YouTurn

'எங்களுக்கு ஓட்டு போடாதவர்களுக்கு ஏன் நிதி ஒதுக்கவேண்டும்' என்று கூறினாரா நிர்மலா சீதாராமன்?

'எங்களுக்கு ஓட்டு போடாதவர்களுக்கு ஏன் நிதி ஒதுக்கவேண்டும்' என்று கூறினாரா நிர்மலா சீதாராமன்?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தமிழ்நாட்டிற்கு ஏன் நிதி ஒதுக்க வேண்டும்? என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாகக் கூறி புதிய தலைமுறையின் நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

பரவிய செய்தி

தமிழ்நாட்டிற்கு ஏன் நிதி ஒதுக்க வேண்டும்? தமிழ்நாட்டு மக்கள் எங்களை 40 தொகுதிகளிலும் தோற்கடித்ததால்தான் இந்த பட்ஜெட்டில் நாங்கள் அவர்களுக்கு நிதி ஒதுக்கவில்லை. எங்களுக்கு ஓட்டுப் போடாதவர்களுக்கு நாங்கள் ஏன் நிதி ஒதுக்க வேண்டும்? - ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

X Link | Archive Link

விரிவான விளக்கம்

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஜூலை 23 அன்று 2024-2025 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு மட்டும் சிறப்பு திட்டங்களை அவர் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு ஏன் நிதி ஒதுக்க வேண்டும்? தமிழ்நாட்டு மக்கள் எங்களை 40 தொகுதிகளிலும் தோற்கடித்ததால்தான் இந்த பட்ஜெட்டில் நாங்கள் அவர்களுக்கு நிதி ஒதுக்கவில்லை. எங்களுக்கு ஓட்டுப் போடாதவர்களுக்கு நாங்கள் ஏன் நிதி ஒதுக்க வேண்டும்? என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாகக் கூறி புதிய தலைமுறையின் நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

உண்மை என்ன?

பரவி வரும் நியூஸ்கார்டில் குறிப்பிட்டுள்ளவாறு நிர்மலா சீதாராமன், எங்களுக்கு ஓட்டு போடாதவர்களுக்கு ஏன் நிதி ஒதுக்கவேண்டும் என்பது குறித்து ஏதாவது கூறியுள்ளாரா என்பது குறித்து ஆய்வுசெய்து பார்த்தோம். 

எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை” - பட்ஜெட் குறித்த விமர்சனங்களுக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம்' என்ற தலைப்பில் நேற்று (ஜூலை 26) 'இந்து தமிழ் திசை' இதுகுறித்து செய்தி வெளியிட்டிருந்தது. 

அதில், “மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட பாஜக ஆளாத மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த விமர்சனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். இது குறித்து பேட்டி ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது: “கடந்த காலங்களைப் போன்றே அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை. ஆந்திர மறுசீரமைப்பு சட்டத்தின் அடிப்படையில் அம்மாநிலம் தனது தலைநகரை கட்டமைக்கவும், பின்தங்கிய பகுதிகளை மேம்படுத்தவும் மத்திய அரசின் ஆதரவு தேவை.

மேலும் பட்ஜெட் எளிமையாக இருக்க வேண்டும், சொல்வதை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் மொழி எளிமையாக இருக்க வேண்டும் என்பது பிரதமரின் ஆசை. ஆனால் ஒவ்வொரு பட்ஜெட்டும் அதன் உள்ளடக்கங்களுக்கு ஒரு சவாலாக இருக்கிறது“ என்றும் அதில் அவர் கூறியுள்ளதைக் காணமுடிந்தது. 

இதுகுறித்து பேசும்போது எந்த இடத்திலும், “தமிழ்நாட்டிற்கு ஏன் நிதி ஒதுக்க வேண்டும்? தமிழ்நாட்டு மக்கள் எங்களை 40 தொகுதிகளிலும் தோற்கடித்ததால்தான் இந்த பட்ஜெட்டில் நாங்கள் அவர்களுக்கு நிதி ஒதுக்கவில்லை” என்றோ,  “எங்களுக்கு ஓட்டுப் போடாதவர்களுக்கு நாங்கள் ஏன் நிதி ஒதுக்க வேண்டும்?” என்றோ அவர் கூறவில்லை என்பதை இதுகுறித்து சன்சத் டிவி யூடியூப் பககத்தில் அவர் பேசியுள்ள உரை குறித்து வெளியிடப்பட்டுள்ள வீடியோ மூலம் உறுதிசெய்ய முடிந்தது. 


மேலும் புதிய தலைமுறையின் சமூக ஊடகப்பக்கங்களில் ஆய்வுசெய்து பார்த்ததில், “தமிழ்நாட்டுக்கு ஏன் நிதி ஒதுக்க வேண்டும்? “ என்ற தலைப்பில் அவர்கள் எந்த நியூஸ்கார்டையும் வெளியிடவில்லை என்பதை அறியமுடிந்தது. 

இதுதவிர, “இது எங்கள் டீலிங் பட்ஜெட்” என்றும், “பாஜக கூட்டணிக்கான பட்ஜெட்” என்றும், “பாரபட்சம் இல்லாத பட்ஜெட்” என்றும் ஒன்றிய பட்ஜெட் குறித்து நிர்மாலா சீதாராமன் கூறியதாகக் கூறி, மேலும் சில நியூஸ் கார்டுகளும் புதிய தலைமுறை வெளியிட்டதாகக் கூறி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. 

“அவை அனைத்தும் போலியானவை,  இந்த செய்திகளை நாங்கள் வெளியிடவில்லை” என்று குறிப்பிட்டு, புதியதலைமுறை தனது பக்கத்தில் இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளதையும் காணமுடிகிறது.

முடிவு:

நம் தேடலில், எங்களுக்கு ஓட்டு போடாதவர்களுக்கு ஏன் நிதி ஒதுக்கவேண்டும் என்று நிர்மலா சீதாராமன் கூறியதாகப் பரவி வரும் நியூஸ் கார்டு போலியானது என்பதை அறியமுடிகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க