யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இவை ஒடிசா ரயில் விபத்து மற்றும் குஜராத் மோர்பி பால விபத்து ஆகியவற்றின் போது எடுக்கப்பட்டவை. வெவ்வேறு சம்பவங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒன்றாக சேர்த்து, நேற்று ஒரே நாளில் எடுக்கப்பட்டதாகக் கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
உலகையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் இதுவரை 274 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஸ்வாஷ் குமார் ரமேஷ் என்ற ஒரு பயணி மட்டும் காயங்களுடன் அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனையடுத்து அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த பகுதியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஜூன் 13) காலை நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும், அவர் வெவ்வேறு ஆடைகளில் வந்து அங்கு ஆய்வு மேற்கொண்டதாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
புகைப்படத்தில், பிரதமர் மோடி விதவிதமான ஆடைகளில் ஆய்வு மேற்கொள்வதைப் போன்று காட்டப்பட்டுள்ளதையும் தெளிவாகக் காண முடிகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படங்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இவை வெவ்வேறு சம்பவங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்பதை அறிய முடிந்தது.
முதல் புகைப்படம் மற்றும் உடைந்து கிடக்கும் விமானத்தை பார்ப்பது போன்று உள்ள மூன்றாவது புகைப்படம் ஆகியவை மட்டும் தான், பிரதமர் மோடி அகமதாபாத் விமான விபத்துப் பகுதியை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டபோது எடுக்கப்பட்டவை என்பதை செய்தியின் மூலம் அறிய முடிகிறது.
இரண்டாவது இருக்கும் புகைப்படம், கடந்த 2022-ல் குஜராத்தின் மோர்பி நகரில் உள்ள பாலம் இடிந்து, நூற்றுக்கும் மேற்போட்டோர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து அவர் ஆய்வு மேற்கொண்டபோது எடுக்கப்பட்டது. இதை “BBC” வெளியிட்ட செய்தியின் மூலம் உறுதிபடுத்த முடிகிறது.
இதே போன்று, இறுதியாக உள்ள புகைப்படம், கடந்த 2023-ல் ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்பட்டதையடுத்து பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டபோது எடுக்கப்பட்டது.
இந்நிலையில் வெவ்வேறு சம்பவங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட பழைய புகைப்படங்களை ஒன்றாக இணைத்து, நேற்று ஒரே நாளில் மட்டும் அவர் வெவ்வேறு ஆடைகளில் வந்து அகமதாபாத்தில் ஆய்வு மேற்கொண்டதாகக் கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், அகமதாபாத்தில் வெவ்வேறு ஆடைகளில் வந்து ஆய்வு செய்த பிரதமர் நரேந்திர மோடி என்று கூறி பரவும் புகைப்படங்கள் தவறானவை என்பது உறுதியாகிறது.