப்டிற்குள் நுழைந்தபோது, இந்த பயங்கரமான தீவிபத்து ஏற்பட்டது என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர்.

மேலும் அதே செய்தியில், லிப்டில் எலெக்ட்ரிக் வாகனத்தை எடுத்துச் சென்றபோது, பேட்டரி வெடித்ததன் காரணமாக ஏற்பட்ட மற்றொரு தீவிபத்து குறித்தும், வீடுகளில் நிறுத்தப்பட்டிருக்கும் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் (Charge) செய்யும்போது, பேட்டரிகள் வெடித்து சிதறியபோது எடுக்கப்பட்ட சில வீடியோக்களைக் குறிப்பிட்டும் செய்திகள் குறிப்பிடப்பட்டிருந்தன.

இதன் மூலம் பல விபத்து சம்பவங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரியை கையாளும்போது ஏற்பட்டுள்ள்ளன என்பதை அறிய முடிகிறது.
எனவே சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் செய்திகளில் குறிப்பிட்டுள்ளவாறு, “எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரிகளை லிப்டுக்குள் எடுத்துச் செல்லும் போது, பேட்டரியின் எலக்ட்ரோ சார்ஜ், முழு லிப்டையும் காந்த பேட்டரியாக மாற்றுமா? அவ்வாறு மாற்றியதால் தான் இந்த விபத்து ஏற்பட்டதா?” என்பது குறித்து மிஸ்டர் GK விடம் யூடர்ன் தரப்பிலிருந்து பேசினோம்.
நமக்கு பதிலளித்து பேசிய அவர், “எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரிகளை லிப்டுக்குள் எடுத்துச் செல்லும்போது, பேட்டரியின் Electro Magnetic Field, முழு லிப்டையும் காந்தமாக மாற்றும், அதனால்தான் இந்த விபத்து ஏற்பட்டது என்று தற்போது சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோவைக் குறிப்பிட்டு பலரும் பரப்புகின்றனர். இது அறிவியல் ஆதாரப்பூர்வமற்றது (Unscientific). இந்த விபத்து ஏற்பட்டது, ஒரு பேட்டரியை கொண்டு போய் லிப்டுக்குள் வைப்பதால், Magnetic Power அல்லது Magnetic Field போன்றவற்றால் லிப்டை காந்தமாக மாற்றுவது போன்ற எந்த ஒரு காரணங்களாலும் கிடையாது. இவ்வாறு கூறுவது தவறு.
இது ஒரு லித்தியம் பேட்டரி விபத்து அவ்வளவு தான். நிறைய இடங்களில் நீங்கள் எலெக்ட்ரிக் பைக்காக இருக்கட்டும், எலெக்ட்ரிக் கார் இவற்றில் அதிலுள்ள பேட்டரி தீப்பிடித்து எரிவதை அடிக்கடி பார்த்திருக்கலாம். இதற்கு காரணம் என்னவென்றால் அதிகமாக வெப்பமடைவது (Over Heat) தான். இரண்டாவது இந்த பேட்டரியை அவர்கள் “Modified Battery” என்று சொல்கிறார்கள். இவ்வாறு Modifications செய்யும்போது இந்த மாதிரி விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. ஏனென்றால் அதனுடைய Packing சரியாக இல்லாமல் இருப்பதால். Modified Battery அல்லது லித்தியம் பேட்டரி என எதுவாக இருந்தாலும் சரியாக Packing செய்யாமல் இருந்தால், தீப்பிடிப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. மேலும் இது தற்செயலாக ஒரு லிப்டின் உள்ளே நடந்துள்ளது. இவ்வாறு ஏற்பட்டதற்கும் Magnetic Fields க்கும் எந்தவொரு காரணமும் கிடையாது. இது ஒரு லித்தியம் பேட்டரி வெடிவிபத்து அவ்வளவுதான்“ என்றும் கூறினார்.
இதன்மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரிகளை லிப்டுக்குள் எடுத்துச் செல்லும் போது, பேட்டரியின் எலக்ட்ரோ சார்ஜ் முழு லிப்டையும் காந்த பேட்டரியாக மாற்றும் என்று சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரிகளை லிப்டுக்குள் எடுத்துச் செல்லும் போது, பேட்டரியின் எலக்ட்ரோ சார்ஜ் முழு லிப்டையும் காந்தமாக மாற்றும் என சமூக ஊடகங்களில் தற்போது பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.
