யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவக் கூடிய இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டது. மேலும் கோள்கள் வானில் தோன்றுவது 2373 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வு கிடையாது.
பரவிய செய்தி
எகிப்து, கிசாவில் உள்ள பிரமிடுகளுக்கு மேல் புதன், வெள்ளி மற்றும் சனி கோள்கள் தோன்றியுள்ளது. இது 2373 ஆண்டுகளுக்கு ஒருமறை மட்டுமே நடக்கும்

விரிவான விளக்கம்
எகிப்தில் உள்ள பிரமிடுகளுக்கு மேலே நேராக வானத்தில் புதன், வெள்ளி மற்றும் சனி கோள்கள் தோன்றியுள்ளதாகவும் இந்த அற்புத நிகழ்வு 2373 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்குமென்றும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரவக் கூடிய புகைப்படம் குறித்துத் தேடியதில், இதே புகைப்படத்துடன் 2021, ஏப்ரல் மாதம் ’World Mysteries’ என்ற தளத்தில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், 2012, டிசம்பர் 3ம் தேதிதான் கோள்கள் நேர்கோட்டில் (கிட்டத்தட்ட) வந்ததான செய்திகள் கிடைக்கப் பெறுகிறது.

வானில் கோள்கள் தோன்றியது தொடர்பாக earth sky என்ற தளத்தில் வெளியான கட்டுரையில் பரவக் கூடிய படத்தைப் பதிவிட்டு, ’கோள்கள் 2012, டிசம்பர் 3ம் தேதி உலகம் முழுவதும் வானில் தோன்றியது உண்மை தான். ஆனால், இந்த படத்தில் இருப்பது போன்று பிரமிடுகளுக்கு மேல் நேராகவும் இவ்வளவு பிரகாசமாகவும் தோன்றவில்லை’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வானில் கோள்கள் தோன்றிய படங்களும் அத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

‘Jessica's Homework blog’ 2008ம் ஆண்டு இந்த மூன்று பிரமிடு புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. அதில் பிரமிடுகளுக்கு மேல் கோள்கள் இல்லை. இந்த படத்தைத்தான் எடிட் செய்து தவறாகப் பரப்புகின்றனர்.

மேற்கொண்டு புதன், வெள்ளி மற்றும் சனி கோள்கள் 2373 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் தோன்றும் அறிய நிகழ்வா என்பது குறித்தும் தேடினோம். ஆனால், அப்படி ஒன்றும் கிடைக்கவில்லை. கடந்த காலங்களில் இந்நிகழ்வு பலமுறை நிகழ்ந்துள்ளது.

மேற்கண்ட மூன்று கோள்கள் மட்டுமின்றி செவ்வாய் மற்றும் வியாழனும் சேர்த்து 5 கோள்கள் 2022, ஜூன் 24-ம் தேதி வானில் தோன்றியுள்ளது. இந்நிகழ்வு பற்றி புகைப்படங்களுடன் Space.com தளத்தில் கட்டுரை வெளியாகியுள்ளது.
மேலும் அடுத்தடுத்து இம்மாதிரி நடக்க இருக்கும் நிகழ்வுகள் குறித்த தேதியும் கோள்கள் பற்றியும் ‘starwalk.space’ என்ற தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி 2025-ம் ஆண்டு நடக்க இருப்பதைக் கீழே உள்ள பட்டியலில் காணலாம்.

இவற்றிலிருந்து புதன், வெள்ளி மற்றும் சனி கோள்கள் பிரமிடுகளுக்கு மேல் நேராக வானத்தில் தோன்றியதாகப் பரவும் படம் எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது. மேலும் 2373 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கோள்கள் வானில் தோன்றும் என்பதும் தவறான தகவல்.
முடிவு:
2373 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரமிடுக்கு மேல் நேராக வானில் புதன், வெள்ளி மற்றும் சனி கோள்கள் தோன்றும் அறிய நிகழ்வு எனப் பரவும் படம் போலியாக எடிட் செய்யப்பட்டது. மேலும் 2373 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இந்நிகழ்வு நடக்கும் என்பதும் தவறான தகவல்.