யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் பிறந்தது 1931 ஆம் ஆண்டில். அவர் 1939-ல் தன்னுடைய எட்டு வயதில் ராமேஸ்வரம் தொடக்கப் பள்ளியில் ஐந்தாவது வகுப்பை படித்துள்ளார். காமராஜர் ஆட்சிக்கு வந்தபோது அப்துல்கலாமுக்கு வயது 22.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
"நேரலை 27-07-2025 சீமான் செய்தியாளர் சந்திப்பு -பம்மல்" என்ற தலைப்பில் செந்தமிழன் சீமான் என்ற யூடியூப் பக்கத்தில், காமராஜர் குறித்து சீமான் பேசிய வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில் சரியாக 19.05 நிமிடத்தில், காமராஜர் திறந்த பள்ளிக்கூடத்தில் தான் அனைவரும் படித்ததாகவும், அப்துல்கலாமே அவர் திறந்த பள்ளியில் தான் படித்ததாகவும் சீமான் கூறியிருந்தார்.
உண்மை என்ன?
முதலில் காமராஜர் முதலமைச்சரான ஆண்டு குறித்து தேடி பார்த்தோம். அப்போது Times Of India ஊடகத்தில் "The man who built Tamil Nadu: How K Kamaraj created blueprint for state's economic and educational transformation" என்ற தலைப்பில் ஜூலை 14,2023 அன்று ஒரு செய்தி கட்டுரை வெளியாகியிருந்த்தை பார்க்கமுடிந்தது. அதில் சுதந்திரத்துக்குப் பிறகு மதராஸ் மாகாணத்தின் முதல்வராக காமராஜர் ஆட்சிக்கு வந்தநாள் ஏப்ரல் 14, 1954 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே போல் Hindu Tamil ஊடகத்தில் "சுதந்திரச் சுடர்கள் | தமிழ்நாடு: மகத்தான மதிய உணவுத் திட்டம்" ஆகஸ்ட் 23,2022 அன்று ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதில் 1956 ஆம் ஆண்டில் மதிய உணவுத் திட்டத்தை மக்கள் பங்களிப்புடன் கூடிய திட்டமாக தமிழகம் முழுவதும் முழுமை அடையச் செய்தவர் காமராஜர்தான் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் பிறந்தது, படித்தது குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது அவரின் சுயசரிதையான "WINGS OF FIRE" புத்தகத்தின் pdf கிடைத்தது. அதில் அப்துல் கலாம் பிறந்தது 1931ஆம் ஆண்டு என்றும், அவர் 1939-ல் தன்னுடைய எட்டு வயதில் ராமேஸ்வரம் தொடக்கப்பள்ளியில் ஐந்தாவது வகுப்பை படித்துள்ளார் என்றும் குறிப்பிட்டிருந்தது. மேலும் காமராஜர் ஆட்சிக்கு வந்தபோது அப்துல்கலாமுக்கு வயது 22 ஆகும். இதனால் காமராஜர் திறந்த பள்ளிக்கூடத்தில் தான் அப்துல்கலாம் படித்தார் என்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

முடிவு:
எனவே, காமராஜர் திறந்த பள்ளிக்கூடத்தில் படித்தவர் தான் அப்துல்கலாம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உண்மைக்கு புறம்பான செய்திகளை கூறியுள்ளார்.
