யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
நுரையீரல் தொற்று காரணமாக வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவருடைய மகனும், Bangladesh Nationalist Party கட்சித்தலைவருமான தாரிக் ரஹ்மான் தனது எக்ஸ் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
கடந்த ஆண்டு வங்கதேசத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையை தொடர்ந்து அங்கு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். தற்போது வங்கதேசத்தில் இடைக்கால அரசு நடந்து வருகிறது. இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறார்.மேலும் ஷேக் ஹசீனா மீது பல்வேறு ஊழல், முறைகேடு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் அடுத்தடுத்து நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் உடல் நிலை கவலைக்கிடமென தகவல் வந்துள்ளதாகவும், நுரையீரல் தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவருக்கு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் பாலிமர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
#NEWSUPDATE || ஷேக் ஹசீனாவின் உடல் நிலை கவலைக்கிடம் | #SheikhHasina | #Bangladesh | #PolimerNews pic.twitter.com/qihoGoowbS
உண்மை என்ன?
பரவி வரும் இந்த செய்தி குறித்து ஷேக் ஹசீனா உடல் கவலைகிடம் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி கூகுளில் தேடினோம். அப்போது வங்கதேச ஊடகமான Dhaka Tribune ஊடகத்தில் "Khaleda Zia in critical condition" என்ற தலைப்பில் நவம்பர் 30 அன்று வெளியான ஒரு செய்தியை பார்க்கமுடிந்தது. அதில் டாக்காவில் உள்ள Evercare மருத்துவமனையில்,முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து மேலும் தேடிய போது, Aljazeera ஊடகத்தில் "Bangladesh’s Khaleda Zia hospitalised in ‘very critical’ condition" என்ற தலைப்பில் இது குறித்து செய்தி வெளியாகியிருந்தது. அதில் வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா நுரையீரல் தொற்று காரணமாக மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாவும், அவரது குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், அவருடைய மகனும், Bangladesh Nationalist Party கட்சித்தலைவருமான தாரிக் ரஹ்மான், தனது தாயார் கலிதா ஜியோ உடல்நிலை குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் பேகம் கலீதா ஜியா, உடல்நிலை மிகவும் மோசமாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மருத்துவக் குழு மிக உயர்ந்த தொழில்முறை மற்றும் சேவையை மிகுந்த நேர்மையுடன் வழங்கி வருவதாகவும், கலீதா ஜியா மீது காட்டப்படும் உண்மையான பிரார்த்தனைகள் மற்றும் அன்புக்கு அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் பதிவிட்டிருந்தார்.
முடிவு:
வங்கதேசத்தில் கடந்த 1991-1996 மற்றும் 2001-2006 ஆகிய காலகட்டங்களில் பிரதமராக பதவி வகித்தவர் கலிதா ஜியா. இந்நிலையில், இவருக்கு பதிலாக கடந்த ஆண்டு வங்க தேசத்தில் நடைபெற்ற வன்முறையைத் தொடர்ந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்த ஷேக் ஹசீனா மருத்துவமனையில் இருப்பதாக பாலிமர் ஊடகம் தவறாக செய்தி வெளியிட்டுள்ளது.
