யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த மார்ச் மாதம் குஜராத் மாநிலத்தில் ஆயுதங்களுடன் பண்ணை வீட்டை சூறையாடிய குண்டர்களை போலீஸார் அடித்து இழுத்துச் செல்லும் வீடியோ இது.
பரவிய செய்தி
ராஜஸ்தானில் இடம்பெற்ற கொடூரம் 13 வயது பெண் பிள்ளையை கடத்தி 32 பேர், 5 நாட்கள் ஹோட்டலில் பாலியல் வன்கொடுமை!!
இந்த நிலையில்,குறித்த 32 பேரையும் பிடித்த பொது மக்கள் அவர்களை
கயிற்றால் கட்டி,வீதியில் வைத்து தாக்குதல்
#வீடியோ சமூக ஊடகங்களில்
பெரும் வைரலாகியுள்ளது.
விரிவான விளக்கம்
சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஸ்ரீ கங்காநகர் என்னும் பகுதியில் 13 வயது சிறுமியை 30-க்கும் மேற்பட்டவர்கள் அங்குள்ள உள்ளூர் தங்கும் விடுதியில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், போலீஸார் 20-க்கும் மேற்பட்டவர்களை கைகளில் கயிற்றைக் கட்டி அடித்து தெருவில் ஊர்வலமாக இழுத்துச் செல்லும் வீடியோ ஒன்றை பதிவிட்டு, ராஜஸ்தான் மாநிலத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 32 பேரை போலீஸார் கைது செய்து அடித்து இழுத்துச் செல்வதாக சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடுகையில், ’ABP Live’ என்ற குஜராத்தி செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது.

2026 மார்ச் மாதம் வெளியிடப்பட்டுள்ள அந்த செய்தியில், ‘குஜராத் மாநிலம் படன் என்ற மாவட்டத்தின் ஜிலியா என்ற கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டை 15க்கும் மேற்பட்ட குண்டர்கள் ஆயுதங்களுடன் வந்து தாக்கியுள்ளனர். இது தொடர்பான 18 குற்றவாளிகளை கைது செய்த போலீஸார் அவர்களை பொது மக்கள் முன்னிலையில் அடித்து இழுத்துச் சென்றதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.
Gujarat: 18 Accused Arrested After Violent Attack
In Gujarat’s Patan district, a violent attack at a farmhouse in Jilia village on March 15 by 15–20 armed assailants left several injured and caused heavy damage. The clash was reportedly linked to an old dispute over temple… pic.twitter.com/IJQdoTX1Yz
இந்த 15க்கும் மேற்பட்ட குண்டர்கள் ஜிலியா கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டின் சுவர்கள், கதவுகளை சேதப்படுத்தியதுடன், அங்கிருந்தவர்களை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு நன்கொடை வசூலிப்பதில் ஏற்பட்ட பழைய தகராறு காரணமாக இவ்வாறு பண்ணை வீட்டை தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் ‘Shining India News’ என்ற ஊடகத்தின் ‘எக்ஸ்’ தளத்திலும் இதே செய்தியைக் காணமுடிகிறது.
இதிலிருந்து, இந்த வீடியோவில் இருக்கும் சம்பவம் குஜராத் மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்தது என்பதும் ஆயுதங்களுடன் பண்ணை வீட்டை சூறையாடிய குண்டர்களை போலீஸார் அடித்து இழுத்துச் செல்லும் காட்சி என்பதும் தெளிவாக தெரிகிறது.
முடிவு:
மூன்று மாதங்களுக்கு முன்னால் குஜராத் மாநிலத்தில் ஆயுதங்களுடன் பண்ணை வீட்டை சூறையாடிய குண்டர்களை போலீஸார் அடித்து இழுத்துச் செல்லும் வீடியோவை, தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் அடித்து இழுத்துச் செல்லப்படுவதாக என தவறாக பரப்புகிறார்கள்.