யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2022ஆம் ஆண்டு ஊடகவியலாளர் முகமது ஜூபைர் கைது செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி, அல் கொய்தா இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாக ஜூபைர் ஹங்கர்கேகர் கைது செய்யப்பட்ட செய்தியை வெளியிட்டுள்ளது ‘தமிழ் ஜனம்'.
பரவிய செய்தி
அல் கொய்தாவுடன் தொடர்புடைய மென் பொறியாளர் ஜூபைர் புனே நகரில் கைது. மஹாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு படையினர் தீவிர விசாரணை.
விரிவான விளக்கம்
கடந்த அக்டோபர் 27ஆம் தேதி அன்று அல் கொய்தா போன்ற தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டி மென் பொறியாளர் ஜூபைர் ஹங்கர்கேகர் என்பவரை மகாராட்டிராவின் பயங்கரவாத தடுப்புப் படையினர் கைது செய்தனர்.
அவ்வாறு அவரை கைது செய்யும் போது, 19 லேப்டாப்கள், 40 செல்போன்கள் உள்ளிட தகவல் தொடர்பு உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், சென்னையில் இருந்து புனே சென்ற ஜூபைரின் நண்பரும் கைது செய்யப்பட்டதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது ‘தமிழ் ஜனம்' ஊடகம். இந்த செய்தியில் இளைஞர் ஒருவர் கைது செய்து அழைத்துச் செல்லப்படும் புகைப்படத்தை ‘தமிழ் ஜனம்’ ஊடகம் பயன்படுத்தியுள்ளது.
உண்மை என்ன?
மென் பொறியாளர் ஜூபைர் ஹங்கர்கேகர் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்டது குறித்து வெளியிடப்பட்ட செய்திகளில், கைது செய்யப்பட்டவரின் புகைப்படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. மாறாக, மாதிரி புகைப்படம் (Representation image) தான் இருந்தது.
இதனால் ‘தமிழ் ஜனம்' ஊடகம் பதிவிட்டுள்ள புகைப்படத்தை ‘Reverse Image Search' முறையில் இணையத்தில் தேடினோம். ‘The Indian Express' செய்தித்தளத்தில் வெளியிடப்பட்டிருந்த செய்தி ஒன்றில் இந்த புகைப்படத்தை காணமுடிந்தது.
2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்படுள்ள அந்த செய்தியில், Alt News என்ற உண்மை சரிபார்ப்பு இணையதளத்தின் இணை நிறுவனர் முகமது ஜூபைர் கைது செய்யப்பட்டு நான்கு நாட்கள் போலீஸ் காவலில் இருக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக அவர் ட்வீட் செய்ததற்காக கொடுக்கப்பட்ட புகாரின் பெயரில் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் முகமது ஜூபைர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதிலிருந்து இந்த செய்தியில் உள்ள புகைப்படம் 2022ஆம் ஆண்டு ஊடகவியலாளர் முகமது ஜூபைர் கைது செய்யப்பட்ட போது எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.
முடிவு:
2022ஆம் ஆண்டு ஊடகவியலாளர் முகமது ஜூபைர் கைது செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி, தற்போது அல் கொய்தா இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாக ஜூபைர் ஹங்கர்கேகர் கைது செய்யப்பட்டதாக திரிக்கப்பட்ட செய்தியை வெளியிட்டுள்ளது ‘தமிழ் ஜனம்' ஊடகம்.