யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கோவிலில் மயங்கி விழுந்த கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பாம்பு தண்ணீர் கொடுத்து உதவியதாகப் பரவும் சித்தரிக்கப்பட்ட வீடியோ.
பரவிய செய்தி
நாகர்கோயில் நாகராஜா கோயிலில் நடந்த அதிசயம்
விரிவான விளக்கம்
கோவிலில் உள்ள மரத்தைச் சுற்றி வரும் பெண் மயக்கமடைந்த நிலையில், அவரின் மயக்கத்தைத் தெளிய வைக்கப் பாம்பு ஒன்று அருகிலிருந்த தண்ணீரை அப்பெண் எடுத்துக் குடிக்க ஏதுவாக தட்டிவிட்டு உதவியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. இந்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் உள்ள நாகராஜா கோவிலில் நடந்ததாகப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
🪷 நாகர்கோயில் நாகராஜா கோயிலில் நடந்த அதிசயம்.... pic.twitter.com/42gzNRDTBt
— Lion kalaivani Ravi Hindu Nadar ... (@Kalaivaniravi6) July 28, 2024
உண்மை என்ன ?
பரவக்கூடிய வீடியோவை slow motion-ல் பார்த்தால் அது உண்மையான பாம்பா என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது. அதுமட்டுமின்றி, மரத்தைச் சுற்றியுள்ள தடுப்பு சுவரின் மீதுள்ள பாம்பு, சுவரின் வடிவத்திற்கு ஏற்ப வளையாமல் கம்பிபோல் நேராக இருப்பதைக் காண முடிகிறது.

இந்த சந்தேகங்களின் அடிப்படையில் வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடினோம். இதன் முழு வீடியோ ‘3RD EYE’ என்ற யூடியூப் பக்கத்தில் கடந்த மே மாதம் 15ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது.
அப்பதிவில், இந்த சேனலில் சித்தரிக்கப்பட்ட வீடியோக்கள் விழிப்புணர்வு மற்றும் பொழுதுபோக்கு நோக்கத்திற்காக வெளியிடப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து இந்த வீடியோ VFX தொழில் நுட்ப உதவியுடன் எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது. இப்படிப் பல சித்தரிக்கப்பட்ட வீடியோக்களை அந்த யூடியூப் பக்கத்தில் காண முடிகிறது.

மேலும் இந்த வீடியோ எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்பது குறித்த எந்த தகவலும் அப்பதிவில் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் அப்பக்கத்தில் உள்ள மற்ற வீடியோக்களில் உள்ள வாகன எண்கள் ‘TS' எனத் தொடங்குவதைப் பார்க்க முடிகிறது. இதனைக் கொண்டு இந்த வீடியோக்கள் தெலங்கானாவில் எடுத்திருக்கலாம் எனக் கருத முடிகிறது.
இப்படிச் சித்தரிக்கப்பட்ட வீடியோக்கள் உண்மை என்று பரப்பப்பட்ட போது அது குறித்து யூடர்ன் தளத்தில் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: வயதான புரோகிதருக்கும், பள்ளி மாணவிக்கும் திருமணம் நடப்பதாகப் பரவும் சித்தரிக்கப்பட்ட வீடியோ !
முடிவு:
கோவிலில் மயங்கி விழுந்த பெண்ணுக்குப் பாம்பு தண்ணீர் கொடுத்து உதவியதாகப் பரவும் வீடியோ சித்தரிக்கப்பட்டு எடுக்கப்பட்டது.
