யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
திமுக எம்எல்ஏ மகன் அக்சய் இது குறித்து கூறுகையில், “நான் ஒழிக ஒழிக, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஒழிக என்றே கூறினேன்” என்று உறுதிபடுத்தியுள்ளார்.
பரவிய செய்தி
பொதுமக்கள் மட்டும் அல்ல, நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் நடக்கும் திமுக அரசின் செயல்பாடுகளை, திமுக எம்எல்ஏ-வின் மகனே வெளியில் சொல்லத் தொடங்கியுள்ளார். இன்று மதுரையில், விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏவின் மகன், திருப்பரங்குன்றம் கோயில் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் ஆணவ போக்கு குறித்து தனது குரலை உயர்த்தினார்.
எப்போதும் போல, இந்த அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களைப் போலவே, இந்த இளைஞரும் வேகமாகவே போலீசாரால் கைது செய்யப்பட்டார். திமுகவின் உள்ளேயே கூட அமைதியாக இருக்க முடியாத நிலை வந்திருக்கிறது என்பதே, பொதுமக்களின் பொறுமை எவ்வளவு சோதிக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாகச் சொல்லும் - முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
விரிவான விளக்கம்
மதுரையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு சென்னை வருவதற்காக, நேற்று (டிசம்பர் 08) மதியம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை விமான நிலையம் வந்தார். விமான நிலைய வளாகத்தில் அவர் நடந்து வந்தபோது, வாலிபர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் கோஷம் எழுப்பியதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், அந்த இளைஞர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தான் கோஷம் எழுப்பினார், அவர் திமுக எம்எல்ஏ-வின் மகன்’ என்று குறிப்பிட்டு முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜகவின் எஸ்.ஜி.சூர்யா உட்பட பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
மேலும் இது குறித்து நியூஸ் ஜெ, ETV Bharat, ஜீ தமிழ் நியூஸ் போன்ற ஊடகங்களும், "முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கோஷம் எழுப்பிய எம்எல்ஏவின் மகன்" என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளனர்.
மதுரை விமான நிலையத்தில் முதல்வர் திரு.@mkstalin அவர்களின் வருகையின் போது, திருப்பரங்குன்றம் விவகாரத்தை சுட்டிக்காட்டி கோஷம் எழுப்பியவர் வேறு யாருமல்ல, திமுக MLA ஜி.வி.மார்க்கண்டேயனின் மகன் தான். சொந்தக் கட்சியினரே எதிர்க்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது.
ஆனால் அதை எதிர்த்து… pic.twitter.com/XP1gRHBdDe
#ViralVídeo திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீர்ப்புக்கு எதிராக முதல்வர் செயல்பட்டதாக கோஷம் எழுப்பிய விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மகனை, வாயை பொத்தி பிடித்துச் சென்ற போலீசார்#ZeeTamilNews | #Thiruparankundram | #karthigaideepam | #mkstalin | #dmk | #viralnews pic.twitter.com/uwZHKhirmb
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவை ஆய்வு செய்து பார்த்ததில், வீடியோவில் இருக்கும் வாலிபர், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரான மார்க்கண்டேயனின் மகன் அக்சய் என்பதை அறிய முடிந்தது.
பரவி வீடியோவில் நிரூபர்கள் கேள்வி கேட்கும் போது அக்ஷய், தான் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக குரல் எழுப்பியதாகக் கூறுவதையே வீடியோவில் காண முடிந்தது.
இது குறித்து தினத்தந்தி வெளியிட்டுள்ள செய்தியில், நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக, சர்ச்சைக்குரிய வகையில் அந்த இளைஞர் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த வாலிபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் இது குறித்து திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கூறுகையில், “டெல்லியில சட்டம் படிச்சிட்டிருக்கான் என் பையன். திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தீர்ப்பளித்த அடுத்து சில தினங்களில் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டிருக்கார் மாண்பமை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அந்த நிகழ்ச்சியில் அரங்கத்தில் குத்துவிளக்கேற்றச் சொல்ல, 'மலையிலதான் ஏத்த முடியல, இங்கவாச்சும் ஏத்துவோம்' எனப் பேசியிருக்கிறார். இந்த பேச்சு அவனை பாதித்துள்ளது. எனவே தான் நீதிபதிக்கு எதிராக கோஷம் எழுப்பியுள்ளான். அவனுடைய இந்த செயலை நான் ஆதரிக்கறேன்“ என்றும் விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து அக்சய் கூறுகையிலும், “நான் ஒழிக ஒழிக, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஒழிக என்றே கூறினேன்” என்றும் உறுதிபடுத்தியுள்ளார். இந்நிலையில் ஊடகங்கள் உட்பட பலரும், நீதிபதிக்கு எதிராக அந்த இளைஞன் குரல் எழுப்பியதை, முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக குரல் எழுப்பியதகாக் கூறி தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், ‘முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கோஷம் எழுப்பிய திமுக எம்எல்ஏ மகன்’ என்று அண்ணாமலை பரப்பும் செய்திகள் தவறானவை என்பது தெளிவாகிறது.