யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கார் மோதியது குறித்து மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
பரவிய செய்தி
”இஸ்லாமிய அடையாளத்தில் இருந்த நபர் ஒருவர் தன்னை கார் ஏற்றி கொலை செய்ய முயன்றதாக மதுரை ஆதீனம் பொய்யான தகவலை பரப்பினார். ஆனால் அவ்வாறு மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய மதுரை ஆதீனத்தின் மீது தமிழ்நாடு அரசு எந்த வழக்கும் பதியவில்லை” - தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் முஸ்தபா.
விரிவான விளக்கம்
கடந்த 2025 மே மாதம் சென்னை அருகே உள்ள காட்டாங்குளத்தூரில் அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டில் கலந்துகொள்ள காரில் சென்றார் மதுரை ஆதீனம். ஆதீனத்தின் கார் உளுந்தூர்ப்பேட்டை சேலம் ரவுண்டானாவை கடந்து சென்றபோது மற்றொரு கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஆதீனத்திற்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
இது குறித்து மதுரை ஆதீனம் தரப்பில் ‘விபத்து ஏற்படுத்தியவர்கள் குல்லா அணிந்திருந்தார்கள், தாடி வைத்திருந்தார்கள், காரில் நம்பர் பிளேட் இல்லை, பேரி கார்டை உடைத்து வந்து எங்கள் கார் மீது மோதினார்கள்’ என்று சொல்லப்பட்டது. இவ்வாறு இஸ்லாமிய அடையாளத்தில் இருந்தவர் தன்னை கொலை செய்ய முயற்சி செய்ததாக, இரு மதப் பிரிவினருக்கு இடையில் மோதலை தூண்டும் வகையில் மதுரை ஆதீனம் பேசினார்.
இந்நிலையில் சமீபத்தில், ‘The Fire Media’ என்ற யூட்யூப் தளத்தில் விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் முஸ்தபா, ‘தாடி குல்லா போன்ற இஸ்லாமிய அடையாளத்தில் இருந்த நபர் ஒருவர் என்னை கொலை செய்ய முயன்றார் என்று மதுரை ஆதீனம் மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசினார். மதுரை ஆதீனம் பேசியது போல் முஸ்தபா, ஜவாஹிருல்லா போன்ற யாராவது பேசியிருந்தால் அவர்களை IPC, குண்டாஸ் போன்ற சட்டத்தில் கைது செய்திருபார்கள். ஆனால் மதுரை ஆதீனத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என்று கூறினார்.
உண்மை என்ன?
இஸ்லாமிய அடையாளத்தில் இருந்தவர் தன்னை கார் ஏற்றி கொல்ல முயன்றதாக மதுரை ஆதீனம் கூறியது குறித்து ஏதேனும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறதா? என்று இணையத்தில் தேடினோம்.
’News 18 தமிழ்நாடு’ யூட்யூப் தளத்தில் இது குறித்த செய்தியைக் காணமுடிந்தது. 2025 ஜூன் 27 அன்று வெளியிடப்பட்டுள்ள அந்த செய்தியில், ’ஆதீனம் கார் மீது மற்றொரு கார் மோதியது குறித்து, தன்னை கொலை செய்ய நடந்த சதி என சர்ச்சைக்குரிய வகையில் ஆதீனம் முன்வைத்த குற்றச்சாட்டு தவறானது என நிரூபிக்கும் வகையில் கள்ளக்குறிச்சி போலீஸார் சிசிடிவி ஆதாரத்தை வெளியிட்டதுள்ளதாக’ குறிப்பிடுகிறது.

இவ்வாறு ஆதீனம் முன்வைத்த பொய்யான குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் பயத்தையும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையையும் ஏற்படுத்தும் என சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சென்னை காவல் ஆணையருக்கு புகாரின் அளித்தார். இதனடிப்படையில் தவறான தகவலை பரப்புதல், கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், சமூகத்துக்கு இடையே மோதலை உண்டாக்கும் வகையில் பேசுதல், பொது அமைதிக்கு கேடு விளைவிக்கும் வகையில் பேசுதல் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் ஆதீனத்தின் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஆதீனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மதுரை ஆதீனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். இந்த இடைக்கால தடை காரணமாக காவல்துறையின் விசாரணைக்கு ஆதீனம் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்று போலீஸார் தரப்பு வழக்கறிஞர் குற்றசாட்டினார்.

இதை விசாரித்த நீதிமன்றம், மதுரை ஆதினத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க மட்டுமே இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது, விசாரணை நடத்த எந்த தடையும் இல்லை என்று தெளிவுபடுத்தியது. மேலும் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க ஆதீனத்திற்கு உத்தரவிட்டது நீதிமன்றம்.
இதிலிருந்து, கார் மோதியது குறித்து மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருவது தெளிவாகிறது.
முடிவு:
இந்த சம்பவம் தொடர்பாக மதுரை ஆதீனத்தின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை மறைத்து, ஆதீனத்தின் மீது எந்த வழக்கும் பதியப்படவில்லை என்று தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் முஸ்தபா தவறான தகவலை பரப்புகிறார்.