யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2023- 24ஆம் கல்வியாண்டிலிருந்து அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு NEET, JEE போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை அரசு நடத்தி வருகிறது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
‘Rednool Nangai’ என்னும் யூட்யூப் தளம் நடத்திய விவாத நிகழ்ச்சியில் பேசிய ரஞ்சனா நாச்சியார், “நீட் தேர்வு குறித்து திமுக மேல் முறையீடு செய்து நீட் தேர்வை ரத்து செய்தால் நல்லது தான். ஆனால் அவ்வாறு நீட் தேர்வை ரத்து செய்யமுடியாது. நீட் தேர்வை ரத்து செய்ய முடியாத பட்சத்தில், ஏன் மாணவர்களுக்கு இலவசமாக நீட் பயற்சி மையங்களை திமுக அரசு அமைக்கவில்லை?தனியார் நீட் பயிற்சி மையத்தில் படிக்க அதிக கட்டணம் வாங்கப்படுகிறது. அதனால் ஏன் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் மையங்களை நடத்தக்கூடாது?” என்று பேசினார். இந்த ரஞ்சனா நாச்சியார் என்பவர் நீண்டகாலமாக பாஜகவில் இருந்தவர். சமீபத்தில் பாஜகவிலிருந்து விலகி தவெக கட்சியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
ஏன் நீட் தேர்வுக்கு அரசாங்கம் இலவச கோச்சிங் சென்டர்ஸ் போடல!? @RanjanaNachiyar 💥 pic.twitter.com/upW10kSCgD
உண்மை என்ன?
அரசு நீட் பயிற்சி வகுப்புகள் நடத்துவது குறித்த தகவல்களை தேடினோம். ‘ABP நாடு’ செய்தித்தளத்தில் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.

அதில், ’2023- 24ஆம் கல்வியாண்டிலே அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு NEET போட்டித் தேர்விற்கு பயிற்சி அளிப்பது தொடர்பாக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, NEET, JEE போன்ற போட்டித் தேர்வுகள் எழுத விருப்பமுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் பள்ளியிலேயே ஆசிரியர்களைக் கொண்டு முதன்மைக் கல்வி அலுவலர் மேற்பார்வையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருதாக தெரிகிறது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இந்த பயிற்சி அவர்கள் படிக்கும் பள்ளியிலே அளிக்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு முடித்த பின்னர், மாவட்ட அளவில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கல்வி மாவட்டத்திற்கு அதிகபட்சம் இரண்டு பயிற்சி மையங்களும், ஒரு மையத்திற்கு 40 மாணவர்கள் என்ற அளவில் அமைக்கப்படும் என்றும்; மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம் என்றும் பள்ளிக்கல்வித் துறை குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், ’DT NEXT’ செய்தித்தளத்தில் வெளியான செய்தியின்படி, ’மேற்கூறிய இலவச பயிற்சி வகுப்புகளுக்காக 2023-24 கல்வியாண்டில் மட்டுமே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட 11 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பதிவு செய்தனர் என்று பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது. நீட் பயிற்சிக்காக 46,216 மாணவர்களும், JEE பயிற்சிக்காக 29,279 மாணவர்களும், இந்த இரண்டு போட்டித் தேர்வுகளுக்கும் படிக்கும் 31,730 மாணவர்களையும் சேர்த்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்திருப்பதாக’ அறியமுடிகிறது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, 2023- 24ஆம் கல்வியாண்டிலிருந்து அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு NEET, JEE போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி பள்ளிக்கல்வித் துறை சார்பாக அளிக்கப்பட்டு வருவதை தெரிந்துகொள்ள முடிகிறது.
முடிவு:
2023- 24ஆம் கல்வியாண்டிலிருந்து அரசு பள்ளிகளில் நீட் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடந்து வருவது தெரியாமல், நீட் தேர்வும் எழுதும் மாணவர்களுக்காக பயிற்சி மையங்கள் எதையும் அரசு தொடங்கவில்லை என்று ரஞ்சனா நாச்சியார் தவறான தகவலை பரப்புகிறார்.