யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2006ஆம் ஆண்டின் அரசாணை மூலமாகவே தமிழ்நாட்டு பள்ளிகளில் தமிழ் கட்டாய மொழிப் பாடமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. 2016 ஆண்டிலிருந்து இது அமல்படுத்தப்படுகிறது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
தேசிய கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் ‘சமக்ர சிக்ஷா அபியான்’ திட்டத்தின் கீழ் 2,151 கோடி ரூபாய் நிதியை விடுவிப்போம் என்று ஒன்றிய அரசு கூறி வருவதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான போராட்டங்கள் கடந்த சில வாரங்களாக நடந்தது வருகிறது.
இந்நிலையில் 'தமிழ் ஜனம்' சேனலில் ஆனந்த் பிரசாத் என்பவர் “தெலுங்கானாவில் தேசிய கல்விக் கொள்கை அமலுக்கு வந்தது அதனால் அம்மாநிலத்தில் தெலுங்கு கட்டாய பாடமாக்கப்பட்டது. ஆனால் எந்த திராவிட கட்சியும் தமிழை கட்டாய மொழியாக்கவில்லை. தமிழை தமிழ்நாட்டில் கட்டாயப்படுத்தினால் மும்மொழி கொள்கை இங்கே வந்துவிடும். அதன்பின் அவர்களால் மும்மொழி கொள்கை வைத்து அரசியல் செய்ய முடியாது” என்று பேசும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கு மொழி கட்டாய மொழியாக அறிவிக்கப்பட்டது குறித்து இணையத்தில் தேடியதில், புதிய கல்விக் கொள்கை 2020 (NEP)-ன் படி, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு மொழியை கட்டாயப் பாடமாக்க தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளது பற்றிய செய்தியை காணமுடிந்தது. இந்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதியன்று தெலுங்கானா மாநில பள்ளிக்கல்விச் செயலாளர் யோகிதா ராணா வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டது குறித்து இணையத்தில் தேடுகையில், ‘The Hindu’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியை காணமுடிந்தது. 2023 மார்ச் மாதம் வெளியான அந்த செய்தி, ‘தமிழ்நாட்டில் State board பாடத்திட்டம் தவிர்த்து வெவ்வேறு பாடத்திட்டங்களின் கீழ் படிக்கும் 9,10ஆம் வகுப்பு மாணவர்கள் தமிழை கட்டாய மொழிப் பாடமாக எடுத்து படிக்க வேண்டும்’ என்று தனியார் பள்ளிகளுக்கான இயக்குனர் அறிவித்துள்ளதாக குறிப்பிடுகிறது.

மேலும் 2006ஆம் ஆண்டின் அரசாணையின்படி ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தமிழை கட்டாய மொழிப் பாடமாக படிக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி கடந்த 2015-16 கல்வியாண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பு தொடங்கி ஒவ்வொரு வகுப்பிற்கும் படிப்படியாக தமிழ் மொழி கட்டாய பாடமாக கற்பிக்கப்பட்டு வருகிறது.
தேசிய கல்விக் கொள்கையின் படி, மாணவர்கள் மூன்று மொழிகளை படிக்க வேண்டும். அதில் முதல் மொழி அந்தந்த மாநிலத்தின் சொந்த மொழி அல்லது வட்டார மொழி; இரண்டாவது ஆங்கிலம்; மூன்றாவது மொழி ஏதேனும் ஒரு இந்திய மொழி என்று குறிப்பிடப்படுகிறது. ஏதேனுமொரு இந்திய மொழி என்று சொல்லப்பட்டாலும் அந்த இந்திய மொழியாக ‘இந்தி’ தான் இருக்கும் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வியாளர்கள் மற்றும் மொழி ஆர்வலர்களால் சொல்லப்படுகிறது.
1968ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசிய கல்விக் கொள்கையில் (NEP 1968) “இந்தியாவின் கூட்டுப் பண்பாட்டின் அனைத்து கூறுகளையும் வெளிப்படுத்தும் ஊடகமாக, ஒரு இணைப்பு மொழியாக இந்தி மொழியை வளர்க்க வேண்டும்” என்று ‘இந்தித் திணிப்பு’ வெளிப்படையாக முன்வைக்கப்பட்டது.

1986ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கல்விக் கொள்கையிலும் இது தொடர்பாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ஆனால், 2020ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தேசிய கல்விக் கொள்கையில் மாணவர்கள் மூன்று மொழியை கற்க வேண்டும் என்றும் மூன்றாவது மொழி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற தேர்வுச் சுதந்திரம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால், பல கல்வியாளர்கள் இது குறித்து பேசும் போது, மூன்றாவது மொழி என்பது கடைசியில் இந்தி மொழியாகவே இருக்கும் என்று எச்சரிக்கிறார்கள். இந்தி, சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளுக்கு ஒதுக்கப்படுவது போன்று நிதியும் ஆசிரியர்களும் கட்டமைப்புகளும் மற்ற மொழிகளுக்கு வழங்கப்படுவது இல்லை என்பதை சுட்டிக் காட்டி, இறுதியில் மாணவர்கள் இந்தி மொழி கற்கும்படி கட்டாயப்படுத்தப்படுவார்கள் என்று இந்த கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா போன்ற மொழிகள் அனைத்துக்கும் வழங்கியதை விட 22 மடங்கு அதிகமாக சமஸ்கிருதத்திற்கு மட்டுமே ஒன்றிய அரசு நிதி வழங்கியுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது. பொதுவாக சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகளுக்கு மற்ற மொழிகளைவிட அதிகமாக நிதி ஒதுக்கப்படுவது பற்றி பல செய்தி ஆதாரங்கள் உள்ளன.
மேற்குறிப்பிட்ட விவரங்களில் இருந்து, தமிழ்நாட்டில் ஏற்கனவே தமிழ் மொழி கட்டாயப் பாடமாக பயிற்றுவிக்கப்படுகிறது என்பதும், தேசிய கல்விக் கொள்கை 2020ல் குறிப்பிடப்படும் மும்மொழி கொள்கை என்பது இந்தி சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை திணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதும் நிரூபணமாகிறது.
முடிவு:
தற்போது தமிழ்நாட்டில் தமிழ் கட்டாய மொழிப் பாடமாக இல்லை என்றும் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டால் மாநில மொழிகள் செழித்து வளரும் என்றும் தமிழ் ஜனம் சேனலின் ஆனந்த் பிரசாத் தவறான தகவல்களை கூறுகிறார்.
