யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இப்படியொரு News Card-ஐ ’புதிய தலைமுறை’ செய்தித்தளம் வெளியிடவே இல்லை. இது போலியாக உருவாக்கப்பட்ட News Card ஆகும்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
சமீப நாட்களாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பெரியார் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசிவருகிறார். சீமானின் இதுபோன்ற சர்ச்சை பேச்சுகளுக்கு பெரியாரிய ஆதரவாளர்கள், அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தோடு, கடந்த ஜனவரி 22ஆம் தேதி சீமான் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனாலும் சீமான் தொடர்ந்து பெரியார் பற்றிய சர்ச்சைக் கருத்துகளை பேசிவருகிறார். கடந்த ஜனவரி 29ஆம் தேதியன்று ‘உன் கணவன் இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்திருந்தால் நீயும் விரும்பிய ஆண்களுடன் உறவு வைத்துக் கொள் என்று சொல்லி சமூகத்தைச் சீரழித்தவர் பெரியார்’ என்று பேசினார்.
இந்நிலையில், ‘கலைஞரை கூட விமர்சிங்கள் தயவு செய்து தந்தை பெரியாரை விமர்சிக்க வேண்டாம்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சீமானுக்கு வேண்டுகோள் விடுத்ததாக News Card ஒன்றை நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.
உண்மை என்ன?
பரப்பப்படும் News Card-ல், ’புதிய தலைமுறை’ ஊடகம் 31/01/25 அன்று வெளியிட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனால், ’புதிய தலைமுறை’ செய்தித் தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வமான ’எக்ஸ்’ பக்கத்தில் இந்த News Card வெளியிடப்பட்டிருக்கிறதா? என்று தேடினோம்.
பரப்பப்படும் இந்த News Card ’புதிய தலைமுறை’-ன் அதிகாரப்பூர்வமான ’எக்ஸ்’ பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கவில்லை.
மாறாக, 12.08 PM-க்கு ”பெரியாரை மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கு நான் மரியாதை கொடுக்க தயாராக இல்லை. பெரியார் எங்களுக்கு தலைவருக்கு எல்லாம் தலைவர்” என்று பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பேட்டியளித்த News Card பதிவிடப்பட்டிருந்தது.

மேலும், ’புதிய தலைமுறை’ செய்தித்தளத்தில் “பெரியாரை அவமதிப்பவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்!” என்ற தலைப்பில் ஒரு செய்திக் கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி, வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையத்தின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த பின்பு முதல்வர் ஸ்டாலின் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த போது, ”பெரியாரை மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கெல்லாம் நான் மரியாதை கொடுக்க தயாராக இல்லை. ஏனெனில், பெரியார்தான் எங்களின் தலைவர், தலைவர்களுக்கெல்லாம் தலைவர் அவர்தான்.. ஆகவே, பெரியார்மீது விமர்சனம் செய்பவர்களை பெரிதுபடுத்தவும் இல்லை, பொருட்படுத்தவும் தேவையில்லை” என்று கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தேடிய போது, இந்த பேட்டியின் முழுநீள வீடியோ ’News18 Tamil Nadu’ சேனலின் யூட்யூப் தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. அதிலிருந்து முதல்வர் மேற்குறிப்பிட்டவாறுதான் பேசியுள்ளார் என்பதை உறுதி செய்ய முடிகிறது.

இதிலிருந்து பரப்பப்படும் இந்த News Card போலியாக உருவாக்கப்பட்ட ஒன்று என்பது உறுதியாகிறது.
முடிவு:
பெரியாரை அவமதிப்பவர்கள் பற்றிய கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்ன பதிலை திரித்து போலியான ஒரு News Card ஒன்றை உருவாக்கி நாம் தமிழர் ஆதரவாளர்கள் பரப்புகிறார்கள்.
