யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அதிமுக தலைமை அலுவலகத்தில் LED பதாகையை திறந்து வைக்கும் போது எடப்பாடி பழனிசாமி மீது செல்போன் ஒன்று விழுந்தது.
பரவிய செய்தி
பழனிச்சாமியை செருப்பால் அடித்தது எந்த அணி.? 1) தீபா அணி 2) டிரைவர் அணி 3)4)5) பன்னீர் சசி தினா அணி 6)7)8)9) 10)வேலுமணி.. தங்கமணி.. உதயகுமார்..விஜய பாஸ்கர் செல்லூர் அணி??? 11) எடபாடி அணி!??

விரிவான விளக்கம்
அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பாக LED பதாகைகளை திறந்து வைக்கும் போது எடப்பாடி பழனிசாமி மீது செருப்பு வீசப்பட்டதாக தகவல் பரப்பப்படுகிறது. அதிமுக கட்சி எடப்பாடி பழனிசாமி, ஓபிஸ், சசிகலா, டி.டி.வி.தினகரன் எனப் பல பிரிவுகளாக பிரிந்திருப்பதை சுட்டிக்காட்டி, அவற்றில் எந்த அணி இப்படி செருப்பை வீசியிருக்கும் என்று கேள்வி எழுப்பும் வகையில் திமுக ஆதரவாளர்களின் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டிருந்தது.

உண்மை என்ன?
எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டிருந்த படத்தின் key frame-களைக் கொண்டு தேடுகையில் ’One India' செய்தி தளத்தில், எடப்பாடி மீது போன் விழுந்ததாக வெளியான செய்தியை காண முடிந்தது.
அதிமுக கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஆலோசனைக் கூட்டம் அக்டோபர் 1 ஆம் தேதி அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, LED பதாகைகளை திறந்து வைக்கும் போது, அவர் மீது செல்போன் ஒன்று விழுந்தது. இந்த சம்பவத்தை 'வேந்தர் நியூஸ்’ ஒளிபரப்பிய காணொளியில் எடப்பாடி பழனிசாமி மீது விழுந்தது ’செல்போன்’ தான் என்பதற்கான போதிய ஆதாரங்கள் இருக்கிறது.

மேலும், இதைப்பற்றி ’மின்னம்பலம்' வெளியிட்டுள்ள செய்தியில், நிர்வாகி ஒருவர் போட்டோ எடுக்கும் போது தெரியாமல் செல்போன் எடப்பாடி மீது விழுந்துவிட்டதாக அதிமுகவினர் விளக்கமளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முடிவு:
எடப்பாடி பழனிசாமி மீது செருப்பு வீசப்பட்டதாக பரப்பப்படும் தகவல் பொய்யானது. அவர் மீது விழுந்தது செல்போன் தான் என்பது நிரூபணமாகியுள்ளது.