யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அப்புகைப்படம் எடிட் செய்யப்பட்டது கிடையாது. உண்மையானதுதான் என ரவீந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
பரவிய செய்தி
AI பண்றீங்க சரி…. பின்னால இருக்கிற கொண்டைய மறந்துட்டீங்களேடா அப்ரிசென்டுகளா. இன்னும் கொஞ்சம் பயிற்சி வேண்டுமோ?

விரிவான விளக்கம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரு தினங்களுக்கு முன்னர் (நவ.21) நடிகர் ரஜினியைச் சந்தித்தார். சந்திப்பைக் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ‘இது மரியாதை நிமிர்த்தமான சந்திப்புதான். திரைத்துறை குறித்தும் அரசியல் குறித்தும் பேசினோம்’ எனக் கூறினார்.

இதனை தொடர்ந்து சீமான் - ரஜினி எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளிவரத் தொடங்கியது. அப்படி வெளியான புகைப்படத்தில் சீமான், ரஜினி மற்றும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி உள்ளனர். RSS ஆதரவாளர் ரவீந்திரனுடன் சீமான் இருப்பதாகக் கூறி விமர்சனங்கள் எழுந்தன. இந்த புகைப்படம் AI தொழில்நுட்பத்தின் மூலம் எடிட் செய்யப்பட்டதென நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை என்ன?
சீமான் - ரஜினி சந்திப்பின் போது உடன் இருந்த ரவீந்திரன் துரைசாமி புதிய தலைமுறை, ஆதன் நியூஸ் எனப் பல ஊடகங்களுக்கு அளித்த நேர்காணல் யூடியூபில் உள்ளது. 2 மணி நேரத்திற்கும் மேலான சந்திப்பில் ஒன்றரை மணி நேரம் தானும் உடன் இருந்ததாக ரவீந்திரன் குறிப்பிடுகிறார்.
மேலும், இந்த சந்திப்பின் அடிப்படை மற்றும் எம்மாதிரியான விஷயங்கள் விவாதிக்கப்பட்டது எனப் பல தகவல்களைப் பேசியுள்ளார். ஆதன் நியூஸ் யூடியூப் வீடியோவின் thumbnail-லிலும் பரவக் கூடிய புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
இந்த புகைப்படம் உண்மையில் எடுக்கப்பட்டதா அல்லது போலியானதா என்பதை அறிய யூடர்னில் இருந்து ரவீந்திரன் துரைசாமியைத் தொடர்பு கொண்டு பேசினோம்.
”சீமான் - ரஜினி மற்றும் நான் இருக்கக்கூடிய புகைப்படம் உண்மையானதுதான். இந்த படத்தைப் போலி எனச் சொல்லிப் பொய் செய்தியைப் பரப்புகின்றனர்” என விளக்கம் அளித்தார். மேலும் அப்போது எடுக்கப்பட்ட வேறுசில படங்களையும் யூடர்னுடன் பகிர்ந்தார்.

இவற்றிலிருந்து சீமான் - ரஜினியின் சந்திப்பின் போது ரவீந்திரன் துரைசாமி உடன் இருந்தார் என்பதும் பரவக் கூடிய புகைப்படம் அப்போது எடுக்கப்பட்டதுதான் என்பதும் உறுதியாகிறது.
இந்த சந்திப்பு குறித்து ஆதன் நியூசிற்கு நேர்காணல் அளித்த ரவீந்திரன், 2024 தேர்தலின் போது மோடிக்கு ஆதரவாக மகாராஷ்டிராவில் ரஜினி பிரச்சாரம் செய்ய வேண்டுமெனக் கூறியதாகத் தெரிவிக்கிறார். ரவீந்திரன் பல இடங்களில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு ஆதரவாகப் பேசியுள்ளார். இதனாலேயே ரஜினியைச் சீமான் சந்திக்கும் போது ரவீந்திரன் உடன் இருந்தது அரசியல் ரீதியாக விமர்சிக்கப்படுகிறது.
முடிவு:
சீமான் - ரஜினி சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ரவீந்திரன் துரைசாமி இருப்பது போல் எடிட் செய்துள்ளதாகப் பரவும் தகவல் தவறானது. அப்புகைப்படம் எடிட் செய்யப்பட்டது கிடையாது. உண்மையானதுதான் என ரவீந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.