யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்கமளித்துள்ளது.
பரவிய செய்தி
கர்நாடகாவில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 7,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஹெச்ஐவி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


விரிவான விளக்கம்
சமீபத்தில் கர்நாடகா மாநிலத்தில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் 7,000-க்கும் மேற்பட்டோருக்கு HIV வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் HIV பரிசோதனைகளை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளதாக ’புதிய தலைமுறை’, ‘மின்னம்பலம்’, ‘விகடன்’ போன்ற தமிழ் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

உண்மை என்ன?
பரப்பப்படும் இந்த செய்தி குறித்த தகவல்களை இணையத்தில் தேடிய போது, ‘India Today’ ஆங்கில செய்தித்தளம் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.

ஜூலை 30ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள அந்தச் செய்தி, கர்நாடக மாநில அரசின் AIDS தடுப்பு அமைப்பான ‘Karnataka State AIDS Prevention Society (KSAPS)’ வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது.
அதன்படி இந்த அமைப்பின் திட்ட இயக்குநர் பத்ம பசவந்தப்பா கூறுகையில், ‘HIV பாதிப்புள்ள மாணவர்கள், இல்லத்தரசிகள், பிற குடும்ப உறுப்பினர்கள் என்ற தனித்தனியான வகையில் இந்த துறை விவரங்களை பராமரிப்பதில்லை’ என்கிறார். இதனால் HIV தொற்றுடன் வாழும் மாணவர்கள் பற்றிய தனியான எந்த புள்ளி விவரங்களும் இல்லை என்கிறார் அவர்.
ಕರ್ನಾಟಕದ ಕಾಲೇಜು ವಿದ್ಯಾರ್ಥಿಗಳಲ್ಲಿ 7000 ಹೆಚ್ ಐವಿ ಪಾಸಿಟೀವ್ ಕಂಡುಬಂದಿರುವ ಕಾರಣ ಕಾಲೇಜುಗಳಲ್ಲಿ ಹೆಚ್ ಐವಿ ಪರೀಕ್ಷೆಯನ್ನು ಕಡ್ಡಾಯವಾಗಿ ಹಮ್ಮಿಕೊಳ್ಳುವ ಕುರಿತಂತೆ ತಪ್ಪು ಸುದ್ದಿಗೆ ಸ್ಪಷ್ಟಿಕರಣ ನೀಡುವ ಬಗ್ಗೆ.@PIB_India @KarnatakaVarthe pic.twitter.com/1UyNxzY2PZ
மேலும், 2004ஆம் ஆண்டில் இருந்து செய்யப்பட்ட பரிசோதனைகள் மூலமாக கர்நாடகாவில் 18 முதல் 35 வயதுடைய நபர்களில் 39,000 பேருக்கு HIV தொற்று இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறுகிறார். அதேபோல், 2017ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட HIV மற்றும் AIDS தடுப்புச் சட்டத்தின் படி, ஒரு நபரின் அனுமதியில்லாமல் அவருக்கு HIV பரிசோதனை மேற்கொள்ள முடியாது என்பதையும் குறிப்பிடுகிறார்.
கல்லூரிகள், தொழில்துறைகள், மென்பொருள் நிறுவனங்கள், காவல்துறை, போக்குவரத்து மற்றும் மருத்துவக் கல்வி ஆகிய துறைகளில் HIV தொற்று குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மட்டும் தான் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் இதன்படி கல்லூரிகளில் HIV தொற்று குறித்த விழிப்புணர்வு பிரச்சாரமும் தானாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளவேண்டிய அவசியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறு ’கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், கல்லூரிகள் மாணவர்களுக்கு கட்டாய HIV பரிசோதனை நடத்தப்படவிருப்பதாகவும் சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி’ கர்நாடக மாநிலத்தின் அரசு AIDS தடுப்பு அமைப்பான KSAPS விளக்கமளித்துள்ளது.
முடிவு:
கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், கல்லூரிகள் மாணவர்களுக்கு கட்டாய HIV பரிசோதனை நடத்தப்படவிருப்பதாகவும் திரிக்கப்பட்ட தவறான செய்தியை தமிழ் ஊடகங்கள் பரப்பி வருகின்றன.