யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
‘தமிழ்நாடு பனைமர தொழிலாளிகள் நலவாரியம்’ அமைத்து அதன் கீழ் பதிவு செய்யப்பட்ட தொழிலாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது தமிழ்நாடு அரசு.
பரவிய செய்தி
‘ஒன்றிய அரசு பனையேறி தொழிலை அங்கீகரித்து அடையாள அட்டை வழங்கும் நிலையில், தமிழ்நாடு அரசு பனையேறி தொழிலை அங்கீகரிக்க மறுக்கிறது’ - ‘தமிழ் ஜனம்’ செய்தி.

விரிவான விளக்கம்
ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் அமைப்புசாரா (Unorganised sector) தொழிலாளர்களை பதிவு செய்வதற்காக ‘E Shram’ என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது. அதன் கீழ் பனையேறும் தொழிலாளர்களையும் இணைத்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்குகிறது ஒன்றிய அரசு.
இது குறித்த செய்தியை வெளியிடும் போது, ‘ஒன்றிய அரசு பனையேறி தொழிலை அங்கீகரித்து அடையாள அட்டை வழங்கும் நிலையில், தமிழ்நாடு அரசு பனையேறி தொழிலை அங்கீகரிக்க மறுக்கிறது’ என்று வெளியிட்டுள்ளது ‘தமிழ் ஜனம்’ ஊடகம்.
பனையேறி தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கிய பிரதமருக்கு நன்றி...!#Chennai | #PalmOilindustry | #pmmodi | #DMK | #centralgovernment | #newsupdate | #tamiljanam pic.twitter.com/W4DlCYJylz
உண்மை என்ன?
பனையேறி தொழிலாளர்கள் குறித்து தமிழ்நாடு அரசு என்ன விதமான முன்னெடுப்புகளை செய்துள்ளது என்பது குறித்து இணையத்தில் தேடினோம்.
‘தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தின்’ அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் அவ்வாரியத்தின் கீழ் பல்வேறு தொழில்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதை காணமுடிந்தது. அதில் ‘தமிழ்நாடு பனைமரத் தொழிலாளிகள் நலவாரியம்’யும் ஒன்று. அதன் கீழ், பதனீர் தயாரித்தல், மரம் ஏறும் தொழில் என இரண்டு பிரிவுகளும் உள்ளது.

மேலும் தேடியதில், தமிழ்நாடு தொழிலாளர் துறையின் கீழ், 17 நல வாரியங்கள் செயல்பட்டு வருவதை அறியமுடிகிறது. அதில் தமிழ்நாடு பனைமர தொழிலாளிகள் நலவாரியமும் அடக்கம்.

இந்த நல வாரியத்தின் கீழ் தொழிலாளிகள் பதிவு செய்யப்படுவதும், அவ்வாறு பதிவு செய்யப்பட்ட தொழிலாளிகளுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, ஓய்வூதியம், கண் கண்ணாடி வழங்கப்படுவது, விபத்து இழப்பீடு வழங்குவது போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
உண்மை நிலை இவ்வாறு இருக்கையில், தமிழ்நாடு அரசு பனையேறி தொழிலாளர்களை அங்கீகரிக்கவில்லை என்றும் ஒன்றிய அரசுதான் தற்போது அவர்களை அங்கீகாரம் செய்து அடையாள அட்டை வழங்குவதாகவும் தவறான செய்தியை ‘தமிழ் ஜனம்' ஊடகம் வெளியிட்டுள்ளது.
முடிவு:
பனையேறி தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைத்து அவர்களை தமிழ்நாடு அரசு ஏற்கனவே பதிவு செய்து வரும் நிலையில், ‘தமிழ்நாடு அரசு பனையேறி தொழிலை அங்கீகரிக்க மறுக்கிறது; ஒன்றிய அரசு தான் பனையேறி தொழிலை அங்கீகரித்து அடையாள அட்டை வழங்குகிறது’ தவறான செய்தியை ‘தமிழ் ஜனம்' ஊடகம் வெளியிட்டுள்ளது.