யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த வீடியோ பீகாரில் கடந்த ஜூலை மாதம் ஊரகக் காவல்படையைச் பெண் ஒருவர் தனது மகனுக்கு CPR செய்யும் போது எடுக்கப்பட்டது.
பரவிய செய்தி
இந்த சம்பவத்தில் காவல்துறையை குறை சொல்லும் தற்குறிகளே பாருங்க டா இவர்களை குறை சொல்ல உங்களுக்கு எப்படிடா மனசு வருது? #TVKVijay #Karur
விரிவான விளக்கம்
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதியன்று (சனிக்கிழமை) தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்ட போது நடந்த கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த கூட்ட நெரிசல் மரணங்கள் பற்றி பல்வேறு தரப்பினரும் பல்வேறு விதமாக கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.
கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கான காரணமாக ‘தவெக கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் வேண்டுமென்றே விஜய் வருகையை தாமதப்படுத்தினார்கள்’ என்று கரூர் காவல்துறை முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்துள்ளது.
அதேபோல், தவெக ஆதரவாளர்கள் பலர் போலீஸ் தான் குறுகலான இடத்தை ஒதுக்கியது, கூட்டம் அதிகமாக இருந்தும் அதற்கேற்றது போல் போலீஸ் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை என்றும் காவல்துறை மீது குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இந்நிலையில், பெண் காவலர் ஒருவர் மருத்துவமனையில் ஒரு சிறுவனுக்கு CPR செய்யும் வீடியோவை பதிவிட்டு, ‘மருத்துவமனையில் உயிர்களை காப்பாற்ற காவல்துறை இவ்வாறு பாடுபட்டு வரும் நிலையில் அவர்களை எப்படி உங்களால் குற்றம்சாட்ட முடிகிறது?’ என்று சமூக வலைதளத்தில் பரப்பப்படுகிறது.
இந்த சம்பவத்தில் காவல்துறையை குறை சொல்லும் தற்குறிகளே பாருங்க டா இவர்களை குறை சொல்ல உங்களுக்கு எப்படிடா மனசு வருது?
#TVKVijay #Karur#JusticeForKarurVictims pic.twitter.com/cga4gVPl1e
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடுகையில், ‘Chapra zila’ என்ற ‘எக்ஸ்’ கடந்த ஜூலை மாதம் பதிவிடப்பட்டுள்ள வீடியோவைக் காணமுடிந்தது.
एक महिला होमगार्ड के किशोर बेटे ने फांसी लगाकर आत्महत्या कर ली, वह उसे CPR देने की कोशिश कर रही है और पत्रकार पूछ रहा है कि बेटे ने फांसी क्यों लगाई !
शर्म आनी चाहिए ऐसे पत्रकारों को 😢 pic.twitter.com/EJYRfkMHIo
அதில் ‘ஊரகக் காவல்படையில் பணிபுரியும் பெண் ஒருவர் தனது பதின்பருவ மகனுக்கு அவர் CPR செய்து கொண்டிருக்கும் போது, அங்கிருந்த ஊடகவியலாளர் ஒருவர் பொறுப்பற்ற முறையில் ‘உங்கள் மகன் ஏன் தூக்கிட்டு கொண்டான்’ என்று கேட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை அடிப்படையாக கொண்டு மேலும் தேடுகையில், ‘Amar Ujala’ என்ற செய்தித்தளத்தில் கடந்த ஜூலை 31ஆம் தேதி வெளியிட்டுள்ள இதுகுறித்த செய்தியைக் காணமுடிந்தது. அதில் ‘பீகாரின் போஜ்பூர் மாவட்டத்தில் பதின்பருவ பையன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். ஆனால் அவன் மயக்க நிலையில் இருப்பதாக நினைத்து அவனது தாய் அவனுக்கு CPR செய்து உயிரை காப்பாற்ற முயற்சிக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, இந்த வீடியோ பீகாரில் கடந்த ஜூலை மாதம் ஊரகக் காவல்படையைச் பெண் ஒருவர் தனது மகனுக்கு CPR செய்யும் போது எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.
முடிவு:
கடந்த ஜூலை மாதம் பீகார் மாநிலத்தின் போஜ்பூர் மாவட்டத்தில் நடந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை, தற்போது கரூரில் நடந்த கூட்ட நெரிசலுடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்புகிறார்கள்.