யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மற்ற நாடுகளைப் போல் இந்தியாவிற்கும் ’Reciprocal Tariffs’ விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக அறிவித்திருப்பதை மறைத்து இந்தியா விதிவிலக்காக அணுகப்படுவதாக பொய்யான தகவலை பேசுகிறார் பாண்டே.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
சமீபத்தில், டிரம்ப் முன்னால் பிரதமர் நரேந்திர மோடி கைவிலங்கோடு இருக்கும் கேலிச்சித்திரத்தை வெளியிட்டதற்காக 'விகடன்' இணையதளம் முடக்கப்பட்டது. இது பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் பத்திரிகை சுதந்திரத்தை மறுப்பதாகக் கூறி, இந்த 'விகடன்' இணையதளம் முடக்கத்தைக் கண்டித்து நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்தது. இதனை மையமாகக் கொண்டு ரங்கராஜ் பாண்டே அளித்த நேர்காணல் ஒன்று சாணக்யா யூட்யூப் தளத்தில் வெளியாகியுள்ளது.
அதில் ‘ஏற்றுமதி இறக்குமதி கட்டணங்கள் (Tariffs) விஷயத்தில் அமெரிக்க அரசு கனடா, பனாமா போன்ற மற்ற நாடுகளைக் கடுமையாக அணுகுகிறது. ஆனால் இந்தியாவிடம் அது பற்றி விவாதிப்போம் என்று மிகத் தன்மையாக மரியாதையாக அணுகுகிறது. இது உலகளாவிய அளவில் இந்தியாவின் மரியாதை உச்சத்தைத் தொட்டிருப்பதைக் காட்டுகிறது’ என்று ரங்கராஜ் பாண்டே பேசுகிறார்.
ரங்கராஜ் பாண்டே பேச்சின் சிறுபகுதியை வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரப்புகிறார்கள்.
உண்மை என்ன:
டொனால்ட் டிரம்ப் இரண்டாம் முறையாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுக் கொண்டதும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவரை வாஷிங்டன் நகரத்தில் சந்தித்துப் பேசினார். பிரதமர் மோடியும் அதிபர் டிரம்பும் இருதரப்பு பேச்சு வார்த்தையைத் தொடங்கவிருக்கும் சில நேரத்திற்கு முன்பு, “அமெரிக்காவிடம் எந்த நாடுகள் எவ்வளவு வரி வசூலிக்கிறதோ, நாங்கள் அவர்களிடம் அவ்வளவு வசூலிப்போம்” என்று டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.

’FOX News’ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், மோடியிடம் இதுபற்றி ஏற்கனவே பேசியதாகத் தெரிவித்தார் டிரம்ப். ’இந்தியா அமெரிக்கப் பொருட்களுக்கு அதிகமாக இறக்குமதி கட்டணங்கள் விதிக்கிறது. அதனால் இனிமேல் இந்தியா எவ்வளவு கட்டணங்கள் விதிக்கிறதோ அதே கட்டங்களை அமெரிக்காவும் இந்தியப் பொருட்களின் மீது விதிக்கும்’ என்று தான் நரேந்திர மோடியிடம் தான் வெளிப்படையாகப் பேசியதாக டிரம்ப் அந்த பேட்டியில் கூறினார்.

பிரதமர் மோடி அமெரிக்காவில் டிரம்பை சந்தித்துவிட்டு வந்த சில நாட்களிலே அதிபர் டிரம்ப் மீண்டும் இந்த அறிவிப்பை வெளியிட்டார். 'நாம் வெகு விரைவில் பரஸ்பர வணிகக் கட்டணங்களை (Reciprocal Tariffs) விதிக்க இருக்கிறோம். அவர்கள் நமக்குக் கட்டணம் விதிக்கிறார்கள். நாம் அவர்களுக்குக் கட்டணம் விதிக்கிறோம். எந்த நிறுவனமாக இருந்தாலும், இந்தியா சீனா போன்ற எந்த நாடுகளாக இருந்தாலும், நாம் நியாயமான கட்டணங்கள் விதிக்க வேண்டும். அதனால் அவர்கள் நம் மீது விதக்கும் அதே கட்டணத்தைத் திரும்ப அவர்கள் மீது விதிப்போம்" என்று இந்தியா மீது பரஸ்பர வணிகக் கட்டணங்களை என்று சொல்லப்படும் ’Reciprocal Tariffs’ விதிப்பது பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியுள்ளார்.

மேலும், மோடி டிரம்பை வெள்ளை மாளிகையில் பிப்ரவரி 13ஆம் தேதி சந்திப்பதற்கு முன்பே அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வணிகக் கட்டணங்களை (Reciprocal Tariffs) தவிர்ப்பதற்காக 30 பொருட்களுக்கான இறக்குமதி கட்டணங்களைக் குறைப்பது பற்றி ஆலோசித்தது இந்திய அரசு. இவ்வாறு அமெரிக்காவுடனான வர்த்தக மோதலை தவிர்ப்பதற்கு இந்தியா இறக்குமதி கட்டணங்களைக் குறைத்திருக்கிறது.
மேற்கூறிய செய்திகளிலிருந்து ’இந்தியாவிற்கு மோடியால் உலகளவில் சிறப்பான சலுகைகள் ஏதும் வழங்கப்படவில்லை. டிரம்ப் நிர்வாகம் மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவையும் நடத்துகிறது’ என்பதைத் தெரிந்துகொள்கிறோம்.
முடிவு:
மற்ற நாடுகளைப் போல் இந்தியாவிற்கும் ’Reciprocal Tariffs’ விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக அறிவித்ததை மறைத்து, இந்தியாவை அமெரிக்கா விதிவிலக்காக அணுகுவதாகவும் இந்தியாவின் மரியாதை உலக அளவில் உச்சத்தில் இருப்பதாகவும் தவறான தகவலை பாண்டே கூறுகிறார்.
