யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மும்பையில் கண்டுபிடிக்கப்பட்ட நாட்டு மருந்தை அரசு அங்கீகரித்துள்ளதாகப் பரவி வரும் செய்திகள் தவறானவை. அரசு இது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
பரவிய செய்தி
மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் மும்பையில் கண்டுபிடித்த நாட்டு மருந்தை அரசு அங்கிகரித்துள்ளது. ஒரு ஸ்பூன் மிளகு பொடியும், இரண்டு ஸ்பூன் தேனும், கால் ஸ்பூன் இஞ்சி சாறும் கலந்து வெறும் வயிற்றில் நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் 100% கொரானாவை தடுத்துவிடலாம். எத்தனை பேருக்கு உங்களால் உதவ முடியுமோ உதவுங்கள்.
விரிவான விளக்கம்
இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவி வருகிறது. இதுவரை நாடு முழுவதும் 3,961 பேருக்கு தொற்று பாதித்துள்ளது என ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் தலா ஒருவர் என நான்கு பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஜனவரி 1 முதல் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32-ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் இணை நோய் உள்ளவர்கள் எனவும் ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மும்பையில் கண்டுபிடிக்கப்பட்ட நாட்டு மருந்தை அரசு அங்கீகரித்துள்ளதாகக் கூறி நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அதில், “ஒரு ஸ்பூன் மிளகு பொடியும், இரண்டு ஸ்பூன் தேனும், கால் ஸ்பூன் இஞ்சி சாறும் கலந்து வெறும் வயிற்றில் 5 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் 100% கொரானாவை தடுத்துவிடலாம்“ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்ததில், அரசு இது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது.
மேலும் உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) இணையதளத்தில் இது குறித்து தேடியதில், "இஞ்சி, தேன் மற்றும் கருப்பு மிளகு ஆகியவை COVID-19 தொற்றிலிருந்து பாதுகாக்கின்றன என்பதற்கு எந்தவொரு அறிவியல்பூர்வ ஆதாரமும் இல்லை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதே போன்று, PIB இணையப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியிலும், “கருப்பு மிளகு, இஞ்சி மற்றும் தேன் ஆகியவை கோவிட்-19 நோய்க்கு சிகிச்சை அளிப்பதாக பரவி வரும் செய்திகள் தவறானவை. இது போன்ற செய்திகளைப் பகிர வேண்டாம். சரியான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வமான செய்திகளை மட்டுமே நம்புங்கள்“ என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு முன்பும், “கொரோனாவால் பாதிக்கப்பட்ட உடலை பிரேத பரிசோதனை செய்த உலகின் முதல் நாடாக சிங்கப்பூர் மாறியுள்ளது. முழுமையான விசாரணைக்குப் பிறகு, COVID-19 ஒரு வைரஸாக இல்லை, மாறாக கதிர்வீச்சுக்கு ஆளாகி இரத்தத்தில் உறைந்து மனித மரணத்தை ஏற்படுத்தும் ஒரு பாக்டீரியாவாக இருப்பது கண்டறியப்பட்டது” என்று கூறி செய்திகள் பரவின. இவையும் தவறான செய்திகளே.
சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம், இது குறித்து எந்த ஆய்வையும் நாங்கள் மேற்கொள்ளவில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில், கடந்த 2021-லேயே கட்டுரை வெளியிட்டிருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: சிங்கப்பூர் WHO-க்கு எதிராக கொரோனா நெறிமுறைகளை மாற்றியதா ?
முடிவு:
நம் தேடலில், கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க மும்பையில் கண்டுபிடிக்கப்பட்ட நாட்டு மருந்தை அரசு அங்கீகரித்துள்ளதாகப் பரவி வரும் செய்திகள் தவறானவை என்பது உறுதியாகிறது.