யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
‘உப்பு சத்தியாகிரக’ போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு வியாபாரிகள் தங்களது கடைகளில் சலுகை வழங்கினர். இந்தப் பின்னணியில்தான் ‘காந்தி கணக்கு’ என்ற சொல்லாடல் உருவானது.
பரவிய செய்தி
நாம் கொடுத்த பணம் திரும்ப கிடைகாது என்று தெரிந்தால் அதை காந்தி கணக்கு என்று ஏன் சொல்லுகின்றோம்.

விரிவான விளக்கம்
வறுமையில் வாடிய வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு உதவி செய்ய தென் ஆப்பிரிக்க தமிழர்கள் ரூபாய் 5,000 வரை நிதி திரட்டினர். அந்த பணத்தை வ.உ.சியிடம் சேர்ப்பதற்காக காந்தியிடம் கொடுத்தனுப்பினார்கள். வ.உ.சி. மடல் மூலமும், நேரிலும் பலமுறை கேட்டும் அந்தப் பணத்தை காந்தி கடைசிவரை கொடுக்கவேயில்லை. இப்படி கொடுத்த பணம் திரும்ப கிடைகாது என்று நிலையைத் தான் ’காந்தி கணக்கு’ என்ற சொல்லாடல் குறிப்பதாக சமுக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன:
‘காந்தி கணக்கு’ என்ற keywords கொண்டு இணையத்தில் தேடியதில் ’இந்து தமிழ் திசை’ பத்திரிக்கையில் ‘காந்தி கணக்கு என்றால்?’ என்ற தலைப்பில் சிறு கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருப்பதைக் காணமுடிந்தது.
அதன்படி, 1930களின் தொடக்கத்தில் காந்தி தலைமையில் ‘உப்பு சத்தியாகிரக’ போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் பல்வேறு தரப்பு மக்களும் ஈர்க்கப்பட்டனர். ஆனால், சில வியாபாரிகளால் இதில் நேரடியாக கலந்துகொள்ள முடியாத நிலை இருந்தது. தார்மீக ஆதரவையும் தாண்டி ஏதாவது செய்ய விரும்பிய அந்த வியாபாரிகள், ’போராட்டத்தில் கலந்துகொள்பவர்கள் தங்களது கடைகளில் உணவு சாப்பிடலாம், ஆனால், பணம் தரத்தேவையில்லை’ என்று வியாபாரிகள் தெரிவித்தனர். போராட்டக்காரர்களை அடையாளம் தெரியாமல் வியாபாரிகள் பணம் கேட்கும் பட்சத்தில், அவர்கள் ‘காந்தி கணக்கு’ என்று சொன்னால் வியாபாரிகள் புரிந்துகொள்வார்கள் என்று திட்டமிடப்பட்டது. இதுதான் பின்னாளில் ‘காந்தி கணக்கு’ என்று பெயர்பெற்றது.

மேற்கொண்டு, வ.உ.சி.யின் வறுமை நிலையை கணக்கில் கொண்டு தென்னாப்பிரிக்காவில் திரட்டப்பட்ட நிதி காந்தியிடம் கொடுத்தனுப்பப்பட்டதாகவும் அதனை அவர் வ.உ.சி.-யிடம் கொடுக்கவில்லை என்றும் பரவும் தகவல் குறித்து தேடினோம்.
இந்த கூற்று உண்மை இல்லை என்று ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி, ’இந்து தமிழ் திசை’ பத்திரிக்கையில் விரிவான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

அதன்படி, காந்திக்கும் வ.உ.சி.க்கும் கடிதப்போக்குவரத்தின் மூலமாக நல்ல தொடர்பு இருந்திருக்கிறது. ”தென்னாப்பிரிக்காவில் திரட்டப்பட்ட பணத்தைத் தாங்கள் வரப்பெற்றீர்களா” என்ற காந்தி எழுதிய கடிதத்திற்கு, ”தாமோ தமது மனைவியோ எந்தப் பணத்தையும் பெறவில்லை” என்று மறுமொழி எழுதுகிறார் வ.உ.சி. ”அந்தப் பணம் உங்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டது என்றே இவ்வளவு காலமாகக் கருதியிருந்தேன். அந்தப் பணம் தந்தவர்களின் பட்டியலை கண்டுபிடித்து உங்களுக்கு பணத்தை அனுப்புவேன்” என்கிறார் காந்தி. ஆனால், வ.உ.சி.க்கு உதவியாக யார் யார் எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்ற பட்டியல் காந்திக்கு கிடைக்க தாமதமானது.
இதற்கிடையில் வ.உ.சி. பல நினைவூட்டல் கடிதங்கள் எழுதிய பின்னர், ஒருவழியாக வ.உ.சிக்குச் சேர வேண்டிய தொகை ரூ.347 அணா 12 அனுப்பப்பட்டுவிட்டது. இதனை உறுதிபடுத்தும் வகையில் வ.உ.சி ”ஸ்ரீமான் காந்தியவர்களிடமிருந்து 347 ரூபாய் 12 அணா வந்தது” என்று தனது நண்பர் த.வேதியப் பிள்ளைக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்.
மிகுந்த தாமதம் ஆனாலும் காந்தி அந்தப் பணத்தை அனுப்பிவிட்டார் என்பதற்கு வ.உ.சி.யின் கடிதமே சாட்சியாக இருக்கிறது.
மேற்கூறிய விவரங்களில் இருந்து, வ.உ.சி.க்கு சேரவேண்டிய பணத்தை காந்தி ஒப்படைத்துவிட்டார் என்பதும்; ’காந்தி கணக்கு’ என்ற சொல்லாடல் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் பின்னணியில் இருந்து வந்தது என்பதும் நிரூபணமாகிறது.
முடிவு:
தென் ஆப்பிரிக்க தமிழர்கள் வ.உ.சி.க்காக திரட்டிய நிதியை காந்தி வ.உ.சி.யிடம் ஒப்படைத்துவிட்டார். மேலும், ‘காந்தி கணக்கு’ என்ற சொல்லாடல் உப்பு சத்தியாகிரகப் போராட்டப் பின்னணியில் இருந்து வந்தது. கொடுத்த பணம் திரும்ப கிடைகாத நிலையை குறிக்கத்தான் ‘காந்தி கணக்கு’ என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுவதாக பரப்பப்படும் தகவல் தவறானது.