யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மேற்கூறிய சம்பவங்களுக்கும் R.N. ரவி-க்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அந்த சம்பவங்கள் நடக்கும் போது அவற்றை கட்டுப்படுத்தும் அளவிற்கு அதிகாரமுள்ள பதவியில் R.N.ரவி இருந்திருக்கவில்லை.
பரவிய செய்தி
‘இந்திய அரசு நடத்திய, சர்ஜிகல் ஸ்டிரைக் பாகிஸ்தான், சர்ஜிகல் ஸ்டிரைக் மியான்மர், ஆப்பரேஷன் ப்ளூ ஸ்டார் பஞ்சாப், ஆப்ரேஷன் தன்டன்வாடே, ஆபரேஷன் அண்டர்வேர்ல்ட் மும்பை போன்ற நடவடிக்கைகளில் ஆளுநர் R.N.ரவி-யின் பாத்திரம் முக்கியமானது’

விரிவான விளக்கம்
தமிழக ஆளுநர் R. N. ரவி, தமிழ்நாடு அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். மேலும், தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கிறார்.
இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த ரிட் மனு தாக்கல் செய்தது இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை 06/02/25 அன்று நடந்தது. 'தமிழ்நாடு அரசு சமர்பிக்கும் மசோதாக்களை ஏற்றுக்கொள்ளாத ஆளுநர் அவற்றின் மீது கருத்துக்கள் திருத்தங்கள் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அவர் அரசியலமைப்பு படி நடக்காமல் தனக்கென சொந்த நடைமுறையை உருவாக்கிக்கொண்டதாக தெரிகிறது' என்று ஆளுநர் பற்றி சரமாரியாக கருத்து தெரிவித்தது உச்ச நீதிமன்றம்.
ஆளுநர் பற்றிய உச்ச நீதிமன்றத்தின் இந்த கருத்துக்கள் ஊடகங்களில் பேசு பொருளாதனது.
தமிழ்நாடு ஆளுநர் R. N. ரவி இப்படியொரு எதிர்மறையான கருத்துகள் உருவாகி வரும் இந்தப் பின்னணியில், 'இந்திய அரசு நடத்திய, மியான்மர், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் நடத்தப்பட்ட சர்ஜிகல் ஸ்டிரைக், ஆப்பரேஷன் ப்ளூ ஸ்டார் பஞ்சாப், ஆப்ரேஷன் தன்டன்வாடே, போன்ற நடவடிக்கைகளில் ஆளுநர் R.N.ரவி-யின் பாத்திரம் முக்கியமானது' என்று ஆளுநர் புகழ்பாடும் வகையில் பாஜக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.
உண்மை என்ன?
பரப்பப்படும் செய்திகள் சொல்லப்பட்டுள்ள சம்பவங்கள் குறித்த உண்மை தகவல்களை இணையத்தில் தேடிய போது இது சம்பந்தமாக சில செய்திக் கட்டுரைகளை காணமுடிந்தது.
கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய சிறப்புப் படை surgical strike நடத்தியது. 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா தரப்பில் இந்த surgical strike தாக்குதல் நடத்தப்பட்டதாக 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான 'Economic and Political Weekly' கட்டுரை குறிப்பிடுகிறது.
மியான்மர் நாட்டின் எல்லையில் ஊடுருவி இந்திய இராணுவம் நடத்திய surgical strike 2015ஆம் ஆண்டு ஜீன் மாதத்தில் ஜெனரல் பிபின் ராவத் வழிகாட்டுதலில் நடத்தப்பட்டதாக 'The Hindu' செய்தித்தளத்தில் வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'ஆப்பரேஷன் புளு ஸ்டார்' என்பது ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே தலைமையில் பஞ்சாப் பொற் கோவிலில் இருந்து ஆயுத குழுவை (militants) வெளியேற்ற இந்திய இராணுவத்தால் நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இது 1984ஆம் ஆண்டு ஜீலை மாதம் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது நடத்தப்பட்டது.
2010ஆம் ஆண்டு ஏப்ரல் 6 அன்று 'ஆப்பரேஷன் தண்டேவாடா' என்ற நடவடிக்கையில் CRPF-ன் 62வது பட்டாலியன் ஈடுபட்டிருந்த போது அவர்கள் மீது நக்சலைட்கள் தாக்குதல் நடத்தினர். இதுபற்றி கருத்து தெரிவித்த
ஒன்றிய உள்துறை செயலாளர் G.K.பிள்ளை இந்த 'ஆப்பரேஷன் தண்டேவாடா' நடவடிக்கை என்பது நக்சலைட்களை எதிர்கொள்வதற்காக இந்திய அரசு செயல்படுத்தி வரும் 'பசுமை வேட்டை (Operation Green Hunt)' என்ற நடவடிக்கையின் அங்கம் அல்ல என்று கருத்து தெரிவித்தார்.

ஆனால் கவர்னர் மாளிகையின் அதிகாரப்பூர்வ இணையத்தில் உள்ள தகவலின்படி R.N. ரவி 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தான் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும் இதற்கு முன்னதாக அவர் Intelligence Bureau (IB) என்ற ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உளவு அமைப்பில் இருந்தார் என்றும் ஜம்மு & காஷ்மீர், வடகிழக்கு மற்றும் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இந்த உளவு அமைப்பு சார்ப்பாக வேலை செய்தார் என்றும் தான் இந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உளவு அமைப்பை நேரடியான இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை. மேலும் இந்த Intelligence Bureau (IB) என்ற அமைப்பு RAW அமைப்பிலிருந்து வேறுபட்டது. இரண்டிற்கும் சம்பந்தம் இல்லை.
இதிலிருந்து மேற்கூறிய சம்பவங்களுக்கும் R.N. ரவி-க்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது தெளிவாகிறது. ஆளுநர் R.N.ரவியை பற்றி மக்கள் மத்தியில் உயர்வான பிம்பத்தை கட்டமைக்க இதுபோன்ற பொய் தகவல்கள் பாஜக ஆதரவாளர்களால் பரப்பப்படுகிறது .
முடிவு:
உச்ச நீதிமன்ற விசாரணையின் காரணமாக ஆளுநர் R.N. ரவி பற்றி எதிர்மறையான செய்திகள் வருவதை மறைத்து, அவரைப் பற்றிய நேர்மறையான பிம்பத்தை கட்டமைக்க பாஜக ஆதரவாளர்களால் இது போன்ற தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.