யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தமிழ்நாட்டில் கோவில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கும்பாபிஷேகம் திமுக ஆட்சியில் நடத்தப்பட்டுள்ளது.
பரவிய செய்தி
”ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோவில்களில் அன்னதானம் நடைபெற்று வந்தது. திமுக ஆட்சியில் அதனை நிறுத்திவிட்டார்கள்; மேலும், திமுக ஆட்சியில் ஆண்டாள் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை” - சசிகலா.
விரிவான விளக்கம்
சசிகலா தொடங்கியுள்ள ’அனைத்து இந்தியா புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ புதிய கட்சியும், பாமக நிறுவனர் ராமதாஸ்-ம் கூட்டணி அமைத்து தேர்தல் போட்டியிடுவதாக முடிவெடுத்தனர். இந்நிலையில், ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் பிரச்சாரம் செய்த சசிகலா, ‘திமுக ஆட்சியில் ஆண்டாள் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் நாங்கள் தான் கும்பாபிஷேகம் நடத்தினோம். மேலும், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழ்நாட்டில் பல முக்கிய கோவில்களில் அன்னதானம் நடைபெற்று வந்தது. திமுக ஆட்சியில் அதனை நிறுத்திவிட்டார்கள்’ என்று பேசினார்.
உண்மை என்ன?
தமிழ்நாட்டில் கோவில்களில் அன்னதானம் வழங்கப்படுவது குறித்த இணையத்தில் தேடினோம். இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ‘2025-26 ஆண்டுக்கான சட்டமன்ற அறிவிப்புகள்’ என்னும் ஆவணத்தில் இது பற்றிய குறிப்புகளைக் காணமுடிந்தது.

அதில், ‘தமிழ்நாட்டில் இதுவரை 13 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது, இந்த ஆண்டு முதல் மேலும் 2 கோவில்களுக்கு அது விரிவுபடுத்தப்படும். திருவிழா நாட்களில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், இருக்கண்குடி மாரியம்மன் கோவில் ஆகிய இரண்டு கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும். தமிழ்நாடு முழுவதும் 764 கோவில்களில் ஒரு வேளை அன்னதானம் வழங்கும் திட்டம் மேலும் 6 கோவில்களுக்கு விரிவுபடுத்தப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு ‘One India’ செய்தித்தளத்தில் வெளியான செய்தியின்படி, ’ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2000-ம் ஆண்டு பிரவரி 10-ம் தேதி நடைபெற்றது’ என்பது தெரிய வருகிறது. அப்போது திமுக தான் ஆட்சியில் இருந்தது. கருணாநிதி தான் முதல்வராக இருந்தார்.

மேலும், ஆகம விதிகளின் படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தவேண்டும். அந்த வகையில் 2012 ம் ஆண்டு ஆட்சியிலிருந்த அதிமுக அரசு கும்பாபிஷேகம் நடத்திருக்கவேண்டும். ஆனால் அதனை செய்யாமல் நான்காண்டு காலம் தாழ்த்தி 2016 ஜனவரியில் தான் கும்பாபிஷேகம் நடத்தினார்கள்.
மேலும் வரும் 2027ஆம் ஆண்டு ஆண்டாள் கோவில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் மூலமாக அறிய முடிகிறது.
முடிவு:
திமுக ஆட்சியில் கோவில்களில் அன்னதானம் நிறுத்தப்பட்டுவிட்டது, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை என்று சசிகலா தவறான தகவல்களை பரப்பி வருகிறார்.