யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மோடி ஆட்சியிக்கு வந்த பின்னர் பல வகுப்புவாத கலவரங்கள் நடந்துள்ளது என பாஜகவைச் சேர்ந்த இணை அமைச்சரே நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார்.
பரவிய செய்தி
2014-க்கு முன்னர் இந்தியா முழுவதும் எல்லா இடங்களிலும் கலவரங்கள் நடந்தது. 2014ல் மோடி ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு இந்தியாவில் கலவரங்களே இல்லை - ரங்கராஜ் பாண்டே

விரிவான விளக்கம்
கடந்த செப்டம்பர் 17ஆம் தேதியன்று மோடி பிறந்தநாள் விழாவில் பேசிய ரங்கராஜ் பாண்டே, “2014-க்கு முன்னர் வரை இந்தியா முழுவதும் எல்லா இடங்களிலும் கலவரங்கள் நடந்தது. ஆனால், 2014ல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் கலவரங்களே இல்லை” என்று கூறினார்.
“2014-க்குப் பிறகு இந்தியாவில் கலவரங்களே இல்லையே.. அது ஏன் என ஏன் யாரும் யோசிப்பதில்லை? இஸ்லாமிய பெண்களுக்காக பிரதமர் செய்தவை...” - பெண்கள் விடுதலைக்கு பெரியார் செய்தது Vs பிரதமர் மோடி செய்தது என ஒப்பீடு செய்து பேசிய ரங்கராஜ் பாண்டே#BJP | #RangarajPandey | #NarendraModi pic.twitter.com/mjsfDi2YHF
உண்மை என்ன?
கடந்த 2014ஆம் ஆண்டு மோடி தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்து இந்தியாவில் ஏதேனும் கலவரங்கள் நடந்துள்ளதாக என்று இணையத்தில் தேடினோம். ’Hindustan Times’ செய்தித்தளத்தில் 2022 மார்ச் மாதம் வெளியான ஒரு செய்தியில், ‘2016 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் மட்டுமே இந்தியாவில் 3,399 வகுப்புவாத அல்லது மதவாத கலவரங்கள் ஏற்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந் ராய் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் (NCRB) அளித்துள்ள அறிக்கைகளின் படி, 2020ஆம் ஆண்டு 857 கலவரங்களும், 2019ஆம் ஆண்டு 438 கலவரங்களும், 2018ஆம் ஆண்டில் 512 கவவரங்களும், 2017ஆம் ஆண்டு 723 கவவரங்களும், 2016ஆம் ஆண்டு 869 கலவரங்களும் நடந்துள்ளதாக இணை அமைச்சர் நித்தியானந் ராய் குறிப்பிட்டார்.
மேலும் கூடுதலாக 2020ஆம் ஆண்டில் 51,606 கலவரங்களும், 2019ல் 45,985 கலவரங்களும், 2018ல் 57,828 கலவரங்களும், 2017ல் 58,880 கலவரங்களும், 2016ல் 61,974 கலவரங்களும் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பசுவின் பெயரில் நடக்கும் கும்பல் கொலைகள் பற்றிய தனியான தரவுகள் NCRB-ல் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் 2022 ஜூன் மாதம் ஜக்கி வாசுதேவ் ANI செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தபோது, 'கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மதக்கலவரங்கள் நிகழ்ந்ததாக நான் கேள்விபடவே இல்லை’ என்று கூறினார். அப்போது மேலே இணை அமைச்சர் நித்தியானந் ராய் கொடுத்துள்ள தகவலின் அடிப்படையில் ஜக்கி வாசுதேவ் கூறுவது பொய்யான தகவல் என்று ’You Turn’ தளத்தில் அம்பலப்படுத்தியிருந்தோம்.

மேலும் தேடியதில் ‘THE NEW INDIAN EXPRESS’ வெளியிட்டுள்ள செய்தியின் படி, ’Centre for Study of Society and Secularism (CSSS)’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டில் வகுப்புவாத வன்முறைகள் 84% அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, மோடி தலைமையில் பாஜக ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்த பிறகு பல வகுப்புவாத கலவரங்கள் நடைபெற்றிருப்பதை தெளிவாக அறிகிறோம்.
முடிவு:
மோடி ஆட்சியிக்கு வந்த பின்னர் பல வகுப்புவாத கலவரங்கள் நடந்துள்ளது என பாஜகவைச் சேர்ந்த ஒன்றிய இணை அமைச்சரே நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ள நிலையில், மோடி ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு இந்தியாவில் கலவரங்களே இல்லை என்று ரங்கராஜ் பாண்டே அப்பட்டமாக பொய்யான தகவலை மேடையில் பேசிகிறார்.