யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
காவல்நிலையத்தில் புகார்கொடுக்க ஆவணங்கள் எதுவும் கட்டாயமில்லை. மேலும் தற்போது புதிய குற்றவியல் சட்டங்கள் (BNSS) நடைமுறைக்கு வந்ததையடுத்து, காவல்நிலையத்திற்கு சென்றும், WhatsApp / Email போன்ற மின்னணு முறையிலும் புகார் கொடுக்க முடியும். புகார் பதிவு செய்யும் போது சம்பவ விவரம், தேதி/இடம், மொபைல் எண் போன்ற தகவல்களை சரியாக நிரப்ப வேண்டியது மட்டுமே அவசியம்.
பரவிய செய்தி
இனி காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வருபவர்கள் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை பாஸ்போர்ட் மற்றும் பான் கார்டு இவற்றின் ஏதாவது ஒன்றின் நகலுடன் செல்போன் நம்பரும் கட்டாயம் கொடுக்க வேண்டும். - காவல்துறை உத்தரவு.

விரிவான விளக்கம்
ஜனவரி 24, 2026 முதல் காவல் நிலையத்திற்கு புகார் அளிப்பதற்கு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், புகார் கொடுக்க வருபவர்கள் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் மற்றும் பான் கார்டு இவற்றின் ஏதாவது ஒன்றின் நகலுடன் செல்போன் நம்பரும் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்றும் காவல்துறை உத்தரவிட்டுள்ளதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
இனி காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வருபவர்கள் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை பாஸ்போர்ட் மற்றும் பான் கார்டு இவற்றின் ஏதாவது ஒன்றின் நகலுடன் செல்போன் நம்பரும் கட்டாயம் கொடுக்க வேண்டும். - காவல்துறை உத்தரவு. pic.twitter.com/O1fq8m3wfA
உண்மை என்ன?
முதலில் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கும் வழிமுறைகள் குறித்து தேடினோம். அப்போது Times Of India ஊடகத்தில், ”Under BNS, FIR anywhere, 14-day rider and WhatsApp complaints” என்ற தலைப்பில் ஜூலை 3, 2024 அன்று ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதில் புதிய குற்றவியல் சட்டங்கள் (BNSS) நடைமுறைக்கு வந்ததையடுத்து, காவல்நிலையத்திற்கு சென்றும், WhatsApp / Email போன்ற மின்னணு முறையிலும் புகார் கொடுக்க முடியும். புகார் பதிவு செய்யும் போது சம்பவ விவரம், தேதி/இடம், மொபைல் எண் போன்ற தகவல்களை சரியாக நிரப்ப வேண்டியது மட்டுமே அவசியம். புகார் கொடுக்கப்பட்டப்பின்பு காவல்துறையினருக்கு விவரங்கள் தேவைப்பட்டால், கையொப்பம் உள்ளிட்ட மற்ற விவரங்களைப் பெறலாம் என்று காவல்துறையினருக்கு வழிகாட்டல் கொடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து வைரலாகும் பதிவில் ஜனவரி 24, 2026 முதல் அமல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. உண்மை என்றால் இன்றைய தேதிக்கு அமல்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணி, தமிழ்நாடு காவல்துறையின் இணையதளப்பக்கத்தை ஆய்வு செய்தோம். அதில் Register Online Complaint என்ற பக்கத்தை கிளிக் செய்து, புகார் அளிக்கும் முறை குறித்து பார்த்தோம். அப்போது பெயர், பிறந்த தேதி, முகவரி, என்ன சம்பவம், நிகழ்ந்த தேதி, நிகழ்ந்த இடம் ஆகியவற்றை மட்டுமே கேட்கப்பட்டிருந்தது. அதில் எங்கும் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை என்று எதுவும் கேட்கப்படவில்லை.

முடிவு:
நம் தேடலில், காவல் நிலையத்தில் புகார்கொடுக்க ஆவணங்கள் எதுவும் கட்டாயமில்லை. எனவே 24.01.2026 முதல் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வருபவர்கள் ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, Passport மற்றும் PAN கார்டு இவற்றில் ஏதாவது ஒன்றின் நகலுடன், செல்போன் நம்பரும் கட்டாயம் கொடுக்க வேண்டும் எனக் கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை என்று உறுதியானது.