யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சந்தோஷ் மறுப்பு தெரிவிக்கவும் இல்லை. நியூஸ் 18 அப்படி செய்தியும் வெளியிடவில்லை. இது போலியாக உருவாக்கப்பட்ட நியூஸ் கார்டு.
பரவிய செய்தி
சீமானோடு விவாதிக்க தயாராக இல்லை! பிரபாகரன் - சீமான் சந்திப்பு குறித்து நியூஸ் 18-க்கு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் கொடுத்த நேர்காணலைத் தொடர்ந்து அவருடன் நேருக்கு நேர் விவாதிக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சீமானோடு விவாதிக்க எதுவும் இல்லை, என மறுப்பு தெரிவித்த ஒளிப்பதிவாளர் சந்தோஷ்!

விரிவான விளக்கம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டதாக நீண்ட காலமாக ஒரு புகைப்படம் உள்ளது. இப்புகைப்படம் உண்மையானது கிடையாது என்றும் இதனை எடிட் செய்து உருவாக்கியது தான் தான் என்றும் திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் என்பவர் தெரிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.
இதன் தொடர்ச்சியாகச் சீமான் பிரபாகரனைச் சந்தித்த போது உடன் இருந்த ஒளிப்பதிவாளர் சந்தோஷ் என்பவர் நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகத்திற்கு நேர்காணல் அளித்தார். சீமான் - பிரபாகரன் சந்திப்பின் போது நடந்தவை குறித்து சீமான் சொல்பவை பொய்யானவை. இது குறித்து அவருடன் நேரடியாக விவாதிக்கத் தயார் என்று அவர் பேசி இருந்தார்.
இந்த விவாதத்திற்குச் சீமான் விருப்பம் தெரிவித்ததாகவும் இந்நிகழ்ச்சியை நியூஸ் 18 தமிழ்நாடு ஒருங்கிணைக்கத் தயாராக இருப்பதாகவும் செய்தி வெளியானது. பிறகு சீமானோடு விவாதிக்க எதுவும் இல்லையென ஒளிப்பதிவாளர் சந்தோஷ் பின்வாங்கியதாக ’நியூஸ் 18’ செய்தி வெளியிட்டுள்ளது என நாம் தமிழர் கட்சியினர் நியூஸ் கார்டு ஒன்றை பரப்புகின்றனர்.

உண்மை என்ன?
விவாதத்திற்கு சந்தோஷ் பின்வாங்கியதாகப் பரவும் நியூஸ் கார்டு குறித்து ‘நியூஸ் 18 தமிழ்நாடு’ சமூக பக்கங்களில் ஆய்வு செய்தோம். அப்படி எந்த நியூஸ் கார்டும் அவர்கள் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது.
சந்தோஷ் வேறு ஏதேனும் சமூக ஊடகத்தில் இத்தகைய தகவல் தெரிவித்தாரா என்பது குறித்தும் தேடினோம். அப்படி எந்தப் பதிவும் கிடைக்கவில்லை.
பரவக் கூடிய நியூஸ் கார்டையும் நியூஸ் 18 பக்கத்தில் உள்ள நியூஸ் கார்டையும் ஒப்பிட்டுப் பார்த்ததில், எழுத்துரு (font) மற்றும் வாட்டர் மார்க் வித்தியாசப்பட்டு இருப்பதையும் காண முடிந்தது.
மேற்கண்ட ஆதாரத்திலிருந்து சீமானுடனான விவாதத்தில் கலந்து கொள்ள சந்தோஷ் மறுப்பு தெரிவித்ததாகப் பரவும் தகவல் பொய்யானது என்பதையும், நியூஸ் 18 தமிழ்நாடு அப்படி எந்த நியூஸ் கார்டும் வெளியிடவில்லை என்பதையும் அறிய முடிகிறது.
முடிவு:
சீமானுடனான விவாதத்தில் கலந்து கொள்ள ஒளிப்பதிவாளர் சந்தோஷ் மறுப்பு தெரிவித்ததாகப் பரவும் தகவல் தவறானது. சந்தோஷ் மறுப்பு தெரிவிக்கவும் இல்லை. நியூஸ் 18 அப்படி செய்தியும் வெளியிடவில்லை. இது போலியாக உருவாக்கப்பட்ட நியூஸ் கார்டு.