யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மௌரிய பேரரசு தொடங்கி சோழப் பேரரசு, டெல்லி சுல்தான் ஆட்சிக்காலம் உள்ளிட்ட இடைக்காலகட்டதிலும் இந்தியாவில் பல்வேறு காரணங்களால் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
பரவிய செய்தி
“ஆங்கிலேய காலனிய ஆட்சியில் அதிக அளவில் வரி வசூலிக்கப்பட்டதால், இந்தியாவில் விவசாயம் மிகவும் பாதிப்புக்குள்ளானது. மேலும், ஓப்பியம் போன்ற போதைப் செடிகளை பயிரிட காலனிய ஆட்சியாளர்கள் விவசாயிகளை கட்டாயப்படுத்தினார்கள். இதனால், இந்தியா பெருமளவு பஞ்சங்களை சந்தித்தது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன் இந்தியாவில் பஞ்சம் ஏற்பட்டதாக வரலாறே இல்லை” - ஆளுநர் ஆர்.என்.ரவி.
விரிவான விளக்கம்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட விழாவில் ஆளுநர் ஆர். என். ரவி பேசிய உரையின் சில பகுதிகளை ஆளுநர் மாளிகை அதன் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தது.
அதில், “ஆங்கிலேய காலனிய ஆட்சியில் அதிக அளவில் வரி வசூலிக்கப்பட்டதால், இந்தியாவில் விவசாயம் மிகவும் பாதிப்புக்குள்ளானது. மேலும், ஓப்பியம் போன்ற போதைப் செடிகளை பயிரிட காலனிய ஆட்சியாளர்கள் விவசாயிகளை கட்டாயப்படுத்தினார்கள். இதனால், இந்தியா பெருமளவு பஞ்சங்களை சந்தித்தது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன் இந்தியாவில் பஞ்சம் ஏற்பட்டதாக வரலாறே இல்லை” என்ற ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருந்தார்.
Excerpts from Governor Ravi’s address on World Environment Day Celebration. (2/6)
#NaturalFarming #AgroEntrepreneurs #WorldEnvironmentDay@rashtrapatibhvn @PMOIndia @HMOIndia @AgriGoI @moefcc @mygovindia @MIB_India @PIB_India @pibchennai @DDNewslive @DDTamilNews @airnewsalerts… pic.twitter.com/IOPQptbxvv
உண்மை என்ன?
ஆங்கிலேய காலனிய ஆட்சிக்கு முன்பு இந்தியாவில் பஞ்சம் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து இணையத்தில் தேடினோம். ‘Famines and Epidemics in Medieval India’ என்ற ஆய்வுக் கட்டுரையை காண முடிந்தது.
அதில், 917-918 ஆண்டுகளில் காஷ்மீரில் ஏற்பட்ட பஞ்சம், டெல்லியில் முகமது பின் துக்ளக் காலத்தில் (1290-1351) ஏற்பட்ட பஞ்சம், 13 நூற்றாண்டில் ஜியாவுதீன் பரனி ஆட்சிக்காலத்தில் (1285-1357) ஏற்பட்ட பஞ்சம் ஆகியவற்றை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மோசமான பருவநிலையாலும் வெள்ளத்தாலும் பருவமழை பொய்த்ததாலும் சோழர் ஆட்சிக்காலத்தில் (கி.பி 850-1279) பஞ்சங்கள் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ‘FAMINES AND RELIEF MEASURES UNDER THE IMPERIAL CHOLAS (850-1279 A.D.)’ என்ற ஆய்வுக் கட்டுரையிலும் பருவமழை பொய்த்ததால் ஏற்பட்ட வரட்சி காரணமாகவும், வெள்ளம் காரணமாகவும் ஏற்பட்ட பஞ்சங்கள் பற்றி எழுதப்பட்டுள்ளது.

‘FAMINE AND ECONOMIC CONDITION IN ANCIENT INDIA’ என்ற ஆய்வுக் கட்டுரையில் மௌரிய பேரரசு காலத்தில் ஏற்பட்ட பஞ்சங்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.
இதிலிருந்து, மௌரிய பேரரசு தொடங்கி சோழப் பேரரசு, டெல்லி சுல்தான் ஆட்சிக்காலம் உள்ளிட்ட காலகட்டத்தில் இந்தியாவில் பல்வேறு காரணங்களால் பஞ்சம் ஏற்பட்டுள்ளது தெரியவருகிறது.
இந்திய விவசாயகள் மீது ஆங்கிலேய காலனிய ஆட்சியாளர்கள் அதிகமான வரி விதித்தது, அதனால் விவசாயிகள் இன்னலுற்றது, மேலும் ஆங்கிலேயர்கள் இந்திய விவசாயிகளை போதைச் செடிகள் பயிரிட கட்டாயப்படுத்தியது ஆகியவை உண்மைதான். ஆனால், ஆங்கிலேய காலனிய ஆட்சிக்கு முன்பு இந்தியாவில் பஞ்சமே ஏற்பட்டதில்லை என்பது தவறான தகவலாகும். மேலும், ஆங்கிலேய ஆட்சியின் போது நிகழ்ந்த பஞ்சம் மிக கொடுமையானதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியர்கள் உணவு கிடைக்காமல் இறந்து கொண்டிருக்கும் நேரத்தில் இங்கிலாந்திற்கு 200 மில்லியன் பவுண்டு அரிசி ஏற்றுமதி செய்தது ஆங்கிலேய அரசு. இவ்வாறு இந்தியாவின் இரத்தத்தை உறிந்து இங்கிலாந்துக்கு அனுப்பும் ஆங்கிலேய அரசின் இந்த கொள்கைதான் மில்லியன் கணக்கான இந்தியர்களின் சாவுக்கு நேரடி காரணம் என்று தாதாபாய் நௌரோஜி கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முடிவு:
மௌரிய பேரரசு தொடங்கி சோழப் பேரரசு, டெல்லி சுல்தான் ஆட்சிக்காலம் உள்ளிட்ட காலகட்டத்தில் இந்தியாவில் பஞ்சங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆங்கிலேய காலனிய ஆட்சிக்கு முன்பு இந்தியாவில் பஞ்சம் ஏற்பட்டதாக வரலாறே இல்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறும் கருத்து தவறானது.