யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சீமான் சாவர்க்கர் குறித்து பெருமையாகப் பேசியதாகப் பரவும் புதிய தலைமுறை நியூஸ் கார்டுகள் போலியாக உருவாக்கப்பட்டவை.
பரவிய செய்தி
விடுதலைக்காக போராடியது ஆர்.எஸ்.எஸ் இயக்கம்! இந்தியாவின் விடுதலைக்காக போராடியது ஆர்.எஸ்.எஸ் இயக்கம் ஆனால், சுதந்திர தினத்தை கருப்பு நாளாக அறிவித்தவர் பெரியார் அவரை நாங்கள் அம்பலப்படுத்த வேண்டாமா? -நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

விரிவான விளக்கம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து அவதூறான கருத்துக்களைப் பல மேடைகளிலும் செய்தியாளர் சந்திப்புகளிலும் தொடர்ந்து பேசி வருகிறார்.
சொல்லிட்டான்.. https://t.co/eE7VfpAVpS pic.twitter.com/3PiE1AujZJ
அந்த வகையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும் சாவர்க்கருக்கும் ஆதரவாகச் சீமான் பேசியதாக ’புதிய தலைமுறை’ நியூஸ் கார்டு சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. மேலும் ’சீமான் ஆபத்தான அரசியல் பேசுகிறார்’ என வெற்றிமாறன் விமர்சித்ததாகவும் ’நியூஸ் 18 தமிழ்நாடு’ நியூஸ் கார்டு பரப்பப்படுகிறது.

சாவர்க்கர் குறித்து சீமான் பெருமையாகப் பேசியதாகப் பரவும் அதே நியூஸ்கார்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய கருத்து என்றும் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன?
முதல்வர் ஸ்டாலின் மற்றும் சீமான் இருவரும் சாவர்க்கர் குறித்துப் பேசியதாகப் பரவக் கூடிய நியூஸ் கார்டில் இருப்பது போன்று ஏதேனும் கருத்து தெரிவித்துள்ளனரா எனத் தேடியதில், அப்படி எந்த செய்தியும் கிடைக்கவில்லை. புதிய தலைமுறை ஊடகமும் அப்படி எந்த செய்தியும் வெளியிடவில்லை.
பரவக் கூடிய நியூஸ் கார்டு ஒன்றில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் பேசியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் பிரச்சாரத்தில் அப்படி எதுவும் பேசவில்லை என்பது அவர் பேசிய முழுமையான வீடியோவை பார்க்கும் போது அறிய முடிந்தது.
இதேபோன்று விடுதலைக்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு போராடியதாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாகவும் பரப்பப்படுகிறது. அவர் அப்படி எங்கும் பேசவில்லை. புதிய தலைமுறையும் அப்படி எந்த நியூஸ் கார்டையும் வெளியிடவில்லை. இவற்றிலிருந்து ஸ்டாலின் மற்றும் சீமான் குறித்து பரவக் கூடிய நியூஸ் கார்டுகள் போலியாக உருவாக்கப்பட்டவை என்பது உறுதியாகிறது.
அடுத்ததாக, ‘சீமான் ஆபத்தான அரசியல் பேசுகிறார்’ என இயக்குநர் வெற்றிமாறன் விமர்சித்ததாகப் பரவும் நியூஸ் கார்டு குறித்துத் தேடினோம். நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகம் அப்படி எந்த செய்தியும் வெளியிடவில்லை.
மேற்கொண்டு தேடியதில், இதே போன்ற கருத்தைச் சீமான் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் டாக்டர்.திருமாவளவன் பேசி இருந்ததை புதிய தலைமுறை ஊடகத்தில் காண முடிந்தது.
#Thirumavalavan | #VCK | #Seeman | #NTK pic.twitter.com/TRwjZKCMgM
அதில், ”சீமானின் போக்கு மிகக் கவலை அளிக்கக் கூடியவையாகவும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகவும் இருக்கிறது. அவர் ஏன் இவ்வாறு செயல்படுகிறார், இவ்வாறு பேசுகிறார் என்று விளங்கவில்லை. அவரை யார் இப்படி உசுப்பி விடுகிறார்கள் என்றும் தெரியவில்லை. அவரது போக்கு தமிழ்நாடு மக்களுக்கு நேர் எதிரானதாக இருக்கிறது. மிகவும் ஆபத்தான அரசியலை அவர் பேசுகிறார். அது அவருக்கும் நல்லதல்ல. தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லதல்ல. அவரை பின்பற்றும் தோழர்கள் இவற்றை மிகக் கவனமாக அணுக வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” எனத் திருமாவளவன் கூறியுள்ளார்.
இதிலிருந்து சீமான் குறித்து மேற்கண்ட கருத்தை வெற்றிமாறன் கூறவில்லை என்பதை அறிய முடிகிறது. இதுவும் போலியாக உருவாக்கப்பட்டது.
முடிவு:
சீமான் சாவர்க்கர் குறித்து பெருமையாக எதுவும் பேசவில்லை. அவர் குறித்து புதிய தலைமுறை மற்றும் நியூஸ் 18 தமிழ்நாடு பெயரில் பரவும் நியூஸ் கார்டுகள் போலியாக உருவாக்கப்பட்டவை.