யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்தை பார்வையிட வருபவர்களின் செல்போன்களை பராமரிக்க தமிழ்நாடு அரசு எந்த முன்னெடுப்பையும் எடுக்கவில்லை என்று கூறி பரவும் செய்திகள் தவறானவை.
பரவிய செய்தி
என்னதான் செய்கிறீர்கள் அப்பாவும் மகனும் சேர்ந்து... இந்த அடிப்படை அறிவுகூட இல்லையாடா உங்களுக்கு…
விரிவான விளக்கம்
ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்தை பார்வையிட வருபவர்களின் செல்போன்களை பராமரிக்க தமிழ்நாடு அரசு எந்த முன்னெடுப்பையும் எடுக்கவில்லை என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
வீடியோவில் அப்துல் கலாமின் நினைவிடத்திற்கு வந்த ஒருவர், தன்னுடைய செல்போன் கொண்டு செல்ல உள்ளே அனுமதி இல்லை, மேலும் செல்போனை எதிரே உள்ள கடைகளில் கொடுத்துவிட்டு செல்ல சொல்கிறார்கள் என்று புகார் கூறுவதையும் காண முடிகிறது.
என்னதான்டா புடுங்குறீங்க அப்பனும் மகனும் சேர்ந்துட்டு... இந்த அடிப்படை அறிவுகூட இல்லையாடா உங்களுக்கு... @mkstalin @Udhaystalin pic.twitter.com/17XQJglFZH
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், அப்துல் கலாமின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அவரது நினைவாக ஒன்றிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ) சார்பாக மூன்றரை ஏக்கரில் 'அப்துல் கலாம் தேசிய நினைவகம் 27.07.2017 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் திறந்துவைக்கப்பட்டது என்பதை DRDO வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் அறிய முடிந்தது.
இதே போன்று, கலாம் தேசிய நினைவிடம் பொதுமக்கள் பார்வைக்காக டி.ஆர்.டி.ஓ அமைப்பால் திறக்கப்பட்டு 26.07.2024 அன்றுடன் 7 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளது. தினமும் சராசரியாக 7,000 பார்வையாளர்கள் நினைவிடத்தை பார்வையிடுகின்றனர். இதுவரையிலும் 7 ஆண்டுகளில் 1 கோடியே 35 லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர் என்பதை இந்து தமிழ் திசை வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் அறிய முடிகிறது.
இன்றுவரை ஒன்றிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ) மூலமே கலாம் தேசிய நினைவிடம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்துல் கலாமின் நினைவிடத்தை தமிழ்நாடு அரசு சரியாக பராமரிக்கவில்லை என்று கூறி பலரும் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், ராமேசுவரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்தை பார்வையிட வருபவர்களின் செல்போன்களை பராமரிக்க தமிழ்நாடு அரசு எந்த முன்னெடுப்பையும் எடுக்கவில்லை என்று கூறி பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.