யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்தியாவில் எத்தனால் பயன்பாடு கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்தே செயல்பாட்டில் இருந்து வருகிறது.
பரவிய செய்தி
“எத்தனால் என்பது பெட்ரோல். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கரும்பிலிருந்து எத்தனால் உற்பத்தி செய்து எரிபொருள் தயாரிப்போம். இதை பிரேசில் தான் செய்து வருகிறது” - நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
விரிவான விளக்கம்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையடுத்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாளையங்கோட்டையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது, “எத்தனால் என்பது பெட்ரோல். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கரும்பிலிருந்து எத்தனால் உற்பத்தி செய்து எரிபொருள் தயாரிப்போம். இதை பிரேசில் தான் செய்து வருகிறது. இந்த எத்தனாலில் ஓடுவது போன்று நாம் கார் போன்ற வாகனங்களை மாற்றி அமைத்துக் கொள்கிறோம். ஒருவேளை முடியவில்லை என்றாலும் இதை வைத்து நாம் எரிபொருள் தாயரிக்க போகிறோம். மின்சாரம் தயாரிக்க போகிறோம்” என்று பேசியுள்ளார்.
உண்மை என்ன?
பரவி வரும் தகவல்கள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இந்தியாவில் எத்தனால் பயன்பாடு கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்தே செயல்பாட்டில் இருந்து வருகிறது. எத்தனால் பயன்பாடு மூலம், இந்தியா 2014 ஆம் ஆண்டிலிருந்து 69.8 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் குறைக்கவும், 1.36 டிரில்லியன் ரூபாய் (15.5 பில்லியன் டாலர்; 11.5 பில்லியன் பவுண்ட்) அந்நியச் செலாவணியைச் சேமிக்கவும் உதவியுள்ளது என்பதை செய்திகளின் மூலம் அறிய முடிந்தது.
E20 எத்தனால் இலக்கு என்பது, 80% பெட்ரோல் மற்றும் 20% எத்தனால் (ethanol) கலந்து பயன்படுத்தும் அரசின் திட்டம் ஆகும். E10 எத்தனாலே பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம், பிரேசில் பல ஆண்டுகளாக E27 எரிபொருளைப் பயன்படுத்தி வருவகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில், 2014-ல், எத்தனால் கலப்பு வெறும் 1.53% ஆக இருந்தது. 2022-க்குள், இந்தியா 10% எத்தனால் கலப்பை அடைந்தது, தொடர்ந்து ‘E20’ எத்தனால் இலக்கை 2050க்குள் அடையவேண்டும் என்று திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது 2030க்கும் இந்த இலக்கை அடைய முடியும் என்றும் அறிவித்துள்ளது.
குறிப்பாக கடந்த ஏப்ரல் 1, 2025 முதல், நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்கள் 20 சதவீதம் வரை எத்தனால் கலந்த எரிபொருளை தான் வழங்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசும், “தமிழ்நாடு எத்தனால் கலப்புக் கொள்கை 2023” என்ற திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறது.
மேலும் கரும்பிலிருந்து மட்டும் எத்தனால் தயாரித்து வந்த இந்தியா, கடந்த 2018-19 முதல், அரிசி, மக்காச்சோளம் மற்றும் சேதமடைந்த உணவு தானியங்களிலிருந்தும் எத்தனால் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
முடிவு:
நம் தேடலில், இந்தியாவில் பெட்ரோலில் எத்தனால் கலப்பு என்பது நாதக ஆட்சிக்கு வந்ததும் தான் தொடங்கப்படப்போவது போன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தவறான தகவலைப் பரப்பி வருகிறார் என்பதை அறிய முடிகிறது.